நுழைவாயில்
நேதாஜி
சுபாஷ் சந்திர போஸை வங்கம் தந்த சிங்கம் என்பார்கள்.
அவரைத் தந்தது வங்கம் என்றாலும், அவர் பாரதத்துக்கே
சொந்தம். அவரது புற வாழ்க்கை சாகசங்களும் மர்மமும்
நிறைந்ததுதான். ஆனால், அவரது அக வெளியில் நிறைந்திருந்தது
அரவிந்தரும் விவேகானந்தரும் தந்த ஆன்மீக அமைதி.
ஓர் ஆசிரியர் அவரைத் தொப்பி அணிந்த துறவி என்று
வருணித்தது பொருத்தமே. எளியவர்க்கு இரங்கும் குணமும்,
“போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர்
தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தை என் உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்”
என்ற கண்ணதாசன் கவிதை வரிகளுக்கு இலக்கியமான அச்சமின்மையும்
அவரோடு கூடப் பிறந்தவை.
அவரது வாழ்க்கை இந்திய
சுதந்திரப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்ததுதான்.
எனினும், தமது மெய்த்துணிவு காரணமாக, பிரதான நீரோட்டத்திலிருந்து
பிரிந்து சென்று தமக்கென்று ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொண்டு,
தலைமை தாங்கி நடத்தத் துணிந்த காவிய நாயகன் நம்
நேதாஜி.
பரபரப்பான அவரது வாழ்க்கை
படிக்கப் படிக்கச் சுவை குன்றாதது. இந்தப் படைப்பில்
அவரது வரலாற்றினைக் கதை போலச் சொல்லுவதுடன் நில்லாமல்,
கடிதங்கள், உரைகள், உரையாடல்கள், மற்றும் முற்றுப்பெறாத
அவரது சுய சரிதை மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும்
அவரது ஆழ்ந்த மனச் சிந்தனைகளையும் கொண்டு வர முயல்கிறோம்.
அது மட்டும் இல்லாமல், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில்
நிகழ்ந்த சுதந்திரப் போராட்ட விவரங்களையும் ஓரளவு
கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.
சுக்கைப்போல, மிளகைப்
போல, சும்மா பெறவில்லை நாம் இந்த சுதந்திரத்தை என்ற
பிரக்ஞையையும், நாட்டின் மேன்மைக்காக எந்தத் தியாகத்தையும்
மேற்கொள்ளும் துணிவையும் இளைஞர்கள் மத்தியில் ஓரளவாவது
சிலிர்த்தெழ வைக்க முடியுமானால் இந்த வீர வரலாற்றை
எழுத முனைந்தது பயனுள்ளது என்றே கருதுவோம்.
பிறப்பும் குடும்பப்
பின்னணியும்
1897
ஜனவரி 23 சனிக்கிழமை. துந்துபிகள் முழங்கவில்லை.
வீணைத் தந்திகள் தாமாக இசைக்கவில்லை. வானிலிருந்து
ஒரு நட்சத்திரம் கீழிறங்கவில்லை. “வானத்து அமரன்
இங்கு வந்தான்காண்" என்று குதூகலிக்க எந்த அறிகுறியும்
இல்லை. கட்டாக்கைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜானகிநாத
போசுக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவதாகப் பிறந்த
குழந்தையே சுபாஷ் சந்திரன். ஆண் குழந்தைகளில் இவர்
ஆறாவது. அவரது பெற்றோருக்கு மொத்தம் 14 குழந்தைகள்.
குழந்தைகள் அதிகம் என்பது மட்டுமல்லாமல், சித்தப்பா,
மாமா போன்றோர் குடும்பங்களும் இணைந்த கூட்டுக்குடும்பமே
அது. இதைத் தவிர, ஆடு, மாடு, கோழி, குருவி, மயில்,
குதிரை, கீரிப்பிள்ளை எல்லாம் நிறைந்த வசுதைவ குடும்பம்
அவரது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது இவர் குடும்பத்துக்கு
சரியாகவே பொருந்தும். இப்படி இருக்கையில் எப்படி
அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்
கவனம் செலுத்த முடியும்? சுபாஷை முழுக்க முழுக்க
கவனித்துக்கொண்டது சாரதா என்ற ஆயாதான். ராஜா என்று
கூப்பிட்டு அவரை அன்பாகப் பார்த்துக்கொள்வார். இந்த
நிலைமை பற்றி சுபாஷ் என்ன சொல்கிறார்?
“பெற்றோர் என் மீது
அதிக அன்பு காட்ட முடியாமல் போனது அதிருஷ்டமாயிற்று.
என் எதிர்காலத்துக்கு அதுவே நல்ல ஆரம்பமாயிற்று.
இதனால்தான், நான் தூயவனானேன். சமுதாயத்துக்குச்
சோம்பலின்றி உழைக்கும் ஊழியன் ஆனேன் என்றாலும்,
மனம் விட்டுப் பலரோடு கலகலப்பாகப் பழகும் பெரிய
குடும்பத்தில் பிறந்திருந்தும் கூச்ச சுபாவம் என்னை
விட்டு அகலவில்லை” என்று சுபாஷ் கூறிக்கொள்கிறார்.
சுபாஷ் போசின் பரம்பரை
பெருமைப்பட்டுக் கொள்ளத் தக்க பரம்பரையே. அவரது
தாத்தா ஹரநாத போஸ் துர்க்கைக்கு ஆடு வெட்டி பலியிட்டு
திருவிழா நடத்தும் குறிப்பிட்ட வைணவப் பரம்பரையை
சேர்ந்தவராயிருந்தும் அந்தப் பழக்கத்தையே அடியோடு
நிறுத்தியவர். சுபாஷின் தந்தை ஜானகிநாத் வழக்கறிஞர்,
கல்லூரிப் பேராசிரியர் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ராவ் பஹதூர் பட்டம் பெற்றவர்.
1930 ல் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து
அந்தப் பட்டத்தைத் துறந்தார்.
கிராம சேவை, கல்விப்பணி இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு
கொண்டவர். 1921ல் ஒத்துழையாமை இயக்கம் நடந்த போது
காந்தியடிகளின் காதி, தேசிய கல்வித் திட்டம் இவற்றின்
மேம்பாட்டுக்காகத் தமது ஒத்துழைப்பை நல்கினார்.
தமது தாயாரைப் பற்றி சுபாஷ் சொல்வது: “குறிப்பிடத்தக்க
பெண்மணி. உறுதியான மனமும், காரிய சாத்தியமான அனுபவமும்
எவரும் மரியாதை காட்டும் பண்பும் என் தாயிடம் நிரம்பவே
உண்டு.”
ஒரு இந்திய யாத்திரிகனின்
சில சிந்தனைகள்
சுபாஷின் இளமைப்பருவம்
பற்றி நாம் தெரிந்துகொள்ள உதவுவது முற்றுப்பெறாத
அவரது சுய சரிதைதான். இதன் தலைப்பு, “ஒருஇந்திய
யாத்திரிகன்”. இதனைத் தமிழில் சக்திமோஹன் என்பவர்
அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்த சுய சரிதத்தில்
அவர் இந்தியா அடிமைப்பட்டு நிலைகுலைந்து போனதன்
காரணங்களைப்பற்றி சிந்தித்து எழுதியுள்ளார்.
‘பிரிட்டிஷ் ஆட்சி
இந்த நாட்டில் அடியிட்டதன் காரணம் அவர்களது சொந்த
சக்தியோ, சாதுர்யமோ அல்ல. நமது நாட்டுப் பங்காளிகளில்
சிலர் ஒத்துழைத்ததால்தான் அந்த ஆட்சி அமைந்தது என்பதை
யாரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடக்கூடாது.
இப்படித் தனது ஆட்சியை இந்தியாவில் நிறுவிய பிரிட்டன்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் வேறு வேறாக்கி தனது
ஆட்சி வளர வழி ஏற்படுத்திக்கொண்டது. இத்தகைய இழிநிலைக்குக்
காரணம் பிரிட்டனின் சக்தியா, நமது ஆராயும் திறனை
நாம் பயன்படுத்தத் தவறியதா என்பதை ஒவ்வொருவரும்
தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்று
அவர் எழுதுகிறார்.
வங்கப் பிரிவினை
சுபாஷுக்கு எட்டு
வயதே ஆகியிருந்தபோது - 1905 ல் வங்கப் பிரிவினை
காரணமாக, நாட்டில் பெரியதொரு எழுச்சி ஏற்பட்டது.
வங்காளம் அந்தக் காலத்தில் ஒரிஸாவையும் பீஹாரையும்
உள்ளடக்கிய பெரியதொரு மாகாணமாக இருந்தது. திறமையான
நிர்வாக வசதி என்று காரணம் சொல்லி கல்கத்தாவின்
ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு மாநிலங்களைப் பிரிப்பது
என்று வைஸ்ராய் கர்ஸன் பிரபு முடிவு செய்து விட்டார்.
1905 அக்டோபர் 16ம் தேதி இந்தப் பிரிவினை அமலுக்கு
வந்துவிட்டது. கர்ஸன் பிரபு சொன்ன காரணத்தை வங்க
மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கு வங்காளத்தில்
இருந்த முஸ்லிம்களையும், மேற்கு வங்காளத்தில் இருந்த
இந்துக்களையும் பிரிக்க முயல்வதே உள்நோக்கம் என்று
இரு மதத்தினரும் நம்பினார்கள். வங்க மக்களை அடக்கி
ஒடுக்குவதற்கான இந்த முயற்சியைக் கண்டித்து வங்கமே
திரண்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து
கல்கத்தா வீதிகளில் வந்தே மாதரம் என்று கோஷித்தபடி
ஊர்வலம் வந்தார்கள். இந்தியா முழுவதுமே இந்தப் போரில்
கலந்துகொண்டது. 1905 காசி காங்கிரஸுக்குத் தலைமை
வகித்த கோகலே, “தேசிய உணர்ச்சியை நம்மவர்களிடையே
எழுப்ப கர்ஸன் பெரும் உதவி செய்திருக்கிறார்” என்றார்.
இந்த வங்கப் பிரிவினையைப் பற்றி எழுதுகையில் அரசியலில்
ஈடுபடும் ஒருவன் மேற்கொள்ளவேண்டிய நெறிகளைப் பற்றி
சுபாஷ் எழுதிச் சொல்கிறார். “அரசியலுக்குத் தன்னை
அர்ப்பணிக்க வேண்டும் என எண்ணுகிற ஒருவன், முதலில்
தன்னைத் தூய்மைப்படுத்தி எந்தவிதக் கொடுமைகளையும்
தாங்கிக் கொள்கிற சக்தியையும் மனத் திண்மையையும்
திரட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசியலில் அந்த
அளவுக்குப் புனிதத் தன்மை கலந்திருக்கிறது. அரசியலைக்
கடைசி வரை தியாக நோக்கோடு வகிக்க வேண்டுமானால் மனதை
ஒருங்குபடுத்தி போக்கை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கொள்கையை அனுசரிக்க
வேண்டும் என்று விரும்பினால் கடைசிவரை அதையே வழுவாமல்
தொடர வேண்டும். இடையில் ஏற்படும் இன்னல்களுக்காக
கொண்ட கொள்கையை இடையிலே துவள விடக்கூடாது.” சுபாஷ்
தமது பிற்கால வாழ்க்கையில் கைக்கொண்ட செயல்பாடுகள்
அவர் வகுத்துக்கொண்ட நெறிமுறைக்கு ஒத்துவருவதை உரிய
சந்தர்ப்பத்தில் காண்போம்.
(தொடரும்)