<<<<<சென்ற
வாரம்
சத்குருவைத் தேடி
சங்கரர் புனிதத் தலங்களை தரிசித்தவாறு தக்கதொரு குருவைத்தேடி புறப்பட்டார். மாண்டூக்ய , காரிக உபநிஷத்துக்களுக்கு உரை எழுதிய கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத் பாதரை இமயமலையைச் சேர்ந்த பத்ரிகாஸ்ரமத்தில் (பத்ரிநாத்) கண்டு வணங்கி 'ஸ்வாமி, சங்கரன் என்ற பெயர் கொண்ட நான் கேரளத்தைச் சேர்ந்த சிவகுரு என்னும் அந்தணனுடைய மகன். நான் நெருப்பு, நீர், மண்ணால் ஆகிய பஞ்ச பூதத்தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட எல்லா பெயர்களிலும், உருவங்களிலும் உறையும் ஆன்ம ஸ்வரூபம் என்பதை நன்கு அறிவேன். என்னுடைய பௌதீகத் தந்தை என் இளம் வயதிலேயே காலமானார். என் தாயார் என்னை வளர்த்து வேதங்களையும், சாஸ்திரங்களையும் முறையாக கற்பித்தார். முதலை என் காலைப் பற்றிய பொழுது நான் ஆபத் சன்னியாசத்தை ஸ்வீகரித்தேன். தயவு செய்து எனக்கு சன்னியாச தீ¨க்ஷ அளித்து வேதாந்தத்தை முழுமையாக எனக்கு கற்பிப்பீர்' என்றுரைக்கின்றார்.
அவர் சத்திய வாக்கைக் கேட்டு மகிழ்ந்த கோவிந்த பகவத் பாதர் அவரைத் தம் சீடராக ஸ்வீகரித்து துறவறத்தில் உயர்ந்ததும், சிறந்ததுமான 'பரமஹம்ச' சந்நியாச தீ¨க்ஷ அளித்து தாம் தம் குருவிடமிருந்து கற்றவற்றைப் போதித்தார். அவர் வேதங்களின் சாரத்தை பூரணமாக அவருக்கு கற்றுக் கொடுத்தது மாத்திரமின்றி அத்வைத சித்தாந்தத்தை எடுத்துச் சொன்னார். அத்வைத சித்தாந்தத்தில் உலகில் தத்தம் கர்ம வினையினால் தோன்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறை தத்துவம் அல்லது ஆத்ம தத்துவம் ஒன்றே என்பதும், இறைவனும் ஆத்மாவும் ஒன்றே என்றும் கற்பிக்கப்படுகிறது. குருகுலவாசம் முடிந்த பின்னர் சங்கரரை பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொள்ளுமாறு கோவிந்த பகவத் பாதர் பணித்தார். தன்னுடைய குரு கோவிந்த பகவத் பாதரின் மீதும், அவருடைய குரு கௌட பாதர் மீதும் அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்ட சங்கரர் காசி §க்ஷத்திரத்தை நோக்கிப் பயணமானார்.
சங்கரர் பாரத தேசமெங்கும் பயணம் செய்து பல மதத் தலைவர்களை வென்று அத்வைத சித்தாந்தத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்தி முன்னேறினார். அந்நாளில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய எல்லா இடங்களுக்கும் சென்று கற்றோருடன் வாதித்து தன் அறிவுபூர்வமான வாதத் திறமையினால் அவரைத் தம் பால் ஈர்த்துக்கொண்டார். இம்முறையில் வேதாந்த சூத்ரங்களை எழுதிய பட்ட பாஸ்கராவை வென்றார். தண்டிக்கும், மயூராவிற்கும் வேதாந்தத்தைக் கற்பித்தார். அபினவ குப்தா, முராரி மிஸ்ரா, உதயணாசாரியர், தர்ம குப்தர், குமரில , பிரபாகரா போன்ரோரையும் வென்றார். பின்னர் சங்கரர் மஹிஷ்மதியில் கர்மமீமாம்சத்தில் தேர்ந்தவரும், சந்நியாசிகளை வெறுப்பவருமான மண்டன மிஸ்ரர் என்பவரை சந்தித்தார். சங்கரர் அவரைச் சந்திக்கச் சென்றபொழுது அவர் மறைந்த தம் முன்னோருக்கு சிராத்தம் செய்துக் கொண்டிருந்தார். சங்கரரைக் கண்டதும் மண்டன மிஸ்ரர் சினம் கொண்டு தகாத முறையில் பேசத் துவங்கினார். அங்கு மதிய உணவிற்காக குழுமியிருந்த அந்தணர்கள் தலையிட்டு சமாதானப் படுத்தினர். பின்னர் சங்கரர் மண்டன மிஸ்ரரை பொதுவான விவாதத்திற்கு அழைத்தார். ஒப்புக்கொண்ட அவர் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான தம் மனைவி பாரதியை நடுவராகக் கொள்ள சம்மதித்தார். சங்கரர் தோல்வியுற்றால் கிருகஸ்தாஸ்ரமத்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும், மண்டன மிஸ்ரர் தோற்றால் தம் மனைவியிடமிருந்தே காஷாயம் பெற்று சந்நியாசியாக வேண்டும் என்றும் சபையோர் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர். (ஒரு முறை துர்வாசர் படைப்புக்கடவுள் பிரம்மா, அவர் மனைவி சரஸ்வதி முன் திரண்டிருந்த சபையில் வேத பராயணம் செய்து வருகையில் அவர் செய்த ஒரு சிறிய தவற்றிற்கு சரஸ்வதி தேவி சிரித்ததனால் சினந்த துர்வாசரின் சாபம் காரணமாக பூவுலகில் பாரதியாக சரஸ்வதி தேவி அவதரித்ததாக ஒரு வரலாறு உண்டு.). இரவும்,பகலுமாக மண்டன மிஸ்ரருக்கும், சங்கரருக்குமிடையே வாத விவாதம் பதினேழு நாட்களுக்கு தொடர்ந்தது. பாரதி இருவர் கழுத்திலும் அன்றலர்ந்த புஷ்பங்களால் உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை அணிவித்து விட்டு தம் வேலைகளை கவனிக்கத் தொடர்ந்தார். இறுதியில் மண்டன மிஸ்ரர் அணிந்திருந்த மலர்மாலை முதலில் வாடத் துவங்கியது. மண்டன மிஸ்ரர் தம் தோல்வியை ஏற்று காஷாயம் தரித்து சங்கரரின் சீடரானார்.
பாரதி தேவி தம் கணவரின் அர்தாங்கினியான தம்மையும் வென்றால் தான் வெற்றி முழுமை அடையும் என்று கூறினார். முதலில் பெண்ணுடன் விவாதிப்பதா என்று சங்கரர் தயங்கினாலும், பின்னர் அவ்வம்மையார் சங்க கால மகளிரின் புலமையை பல மேற்கோள்களுடன் எடுத்துக்காட்ட சங்கரர் மேலும் பதினேழு நாட்கள் தொடர்ந்து விவாதித்து வெற்றிக் கனியை எட்டும் நிலையில் இருந்தார். அப்பொழுது பாரதி தேவி பிரம்மசாரியான சங்கரரை காம சாஸ்திரத்தைப் பற்றி கேள்வி கேட்டார். சங்கரர் தனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுக்குமாறு அதற்கு தக்க சமாதானம் சொல்வதாகவும் அனுமதியைக் கேட்டுப் பெற்றார்.
தன் சீடர்களுடன் காசிக்கு சென்று அகால மரணமடைந்த அந்நாட்டு மன்னன் அமரூகனின் உடலில் கூடு விட்டு கூடு பாயும் முறையில் பரகாயப்பிரவேசம் செய்தார். அப்பொழுது அவர் தம் உடலை ஒரு பெரிய மரத்தின் பொந்தில் ஒளித்து வைத்து தான் மீண்டும் வரும் வரையில் தம் உடலை கவனமாக பாதுகாக்குமாறு அறிவுறுத்திச் சென்றார். மாண்ட மன்னன் மீண்டெழுந்ததைக் கண்டு வியந்த மக்கள் மகிழ்ந்தனர். மரணத்தின் பிடியிலிருந்து மீண்டெழுந்த மன்னன் எண்ணங்களினாலும், குண நலன்களாலும் மாறுபட்டிருந்ததைக் கண்டு உணர்ந்த ராணிகளும், மந்திரிகளும், அரசனின் உடலில் உறையும் உயிருக்கு உடையவர் ஒரு பெரும் மகானாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து மன்னனை என்றும் தம்முடன் இருத்திக் கொள்ள வேண்டும் என்னும் அவாவினால் தூதுவர்களை சுற்றுப்புற காடுகளிலும், குகைகளிலும் அனுப்பி யோக வல்லுனர் ஒருவரின் உடல் எங்காவது ஒளித்து வைக்கப் பட்டுள்ளதா என்று தேடத் துவங்கினர். சர்வ சக்தி படைத்த மாயையின் வசமான சங்கரர் அரசிகளுடன் கூடி மகிழ்ந்து தாம் வந்த காரியத்தையும் ,தாம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்திருந்தார்.
இதற்கிடையில் குருவைத் தேடி வந்த சீடர்கள் காசியில் மரித்த மன்னர் உயிர் பெற்றெழுந்த அற்புத வரலாற்றைப் பற்றி கேள்வியுற்று அரசவையை அடைந்து மன்னர் முன் சில தத்துவப் பாடல்களைச் சொல்ல சங்கரர் தம் பூர்வாசிரம நினைவு திரும்பப் பெற்றவராக தான் விட்டு வந்த தம் உடலைத் தேடிப் புறப்பட்டார். இதற்கிடையில் அரச தூதுவர்கள் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு எரியூட்டத் துவங்கினர். யோக சக்தியினால் தமக்குரிய உடலுக்குள் பிரவேசித்த சங்கரர் ஸ்ரீ ஹரியை பிரார்த்தித்தவுடன் மழை பெய்து தீ அணைந்தது.. அவர் மீண்டும் மண்டன மிஸ்ரருடைய இல்லத்திற்குச் சென்று பாரதி தேவியின் எல்லாக் கேள்விகளுக்கும் தக்கவாறு பதிலளித்து பூரண வெற்றி பெற்ற பின்னர், மண்டன மிஸ்ரர் தன்னுடைய செல்வமனைத்தையும் சங்கரருக்குக் கொடுக்க சங்கரர் அதை வறியவருக்கும் , தக்கவருக்கும் உரிய முறையில் பகிர்ந்தளித்து விட்டு அவருக்கு சுரேஷ்வராச்சார்யா என்ற பெயரில் சந்நியாச தீ¨க்ஷ அளித்து சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த மடத்திற்கு பீடாதிபதியாக்கினார். பதியைத் தொடர்ந்த பாரதி தேவி சிருங்கேரி சாரதையாக இன்றளவும் அன்பர்களின் இதயத்தில் ஆராத்திய தெய்வமாகக் கொலுவிருக்கிறார்.
சங்கரர் ஏறத்தாழ எழுபத்திரண்டு மதக் கொள்கைகளையும் முறியடித்து காஷ்மீரைச் சென்றடைந்தார். அவருடைய சொற்பொழிவுகளையும், தத்துவ விசாரங்களையும் கேட்டு மகிழ்ந்த மக்கள் அங்கு கலைமகள் சரஸ்வதி தேவிக்கென்று ஒரு கோவிலில் ஸர்வஞ பீடத்தில் சங்கரரை ஒருமனதாக அமர்த்தி தம் நன்றியை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொண்டனர். இது அவருடைய தகுதிக்கு மிக அபூர்வமான ஒரு அங்கீகாரம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த அரும் சாதனையை அவருக்கு முன்னும், பின்னர் வந்த மத போதகர்கள் எவரும் செய்ய இயலவில்லை.
(தொடரும்)