வெற்றி என்பது என்ன?
உங்களிடம் உள்ள சில அபாரமான சக்திகளை
ஒருமுனைப்படுத்தி, இயற்கையின் நியதிகளுக்குட்பட்டு
ஆற்றலுடன் வெளிப்படுத்தி, நீங்கள் விரும்புவது
எதுவானாலும் அதை அடைவதே வெற்றி.
நாம் வெற்றிக்கான வழிகளைப் பேணிக்காத்தால் வெற்றி
நம்மை பேணிக் காக்கும்.
IT
WORKS, IF YOU WORK.
கண் தெரியாது, காது கேட்காது, வாய் பேச முடியாது,
குருடு, செவிடு, ஊமை என இருந்த ஹெலன் கெல்லர் "உலகப்புகழ்"
பெற்றவர் ஆனார். ஆகவே உடல் ஊனம் ஒரு தடையே இல்லை.
அழகின்றி இருப்பது ஒரு தடையில்லை. அழகே இல்லாத,
கல்லூரியில் பயிலாத ஈசாப் ஒரு அடிமையின் மகன். அவர்
அழியாக் கதைகள் படைத்த மாமேதை ஆனார்.
ஐந்தாவதே படித்த பெர்னாட்ஷா ஒரு ஏழை ஐரிஷ்காரர். அவர்
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற மாமேதை ஆனார்.
இன்னும் பிரஹாம் லிங்கன், கலில் கிப்ரான், ருட்யார்டு
கிப்ளிங், ஏர்னஸ்ட் ஹெமிங்வே என்று கல்லூரியில்
பயிலாதவர்களின் எண்ணிக்கையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் அனைவருமே உலகப்புகழ் பெற்றார்கள். ஆகவே
கல்லூரிப்படிப்பு இல்லை என்பது முன்னேற்றத்துக்கு ஒரு
தடையில்லை.
சார்லஸ் டிக்கன்ஸ் செய்தி நிருபர் ஒருவரின் மகன்.
கொலம்பஸ் ஏழை நெசவாளியின் மகன். லத்தீன் கவிஞர்
வர்ஜில் கூலியாள் ஒருவரின் மகன். உலகம் இவர்களைப்
போற்றிப்புகழ அந்தஸ்து ஒரு தடையாக இருக்கவில்லை.
எடிஸன் தனது 85-வது வயதிலும் புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்த வண்ணமிருந்தார்.
தத்துவஞானி கான்ட் அவரது புகழ்பெற்ற தத்துவ நூலை
70-வது வயதில் எழுதினார். உலகப் பெருங்கவிஞர் கதே
தனது பாஸ்ட் என்ற நூலின் இரண்டாம் பாகத்தை 80- வது
வயதில் எழுதினார். ஆகவே வெற்றி பெற வயது தடையில்லை.
கோல்டா மேயர், ஹெலன் கெல்லர், இந்திராகாந்தி,
சரித்திரம் படைத்த பெண்மணிகள் வெற்றி பெற பால் ஒரு
தடையில்லை. இனம் ஒரு தடையில்லை, பிறந்த சூழ்நிலை ஒரு
தடையில்லை. ஆனால் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து
நிறுத்த ஒரே ஒரு தடை உள்ளது. தடுத்து நிறுத்துவது
ஒருவரால் மட்டுமே முடியும். உங்கள் மனத்தடை (Mental
Barrier)
மட்டுமே உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த
முடியும். ஆம், நீங்களே உங்களுக்கு நண்பன், நீங்களே
உங்களுக்கு எதிரி.
எனவே, இந்த மனத்தடையைப் போக்க நமக்கே நாம் எதிரியாக
இருப்பதை நீக்க, தன்னம்பிக்கை பெற, விரும்பியதை அடைய,
இயற்கை நியதிகள் மூலம் வாழ்வில் உயர பல உத்திகள்
உள்ளன. இந்த உத்திகள் காலத்தை வென்ற ரகசியங்கள்.
இவற்றை ஊன்றி ஆராய்ந்து சக்தி வாய்ந்த காப்ஸ்யூல்
வடிவில் வெற்றிக்கலை உத்திகள் வடிவமைக்கப்பட்டன.
உங்களுக்கு உணர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் உண்டா?
உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதா? மற்றவர்கள்
உங்களோடு இணங்கி ஒத்துழைக்க மறுக்கிறார்களா?
பணத்தேவையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறீர்களா?
உடல் நலம் இல்லையா? மனோபலம் இல்லையா?
எதையும் எதிர்மறையாகவே எண்ணுகிறீர்களா? எதிர்
மறையாகவே பேசுகிறீர்களா? வேலையில் முன்னேற்றம்
இல்லையா? மனச்சோம்பல், சோர்வு, எதையும் செய்ய
விருப்பமின்மை, விரக்தி, முன்னேறவே முடியாது என்ற
பீதி தரும் அதிர்ச்சி இவற்றால் அவதிப்படுகிறீர்களா?
வாழ்க்கையின் அனைத்துச் சுகபோகங்கள், செல்வம், நல்ல
குடும்பம் இருந்தும் ஆத்ம திருப்தியில்லையா? மனிதனாகப்
பிறந்து, ஒன்றும் சாதிக்கவில்லையே என்ற தங்கம்,
சுயவெறுப்பு உள்ளதா? மேற்கண்ட கேள்விகளில் எந்த
ஒன்றுக்கேனும், ஆம்! என்று உங்கள் பதில் இருந்தால்,
கவலையை விடுங்கள்!
ஏனெனில், வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்குமே
இவற்றில் ஏதோ ஒரு பிரச்சினை நிச்சயம்
இருந்திருக்கிறது. அந்தத் தடையைக் கடந்தே அவர்கள்
வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தக் கட்டுரைகள் காட்டும் வழியைப் பின்பற்றினால்
தடைகள் தாமாகவே விலகும். ஆனால் ஒன்று, ஒரு
வரைபடத்தைப் பல நாட்கள் உற்றுப் பார்த்தால் மட்டும்
போதாது. நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு அந்த
வரைபடம் காட்டும் வழியிலே அடி அடியாக எடுத்து வைத்து
முன்னேற வேண்டும். அப்போது மட்டுமே நினைத்த இடத்தை
அடைய முடியும்.
சரைவேதி...சரைவேதி...சரைவேதி... (முன்னேறு...முன்னேறு...முன்னேறு)
- வேதம்.
செல்லும் வழி நீளமானது, இருட்டானது என்றாலும் கூட,
கைவிளக்குடன் ஒரு அடியெடுத்து வைப்பதன் மூலம் நமது
எல்லைக்கு ஒரு அடி நெருங்கி விட்டோம், நமக்கு முன்னே
உள்ள இருட்டை விரட்டிச் சிறிது தூரம் ஒளிபரப்பி
விட்டோம் என்பது உண்மைதான்.
உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும் வெல்வர். இது
இறுதியான உறுதி.
ஆகவே வெற்றிக்கலை உத்திகளை நூறு முறை படித்தால்
மட்டும் போதாது. அவற்றைச் சந்தர்ப்பம் நேரும் ஒவ்வொரு
முறையும், ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டும்.
உத்திகளைப் பயில்வோம், பயன்படுத்துவோம், வெற்றி
காண்போம்.
(தொடரும்)