<<<<சென்ற
வாரம்
உன்னையே நீ
அறிவாய்!
'உன்னையே நீ அறிவாய்' என்றார் கிரேக்க ஞானி சாக்ரடீஸ்.
இதையே பிதகோரஸ் வலியுறுத்துகிறார். இவர்கள் இதைக்
கூறும் முன்னரே இதையே இந்துமத வேதங்கள் அழுத்தம்
திருத்தமாய் வலியுறுத்தின.
நியூயார்க் நகரையே அழிக்குமளவு ஒரு மனிதனின் உடலிலே
அணுசக்தி நிரம்பி உள்ளது என்று பெளதிக இயல்
விஞ்ஞானிகள் முழங்குகின்றனர். இதைப் படித்து விட்டு
'அப்படியா!' என விட்டுவிட்டால் என்ன பயன் இருக்க
முடியும்?
நியூயார்க் நகரையே அழிக்கும் அளவு சக்தி நமக்கு
இருக்குமானால், நம்மை அழிக்கக் கூடிய சக்தியை
அழிக்கவும் நம்மாலே நிச்சயம் முடியும் அல்லவா?
நம்மை அழிக்கும் சக்தி எது?
தன்னம்பிக்கை இன்மை தான்!
ஃபோர்டின் வெற்றி!
சாதாரணத் தொழிலாளியாக மெஷின் ஷாப்பில் வேலை
பார்த்த ஃபோர்டுக்கு (Ford)
போதிய பள்ளிப் படிப்பும் இல்லை. தொழில் துவங்க
மூலதனமும் இல்லை. தனது ஏழ்மை பற்றிய சிந்தனையை
விரட்டி அடித்துத் தன்னை நம்பினார் அவர். பல கோடி
டாலர்களுக்கு அதிபதி ஆனார்.
'முடியாது' என்ற வார்த்தையே என் அகராதியில் இல்லை
என்றான் பெரும் வீரன் நெப்போலியன். திடமான
குறிக்கோளும், அதை அடைவதற்கான திட்டமும்,
தன்னம்பிக்கையுமே அவனுக்கு வெற்றிமேல் வெற்றியை
ஈட்டித் தந்தன.
வெற்றிக்கு வழி!
உலகத்தில் வெற்றிக்கான வழியை இரண்டே
கருத்துக்களில் அடக்கி விட முடியும் என்றார் ஒரு
அறிஞர்.
முதலாவது கருத்து என்ன?
"நீ வெற்றி பெற நிச்சயம் வழி உள்ளது"
இரண்டாவது கருத்து என்ன?
"உன்னால் அதைக் கண்டு பிடிக்க முடியும்"
தன்னம்பிக்கை பெற எவ்வளவு நேரம்?
பெரிய ஞானி ஒருவரிடம் சிஷ்யன் கேட்டான்.
"குருவே! உண்மையை அறிய எவ்வளவு காலம் ஆகும்?"
"ஒரு நிமிடம் அப்பனே!"
"ஒரு நிமிடம் தானா? மிகக் குறைந்த நேரத்தைச்
சொல்கிறீர்களே?"
"59 வினாடிகள் அதிகம் அப்பனே!"
"அப்படியானால் ஒரு வினாடி போதும் என்கிறீர்களா?"
"கண்ணை மூடிக்கொண்டே நூறு ஆண்டுகள் கழிக்கிறாய்.
ஆனால் கண்ணைத் திறந்தால் ஒரு வினாடி நேரத்தில்
வெளிச்சத்தைக் கண்டு உணர்ந்து கொள்கிறாய்!"
சிஷ்யனுக்குப் புரிந்து விட்டது - ஒரு வினாடி
நேரத்தில் உண்மையை அறியலாம் - விழித்து விட்டால்!
தன்னம்பிக்கை வெளிச்சம் நமக்குள்ளேயே இருக்கிறது.
மூடிய மனம் அறியாது அதை! விழிப்புணர்ச்சி வந்து
விட்டால் போதும்! ஒரு வினாடி நேரத்தில்
தன்னம்பிக்கையை அடைய முடியும்.
வெல்லப் பிறந்தோம்!
நம்மால் முடியாதது இல்லை. வெல்லப் பிறந்தோம் என்ற
இடைவிடா எண்ணம் வெற்றியைத் தரும்.
"வெல்ல முடியும் என்று நம்புவோர் வெல்வார்கள்"
என்கிறார் வர்ஜில்.
நம்மால் முடியும்!
அழகான ஆங்கிலப் பாடல் ஒன்று பெரிய அளவில் உண்மை ஒன்றை
எடுத்துரைக்கிறது.
IF YOU
THINK YOU ARE BEATEN, YOU ARE,
IF YOU THINK YOU DARE NOT, YOU DON'T,
IF YOU LIKE TO WIN, BUT YOU THINK YOU CAN'T,
IT IS ALMOST CERTAIN, YOU WON'T,
IF YOU THINK YOU WILL LOSE, YOU HAVE LOST.
FOR OUT OF THE WORLD, WE FIND
SUCCESS BEGINS WITH FELLOW'S WITS.
IT IS ALL IN THE STATE OF MIND.
IF YOU THINK YOU ARE OUT CLASSED, YOU ARE.
YOU HAVE GOT TO THINK HIGH TO RISE
YOU HAVE GOT TO BE SURE OF YOURSELF
BEFORE YOU CAN EVER WIN A PRIZE
LIFE'S BATTLES DON'T ALWAYS GO
TO THE STRONGER OR FASTER MAN
BUT SOON OR LATE THE MAN WHO WINS
IS THE MAN WHO THINKS HE CAN
இதன் சாராம்சம் இதுதான்:-
"தோற்றுவிட்டேன் என்று நீ கருதுவாயாகில் நீ
நிச்சயமாகத் தோற்றவனே. உன்னால் ஒரு காரியத்தையும்
செய்ய முடியாது என நினைத்தால் உன்னால் அதை ஒரு
பொழுதும் செய்ய இயலாது. நீ வெற்றி பெற விரும்பு,
ஆனால் அதே சமயம் நம்மால் முடியாது என நினைத்தால் நீ
வெற்றி பெற முடியாது.
உலகிலிருந்து நாம் அறிவது, வெற்றி ஒருவனின்
மனநிலையிலிருந்தே பிறக்கிறது என்பதையே! வாழ்க்கைப்
போர் பலவானுக்கோ, அதிவேகமாய் செல்பவனுக்கோ சாதகமாய்
முடிவதில்லை. ஆனால் சீக்கிரமோ தாமதித்தோ எப்படியும்
வெற்றி பெறுபவர் யார் எனில், "என்னால் முடியும்"
என்று எண்ணுகிறவன் தான்"
எவனுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, அவன் மற்றவரை வழி
நடத்துவான் என்கிறார் ஹோரஸ். எங்கே நம்பிக்கை எண்ணம்
வளர்கிறதோ, அந்த மனம் சக்தியின் ஊற்றாக ஆகிவிடுகிறது.
(வெற்றி தொடரும்)