பயம்
மிகவும் வலிய, ஆற்றல் மிக்க ஒரு உணர்ச்சி.
அபாயங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும்,
அவற்றிலிருந்து தப்பிக்கவும் பயம் அவசியமானதெனினும்
ஆதாரமில்லாத பயங்கள் மனித வாழ்க்கையை முடக்கிவிடும்
ஆற்றல் மிகுந்தவை.
எந்த ஒரு பொருளோ, செயலோ, நிகழ்வோ அல்லது உணர்ச்சியோ
அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற
பூதாகரமான கற்பனையே பெரும்பாலான நேரங்களில் பயமாக
உருவெடுக்கிறது. வீடு பற்றி எரியும் போது ஏற்படும்
பயம் நியாயமானது; விரைவாகச் செயல்பட்டு
ஆபத்திலிருந்து தப்ப அது உதவுகிறது. ஆனால், ஒரு
சாதாரண வயிற்றுவலி புற்று நோயின் அறிகுறியாக
இருக்குமோ என்று எழும் பயம் ஆதாரமற்றது. இத்தகைய
ஆதாரமற்ற பயங்கள்தான் நம் மனதைக் குழப்பி வாழ்க்கையை
நரகமாக்குகின்றன.
இந்த பயம் எங்கே உதயமாகிறது?
'ஓடினால் விழுந்துவிடுவாய், 'நல்ல மதிப்பெண்
வாங்கவில்லை என்றால் கேலிக்குள்ளாக நேரும்' 'தனியாக
எங்கேயும் போனால் பூச்சாண்டி பிடித்துக் கொண்டு
போய்விடுவான்' என்று பெற்றவர்கள் குழந்தைகளிடம்
சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ஆதரமற்ற பயத்தின் முதல்
வித்து விழுகிறது. பெற்றவர்கள் அபாயங்களைக் குறித்து
குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்குப் பதிலாக அவை
குறித்து பயமுறுத்தும் போது பயம் குழந்தையின்
வாழ்க்கையைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள
விழைகிறது. அதன் பின் ஒவ்வொரு முறை நாம் விழும்போதும்,
ஒவ்வொரு முறை நிராகரிக்கப் படும்போதும், ஒவ்வொரு முறை
எதையோ இழக்கும்போதும் பயம் தனது சாம்ராஜ்யத்தை
விஸ்தரித்து வாழ்க்கையை முற்றிலுமாய் ஆக்கிரமித்துக்
கொள்கிறது.
பயம் என்ன செய்யும்?
1) மனதைப் பலவீனப்படுத்தும்; சில சமயம்
முடக்கிவிடவும் செய்யும்
2) மனிதர்களின் மேலும் வாழ்க்கையின் மேலும்
அவநம்பிக்கையை ஏற்படுத்தும்
3) புதிய முயற்சிகளைத் தடுக்கும்
4) சுதந்திரத்தைப் பறித்து ஒரு வட்டத்துக்குள்
சிறைப்படுத்தும்
5) பொருள் விரயத்தை ஏற்படுத்தும்
மொத்தத்தில் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும்
பயத்தை சமாளிக்க மிகுந்த ஆற்றல் தேவையாதலால், நமது
உடல் மற்றும் மன சக்தி முழுவதும் அதிலேயே செலவாவதில்
வாழ்வின் மற்ற களங்களில் கவனம் செலுத்த முடியாமல்
போகிறது. பயம் குடிகொண்டுள்ள மனம் பயத்தின்
அடிப்படையிலேயே வாழ்க்கையை நடத்தத் தூண்டும். அன்றாட
வாழ்க்கையின் நடவடிக்கைகளும் தீர்மானங்களும் பயத்தின்
அடிப்படையில் அமையும் போது அது மேலும் அதிக
பயத்துக்கு வழி வகுக்குமே தவிர அதிலிருந்து விடுதலை
பெற உதவாது.
பூங்கோதையின் வாழ்க்கையைப் பார்ப்போம். அவருக்கு ஊசி
என்றால் பயம். அதனால் உடல் நலமில்லாமல் மருத்துவரிடம்
சென்றால் கூட ஊசியைத் தவிர்த்துவிடுமாறு வேண்டுகோள்
விடுப்பார். மருத்துவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில்
ஏதேனும் சாக்குச் சொல்லி வெளியேறிவிடுவார். அடிக்கடி
வந்த தலை சுற்றுக்கான காரணம் காண ரத்த சோதனைக்கு
மருத்துவர் பரிந்துரைத்தபோது, ஊசியால் ரத்தம்
உறிஞ்சுவார்களென அதனையும் தவிர்த்தார் பூங்கோதை. இது
பயத்தினால் எடுத்த ஒரு முடிவு. ஆனால் தலை சுற்றல்
வரும்போதெல்லாம் தனக்கு மூளையில் ஏதேனும் பாதிப்பு
இருக்குமோவென்ற பயம் எழுந்து விரிந்து கொண்டே வந்தது.
அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல்
அவதிப்பட்டார். மேலாளரிடமிருந்து எச்சரிக்கை வர, வேலை
போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது. இப்படி
மேலும் மேலும் பயங்கள் சேரச் சேர மன இறுக்கம்
ஏற்பட்டு அவரே வேலையை விட்டுவிட்டு மனநல மருத்துவரின்
உதவியை நாட வேண்டி வந்தது.
இப்படி, பயம் ஒருவரை வாழ்க்கையை அனுபவிக்கவிடாமல்
மனதளவில் முடமாக்கிக் கொண்டிருந்தால், அதனிடம்
சரணாகதி அடைந்து ஒவ்வொரு நொடியையும் நரகமாக்கிக்
கொள்வதைவிட கடினமாய் இருந்தாலும் எதிர்த்து நின்று
போரிட்டுப் பார்ப்பது பயன் தரும். வீரனுக்கு ஒரு சாவு,
கோழைக்கு நித்தமும் சாவு என்பார்களல்லவா?
போரிட முடிவு செய்துவிட்டால், எதிரியின் பலம் மற்றும்
பலவீனத்தைத் தெரிந்து கொள்வது நமக்கு சாதகமாய்
அமையுமல்லவா?
(தொடரும்)