 |
இதழ் 334 |
 |
அக்டோபர் 15 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Success |
| எந்த நாளுமே இனிமை!
- பத்மநாபன் |
| | உங்களுக்கே தெரியும். காரணம் 'நாலு'தான் என்று. அந்த ஐந்து நொடிகளில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் அன்றைய முழுநாள் நிம்மதியே கெடக் காரணமாயிருந்தது.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் என்றால் அதனை எதிர்கொள்ளத் தெரியாத ஆத்திரத்தில் நாமாக நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் துன்பங்கள்தான் அதிகம். நடக்கும் நிகழ்ச்சிகளில் பத்து சதவிகிதம் தவிர்க்கமுடியாதவை. 90 சதவிகிதம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்பவை. வாகனத்தில் நாம் சென்று கொண்டிருக்கும்போது திடீரெனக் கார் அல்லது ஸ்கூட்டர் மக்கர் செய்வதோ, அல்லது யாராவது குறுக்கே வருவதோ நம் கையில் இல்லாத, நம்மால் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.
ரயிலுக்குப் போகிறோம், வழியில் அரசியல் ஊர்வலம், நம்மால் சரியான நேரத்திற்குப் போக முடியவில்லை. விமானப் பயணத்திற்குச் செல்லும்போது விமானம் மிகுந்த தாமதமாகக் கிளம்புகிறது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு நடக்க வேண்டிய முக்கியமான அலுவலக வேலை முடியவில்லை. இப்படி எத்தனையோ சம்பவங்கள் நமது கட்டுக்குள் இல்லாமல் தினந்தோறும் நடக்கின்றன. இந்த நேரங்களில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் 90 சதவிகிதத்தைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். அவசரமான காலை வேளை, நீங்களும் உங்கள் மனைவியும் வேகமாக ரெடியாகிக் குழந்தையைப் பள்ளிக்குச் செல்லத் தயார் செய்து, டிபன் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும். நீங்கள் மூவரும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் குழந்தை காப்பிக் கோப்பையைத் தட்டிவிட, புதிதாக அயர்ன் செய்து போட்டுக்கொண்டிருந்த வெள்ளைச் சட்டையில் பட்டுக் கறையாகிவிடுகிறது. இது உங்களது கட்டுப்பாட்டிலில்லாத ஒரு நிகழ்ச்சி. இதனை எப்படி எதிர்கொள்வது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
"ஆபீஸ் போற நேரத்தில இப்படியா?" என்று உங்களை நீங்களே நொந்து கொள்கிறீர்கள் அல்லது உங்கள் பெண்ணை, "கொஞ்சம் கவனம் வேண்டாம்? கண் எங்க போச்சு?" என்று கோபத்தில் கடிந்து கொள்கிறீர்கள். அந்தக் குழந்தை உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழ ஆரம்பிக்கிறது. உங்கள் மனைவியிடம், "இப்படியா காபி கப்பை மேஜை ஓரத்தில் வைப்பது?" என்று பாயலாம். அப்புறம், "நீங்கள் பார்க்கக்கூடாதா, எதற்கும் என்னையே சொல்றீங்களே?" என்று மனைவி பதிலுக்குக் கோபிக்க வார்த்தை முற்றுகிறது. நீங்கள் சத்தம் போட்டுக்கொண்டே உடையை மாற்றிக் கொள்ள உங்கள் அறைக்குச் செல்கிறீர்கள். உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லவேண்டிய அவசரத்தில் டிபனை அவசர அவசரமாக விழுங்குகிறாள். அவள் ரெடியாவதற்குள் ஸ்கூல் பஸ் சென்று விடுகிறது. உங்கள் மனைவிக்கோ அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. உங்கள் குழந்தையையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு காரை விரட்டுகிறீர்கள். மனதில் குமைந்து நிற்கும் கோபத்துடன் வேகமாகப் போனதற்காகப் போலிசிடம் மாட்டிக்கொண்டு அபராதமோ, மாமூலோ தண்டம் அழுதுவிட்டு, குழந்தையைப் பறக்கப் பறக்க பள்ளிக்கூடத்தில் அவள் 'டாடா' சொல்லக்கூட நேரமில்லாமல் இறக்கிவிட்டு, மனைவியை அலுவலகத்தில் எரிச்சலுடன் 'ட்ராப்' பிய பிறகு ஒரு வழியாகக் காரியாலயத்தைச் சென்றடைந்து, "அப்பாடா" என்று மூச்சுவிடும் போதுதான் கவனிக்கிறீர்கள் - "ஐயையோ கைப்பையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோமே" என்று. காலையில் பொழுதே சரியாக விடியவில்லை. நேரம் ஆக ஆகக் கோபமும் ஆத்திரமும் பொங்க எரிச்சலுடன் செய்யும் வேலையெல்லாம் தவறாக முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அன்று முழுவதுமே மோசமான நாளாகத் தொடர்கிறது. 'வீட்டுக்குப் போனால் போதும்டா சாமி' என்று நினைக்கிறீர்கள். 'சரி, வீட்டுக்குப்போகலாம்' என்று சென்றால் காலையில் போட்ட சண்டையின் வடு ஆறாமல் மனைவியும், குழந்தையும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள்! இவற்றுக்குக் காரணம் என்ன? ஏன் அந்த நாள் முழுவதும் மோசமாக இருந்தது? எல்லாம் நீங்கள் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டியதால்தானே இந்த நாள் மோசமாக அமைந்ததற்குக் காரணம்:
1. சட்டையில் கொட்டிய காபியா? 2. உங்கள் பெண்ணா? 3. உங்களை வழியில் நிறுத்திய போலீஸா? அல்லது 4. நீங்களா?
உங்களுக்கே தெரியும். காரணம் 'நாலு'தான் என்று. அந்த ஐந்து நொடிகளில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் அன்றைய முழுநாள் நிம்மதியே கெடக் காரணமாயிருந்தது. காபி கொட்டிய சம்பவத்தில் உங்களால் செய்திருக்கக் கூடியது ஒன்றுமில்லை. விஷயமே அந்த நிகழ்ச்சி உங்களை எப்படி பாதித்தது என்பதுதான். இப்போது நீங்கள் என்ன செய்திருக்கலாம் அல்லது செய்திருக்கவேண்டும் எனச் சற்றே ரீவைன்ட் செய்து பார்க்கலாம். காபியைத் தவறி உங்கள் மகள் உங்கள் சட்டைமேல் கொட்டிவிடுகிறாள். பதறிப்போய், 'அப்பா என்ன சொல்வாரோ?' என்று பயத்தில் அவள் அழ ஆயத்தமாகிறாள். அப்போது நீங்கள் வார்த்தைகளைக் கொட்டாமல், நிதானமாக, "போனால் போகிறது, கண்ணம்மா! பாத்தியா அப்பா சட்டை எப்படிக் கறையாயிடுத்து? அடுத்த தரத்திலேருந்து ஜாக்கிரதையா இருக்கணும், சரியா?" என்று சொல்லிவிட்டு, அறைக்குப் போய் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு, பெட்டியையும் எடுத்துக்கொண்டு வந்தால் நீங்கள் வழக்கம்போல உங்கள் பெண் தனது ஸ்கூல் பஸ்சில் ஏறுவதைப் பார்த்திருப்பீர்கள். அவளும் உங்களைப் பார்த்துக் கையசைத்திருப்பாள். மனதில் எந்த சங்கடமுமில்லாமல் ஆபீசுக்கு ஐந்து நிமிஷம் முன்னாலேயே போய்ச் சேர்ந்திருப்பீர்கள். அந்த நாளும் இனிய நாளாக அமைந்திருக்கும். வித்தியாசம் தெரிகிறதா? அடிப்படையாக விஷயங்களைப் பார்க்கும் பார்வையால் ஒவ்வொரு நாளும் சொர்க்கமாகவும் அமையலாம் அல்லது நரகமாகவும் ஆகலாம்.
எல்லாம் நீங்கள் ஒரே சம்பவத்திற்கு எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த 90/10 பார்முலாவை எந்தச் சந்தர்ப்பத்திற்கும் பயன்படுத்தலாம். நீங்கள் அவசரமாகச் செல்லும்போது சிவப்பு சிக்னல் உங்கள் வேகத்திற்குத் தடையாக இருக்கலாம். ஆனால் அதற்காக எரிச்சல் படாமல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப்பற்றி யாராவது தவறாகக் கூறினால் உடனே அதை மனதுக்குள்ளேயே போட்டுக்கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவர் மீது கோபிக்காதீர்கள்! அவர் அவ்வளவுதான் என்று உதறிவிடும் மனப்பக்குவம் தேவை. உங்களுக்கு ஆபீசில் பிரமோஷன் கிடைக்கவில்லையா? வேலையை விட்டுத் திடீரென நீக்கிவிட்டார்களா? என் மேல் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்துத் திருத்திக் கொள்ளுங்கள். "இந்த வேலை போனால் என்ன என் தகுதிக்கு இன்னொரு வேலை கிடைக்கும்" என்று முயற்சியில் ஈடுபடுங்கள்! இதற்குப் பதிலாகக் கோபப்பட்டு ஆத்திரமடைவதால் உடம்பும், மனசும்தான் கெட்டுப்போகப் போகிறதே தவிர ஒன்றும் நடக்கப் போவதில்லை. விமானப் பயணத்தின்போது ஏதோ காரணத்தால் விமானம் தாமதமாகப் போகிறது என்பதற்காகப் பணிப்பெண்னிடம் கோபத்தைக் காண்பித்தால் அதனாலென்ன நடக்கப் போகிறது? அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைப் படியுங்கள் அல்லது உங்கள் பக்கத்துச் சீட்டில் இருப்பவரோடு பேசி நேரத்தைச் செலவிடுங்கள்.
ஒவ்வொரு சம்பவத்துக்கும் காட்டும் எதிர்வினையால் நீங்கள் நண்பர்களை இழக்கலாம். வேலையைக்கூட இழக்கநேரிடும். உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாகும். ஏன் இத்தனை தொல்லை? உங்கள் வசமில்லாத ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு சில நொடிகள் நிதானமாக யோசியுங்கள். அப்புறம் என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானியுங்கள். அந்தத் தீர்மானத்தில் வேகம் இருக்காது, விவேகம் இருக்கும். இப்பொழுது உங்களுக்கு 90/10 பார்முலா எவ்வளவு உபயோகமாயிருக்கும் என்று தெரிந்திருக்குமே! எந்தச் சம்பவத்திற்கும் உடனடியாக நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுத்தால் வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது. எல்லா நாட்களுமே இனிய நாட்களாக இருக்கும்.
ஆதாரம்: Stephen Covey
மேலும் பல.....
|
|
|
|
|
Source: suratha.com
|
|