இல்லை,
இயலாது, முடியாது போன்றவைகளை நாம் எத்தனைமுறை
கேட்கிறோமோ உணர்கிறோமோ அத்தனையும் நமது வலிமை. இந்த
மூன்று வார்த்தைகளுக்கும் உள்ள வலிமை, நம்மைச் சாதனை
என்ற இலக்குக்குக் கொண்டு செல்லும். உலகத்தில்
மாபெரும் வெற்றிகள் எல்லாமே இந்த மூன்று வார்த்தைகள்
பொதிந்த ஒரு சாதனைதான்.
"வாழ்க்கை என்பது வியாபாரம்" - கண்ணதாசன் தத்துவம்,
கூர்ந்து கவனித்தால் நாம் ஒவ்வொருவரும் நம்மை வணிகம்,
அதாவது வியாபாரம் செய்துகொண்டுதானிருக்கிறோம்.
ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெருகிறோம். பண்டமாற்று
முறை தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கைத் தத்துவமே
அதுதான். நாம் நம்மை வியாபாரி என்பதை
ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, லாபம், வெற்றி, சாதனை
எல்லாமே நம்முடைய தோல்வி, இழப்பு, உழைப்பு
ஆகியவற்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக நாம்
பெற்றதுதான்.
"ஒன்றைக் கொடுத்து அல்லது இழந்து மற்றொன்றைப் பெறுவது
அல்லது அடைவதுதான் வியாபாரம், அதுதான் வாழ்க்கை"
தோல்விகளை வெற்றியாக மாற்றும் உத்திகள்:
சாதாரணமாக
மனிதனின் எண்ணம் இப்படித்தானிருக்கும்
வெற்றி - மனிதன் - தோல்வி
ஒவ்வொரு மனிதனும் தன்னை வெற்றி தோல்விக்கு நடுவே
வைத்துக் கொள்வான். எப்போதுமே ஒருபுறம் நோக்கியே,
அதாவது வெற்றியை நோக்கியே செல்ல நினைப்பான். இது
எப்படிச் சாத்தியம்? இரண்டும் இரு கைகள் போலத்தானே!
பிறகெப்படி ஒருபுறம் மட்டும் செல்லமுடியும்? இதையே
சற்று மாற்றிப் பாருங்கள்.
நாம் - தோல்வி - வெற்றி
அதாவது தோல்வியைச் சந்திக்காமலே, புறக்கணித்துவிட்டு,
நாம் வெற்றியின் பக்கம் மட்டுமே செல்ல
முயற்சிக்கிறோம். நல்லது! வெற்றி பெறுவதாகவே
வைத்துக்கொள்வோம். வெற்றிவிகிதம் - ஓரளவுதான்.
ஆனால் தோல்வியின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப்
பார்த்து, அந்தத் தோல்வியை ஒரு கல்லாக நினைத்து,
படியாக நினைத்து முழு பலத்தோடு ஒரே மிதியாக மிதித்து
வெற்றியின் பக்கம் உந்திப்பாருங்கள். உங்களின் வெற்றி
விகிதம் பல மடங்காக உயரும்.
இது சாதாரண உதாரணமாக இருக்கலாம். ஆனால் மிகப்பெரிய
உண்மை. ஒரு முழுமையான வெற்றியை அடையத் தேவையானவை
தோல்வி, வெற்றி இரண்டுமேதான். அதாவது, ஒரு மனிதன்
வெற்றி மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தால் அவனின் முழு
ஆற்றலும் என்னவென்றே அவனுக்குத் தெரியாமல் போய்விடும்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: செல்வன் ஒரு ஒரு மைல்
தூரத்தை முதலில் பத்து நிமித்தில் கடக்கிறார், பின்
அவரது இலக்கு 9.5 நிமிடமாகிறது, பின் அது 9
நிமிடமாகிறது. அவரால் அவை எல்லாவற்றையுமே அடைய
முடிகிறது. வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும்
செல்வனுக்கு ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களில் கடக்கச்
சொல்லி சவால் தருகிறார் அவரது பயிற்சியாளர்.
முழுமூச்சாக முயன்றும் செல்வனால் அத்தூரத்தை 5
நிமிடங்களிலேயே கடக்க முடிகிறது. சவாலில் தோல்வி
அடைந்தாலும் அவரது ஆற்றல் அவர் பெற்ற வெற்றிகளுக்கு
அப்பால் எங்கோ இருக்கிறது என்பதை செல்வன் உணர்ந்து
கொண்டார்.
நாம் தோல்வியை வெற்றியாகவும், வெற்றியைத்
தோல்வியாகவும் கற்பனை செய்துகொள்வோம். நமது தோல்வி
விகிதத்தை அதிகப்படுத்திக்கொண்டே தொடர்ந்தோமானால்
நமக்குக் கிடைப்பது அபார வெற்றி. தோல்வியால் எந்த
பாதிப்பும் நமக்கு ஏற்படாது. இது புரிந்து கொள்ளச்
சற்றுக் கடினமானதுதான். ஆனால் மேலே சொன்ன
எடுத்துக்காட்டு இந்தப் புரிதலை இலகுவாக்கும். இந்த
தலைகீழ் தத்துவம் (Reverse
Thinking Philosophy)
முழுக்க முழுக்கப் பரிசோதிக்கப்பட்ட, அக்மார்க் உண்மை.
ஒரு தாமஸ் ஆல்வா எடிசன், ஒரு ஹெலன் கெல்லர்
காதுகேளாதவர்களாக இருந்ததால்தான் எட்டமுடியாத சாதனையை
வெகுவிரைவில் எட்டமுடிந்தது. ஒருவேளை அந்தக் குறைபாடு
அவர்களிடத்தில் இல்லையென்று வைத்துக் கொள்வோம்.
சாதித்திருப்பார்கள், ஆனால் சற்றுத் தாமதமாகத்தான்
சாதித்திருப்பார்கள். சாதிக்க நினைத்துவிட்டால்
செவிடர்களாக வேண்டாம், செவிடர்களாக நடிக்கத்தான்
சொல்கிறேன். தலைகீழாகச் சற்று மாற்றித்தான்
நினைத்துப் பார்ப்போமே!
தோல்வியே இலக்கு
நாம் வெற்றியை நோக்கியேதான் இலக்கை
நிர்ணயிப்போம். ஒரு மாறுதலுக்கு ஏன் தோல்வியை நோக்கி
நிர்ணயிக்கக்கூடாது? நாம் வெற்றியையே இதுவரை
கொண்டாடியிருக்கிறோம். ஏன் தோல்வியைக்
கொண்டாடக்கூடாது? நாம் ஒவ்வொரு முறையும் தோல்வியைக்
கொண்டாடும்போது, மனதுக்குள் உற்சாகத்தோடு, "நான்
வெற்றிக்கு வெகு தொலைவில் இல்லை, ஒரு படி இன்னும்
அருகில் வந்துவிட்டேன்" என்று நினைத்துக்கொள்வோமே!
பிறகு பாருங்கள் வெற்றியின் வீச்சை!
பேனா விற்கும் நண்பர் ஒருவர் இரண்டு பேரிடம் பத்துத்
தடவை விற்க முயற்சித்துத் தோல்வியைத் தழுவுவதைவிட,
பத்துப்பேரிடம் முயற்சித்து இரண்டு பேரிடம் விற்று
விடுவது சாதனைதானே! எனவே இரண்டு வெற்றியை இலக்காக
வைக்காமல் பத்துத் தோல்வியை இலக்காக வைத்தால்
கிடைப்பது இரண்டு வெற்றி. மேலும் ஒரு பத்துத் தோல்வி
இலக்காக மாறும்போது வெற்றி இரட்டிப்பாகும். இதுதான்
தலைகீழ்த் தத்துவம் (Reverse
Thinking Philosophy).
நாம் சந்திக்கும் ஒவ்வொரு தோல்வியும் நமக்கு மூலதனம்,
அது நமது இலக்கை நோக்கிச் செல்ல உதவும் வாகனம், அங்கு
நமது ஊக்கமே எரிபொருள். ஊக்கமென்பது கிட்டத்தட்ட நமது
தசைகளைப் போன்றது. அதற்குத் தோல்வி என்ற பயிற்சி
கொடுக்கக் கொடுக்க பலமுள்ள தசைகளாக உறுதியான,
கவர்ச்சியான வெற்றியைக் கொடுக்குமென்பதில் சந்தேகமே
இல்லை. மாபெரும் கலைஞர்கள் சார்லி சாப்ளின் மற்றும்
அர்னால்டு கூறுவது போல் "வலியின்றி வளமில்லை"
(No
Pain No Gain).
ஊக்கம், உழைப்பு, நோக்கம், வலிமை, தோல்வி, வெற்றி
எல்லாமே நமக்குள்தான் இருக்கிறது. வெளியிலிருந்து
ஏதும் வருவது இல்லை. எனவே மாற்றத்தை மனதுக்குள்
கொண்டு வருவோம்.
"சாதிப்பதற்கேது எல்லை! அது இவ்வையகத்தில்
இல்லை, சாதனையாளர்களுக்கு அந்த வானமே எல்லை".
ரிச்சர்ட் ஃபென்டன் அவர்களின் "தோல்வியே இலக்கு"
(Go
for No)
என்ற ஒரு படைப்பு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
தொழிலதிபர்கள், வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் இப்படி
எத்தனையோ சரித்திர நாயகர்களை உருவாக்கிய ஒன்று.
உங்களின் வெற்றி இரட்டிப்பாகலாம் ஏன்? மூன்று அல்லது
நான்கு மடங்காகலாம். 'ஏற்றுக்கொள் அல்லது இழந்துவிடு'.
ஏற்றுக்கொள்வது தோல்வியாகட்டும்! எட்டப்போவது வெற்றியாகட்டும்!
*******