சிறுவயது முதலே
நான் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன். அப்போது ஆறாவது வகுப்பு
படித்து வந்தேன். வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் ஒரு
கிலோ மீட்டர் பாதையில் அரை கிலோமீட்டருக்கும் மேல் ரோட்டின்
இரு புறமும் மட்டன்
ஸ்டால்கள் அதிகமிருக்கும். அவற்றைப்பார்க்காமல் யாரும்
ரோட்டைக்கடந்து செல்ல முடியாது. கழுத்தறுபட்ட ஆட்டின் தலைகள்
வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தோலுரிக்கப்பட்ட உடல் பகுதி
முழுவதும் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருக்கும். சுமார் நாலடி
உயரமும் இரண்டு அடி விட்டமும் உள்ள ஒரு மிகப்பெரிய மரத்துண்டு
நடப்பட்டு, சாணை பிடிக்கப்பட்ட கொடு அரிவாள், கத்திகள் என
ஆங்காங்கே ரத்தக் கறைகளுடன் அந்த இடம் காணப்படும். சுருட்டை
முடியும் சிவந்த கண்களுமாக அங்குள்ள ஆட்களைக் கண்டாலே எனக்கு
மிகவும் பயமாக இருக்கும். பக்கவாட்டில் எங்குமே திரும்பாமல்,
சற்று வேகமாக
நடந்து, மிகுந்த திகிலுடன் வீட்டுக்கோ, பள்ளிக்கோ, கடவுளை
வேண்டிய வண்ணம் ஓடிச்சென்று விடுவேன். ஒரு சில சமயங்களில்
கழுத்தறுபட்ட ஆட்டுத்தலைகள் கண்ணில் பட்டு விட்டால், அவை
தங்கள் கண்கள் மூலம் என்னிடம் ஏதோ புலம்புவது போலத்தோன்றும்.
எனக்கு அவற்றின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கும். நல்ல
வேளையாக இந்த ஜென்மத்தில் ஆடாகப் பிறக்காமல் மனிதனாகப்
பிறந்தோமே என நினைப்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய
இயலாது.
எனக்குத் திருமணம் ஆனது. மனைவி வீடு எங்கள் ஊரின் அருகே உள்ள
ஒரு கிராமம். திருமணம் ஆன புதிதில் அவர்கள் கிராமத்தில்
அம்மனுக்குத் திருநாள் என்று அழைத்தனர். நானும் என் மனைவியை
மட்டும் அங்கு விட்டு விட்டு வரலாம் என்று போயிருந்தேன்.
பல்வேறு இடையூறுகளால் ஐந்து வருடத்திற்கும் மேலாக நடக்காத
திருநாள் இந்த ஆண்டு தான் மீண்டும் நடக்கப் போவதாகவும்
கூறினர். நான் போய்ச் சேர்ந்த அன்று அந்த ஊரில்
காப்புக்கட்டாம். திருநாளுக்கு ஒரு வாரமே இருப்பதால்
காப்புக்கட்டு கட்டிய பிறகு, ஊருக்குள் வந்த யாரும் ஊரைவிட்டு
வெளியே புறப்படக்கூடாதாம். ஏதேதோ ஐதீகம் சொல்லி என்னையும்
அந்தக்குக்கிராமத்தில் ஒரு வாரம் தங்க வைத்து விட்டனர்.
திருநாளுக்கு
முதல் நாள் நள்ளிரவில் கோவிலில் ஒரே கூட்டம். சுற்று வட்டார
கிராமத்து ஜனங்கள் எல்லோரும் கூடி விட்டனர். என்னையும்
தூங்கவிடாமல் கோவிலுக்குக் கூட்டிச்சென்றனர்.நள்ளிரவில்
அம்மன் குட்டி குடிக்கப் போவதாகச் சொன்னார்கள். ஒன்றும்
புரியாமல் ஆட்டு மந்தையில் செல்லும் ஆடு போல அவர்கள்
கும்பலுடன் நானும் சென்றேன். தாரை தம்பட்டையுடன் மேள தாளங்கள்,
வாண வேடிக்கைகள், இரவா பகலா எனத் தெரியாதவாறு மின் விளக்குகள்
என கோவில் வளாகம் ஜகஜோதியாக இருந்தது. அமைதியே உருவான அம்மனை
கண் குளிர தரிசித்தேன்.
மனைவியிடம் "வீட்டுக்குப்போகலாமா" என்றேன். "என்ன அவசரம்,
சரியாக பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் மருளாளி உடம்பில்
அம்மன் ஏறுவாள், பிறகு தான் குட்டி குடித்தல் நடைபெறும்.
அதைப் பார்க்கத்தான் இவ்வளவு கும்பலும் ஆவலாக உள்ளது. எங்க
ஊர் திருநாளில் இது தான் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி"
என்றாள் என்னவள். எனக்கு அப்போதும் கூட குட்டி குடித்தல்
என்றால் என்னவென்றே ஒன்றும் சரியாக விளங்கவில்லை. நேரம் ஆக
ஆக மேளதாளங்களுடன் ஒரு சில ஆடுகளும், ஆட்டுக் குட்டிகளும்,
சந்தனம், மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, கழுத்தில் மாலைகளுடன்
கூட்டி வரப்பட்டு அங்கிருந்த தூண்களில் கட்டப்பட்டன.
மருளாளி என்ற
ஒருவர் கரும் பட்டுப் வேட்டி கட்டி, கழுத்தில் மாலையுடனும்,
உடல் பூராவும்
சந்தனத்துடனும், தலையில் ஜரிகைத் தலைப்பாகை கட்டி, அதிகமாக
சரக்கு ஏற்றியதுபோல ஒரு வித ஆட்டம் ஆடிய வண்ணம் வந்து
சேர்ந்தார். மிகப் பெரிய வெள்ளிக் கிண்ணமும்,
மிக நீண்ட சாணை பிடிக்கப்பட்ட அரிவாளும் அம்மன்
சன்னதிக்கெதிரில் வைக்கப்பட்டன. மருளாளியின் ஆட்டமும்
ஓட்டமும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி வந்தது.
கூட்டத்தினரிடமும் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டது. அம்மன்
மருளாளியின் உடம்பில் ஏறியதும் துள்ளிக் குதிப்பார். பிறகு
ஆட்டின் கழுத்து ஒரே வெட்டாக வெட்டப்பட்டு சூடான பச்சை ரத்தம்
வெள்ளிக் கிண்ணத்தில் ஏந்தப்பட்டு அப்படியே அம்மன் குடித்து
விடுவாள். அந்த அரிய
காட்சியைக் காண கண் கோடி வேண்டும் என பேசிக் கொண்டனர்.
என் உடல் நடுங்கியது. உள்ளம் பதறியது. பள்ளிப்பருவ நாட்கள்
நினைவுக்கு வந்தன. அம்மனிடம் மீண்டும் சென்றேன். வாயில்லாப்
பிராணிகளான ஆடுகளை அம்மன் பெயரைச் சொல்லிக் கொல்லுவது அபத்தம்
என்று முறையிட்டேன். அவைகளைக் காப்பாற்ற வேண்டினேன். என்
எண்ணங்களைப் புரிந்து கொண்ட அம்மன் என்னைப் பார்த்து புன்னகை
புரிவதை உணர்ந்தேன். வாடிய புல்லைக் கண்டு வாடிய வள்ளலார்
வாழ்ந்த இதே பூமியில் உயிர்க் கொலைகளை எதிர் நோக்கி ஆவலுடன்
இங்கு ஒரு கூட்டம். நேரம் ஆக ஆக மருளாளியின் ஆட்டம் குறையத்
தொடங்கியது. அவரிடம் ஒரு வேகமோ ஆவேசமோ
இல்லை. பொழுது விடியத் தொடங்கியது. இந்த வருடமும் திருநாள்
ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்தும் குட்டி குடித்தல் நிகழ்ச்சி
நடைபெறாமல் போனதில் ஏதோ குடி முழுகி போனது போல ஜனங்கள்
பேசிக்கொண்டனர்.
அம்மனுக்கு ஏதோ கோபம். அபசாரம் ஏதோ நடந்துள்ளது. ஆத்தா
மன்னித்தருள வேண்டும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
அப்பாவிகளான அந்த ஆடுகளும், குட்டிகளும் அவிழ்த்துவிடப்பட்டன.
நடக்கவிருந்த பத்து பற்றி ஏதும் அறியாமல் துள்ளிச்சென்ற
அவற்றின் பார்வையில், என்னால் மட்டும் அம்மனின்
கருணையைக்காணமுடிந்தது.
*******