அடுத்து
கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படும் பெற்றோரின் அன்பைக்
குறித்து பல்வேறு பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும்
வெவ்வேறு கால கட்டத்தில் நமக்கு அளித்த, என் மனதைக் கவர்ந்த
பாடல்களை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். சென்ற முறை
வருந்தி வருந்தித் தவமிருந்து தான் பெற்ற செல்வத்தைப் பேணி
வளர்த்து 'தாயென்ற என்ற பெருமையை' மனம் குளிரத் தந்த தன்
மழலையின் அரும்புதிரும் அழுகையையும், முத்துதிரும்
சிரிப்பையும் மழலைக் குரல் ராஜேஸ்வரியின் குரலில் கேட்டு
ரசித்தோம்.
அடுத்து 1962ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட 'அன்னை ' என்ற
திரைப்படத்தில் திரு ஆர்.சுதர்சனத்தின் இயக்கத்தில் பத்மஸ்ரீ
பானுமதி தன்னுடைய இனிய குரலில் பாசத்தைக் குழைத்து 'மழலைச்
செல்வம் என்பது இறைவனின் கொடை' என்று ஆண்டவனின்
திருவுள்ளத்தைப் பற்றிப் பாடும் பாடல் எனக்குப் பிடிக்கும்.
"பூவாகிக் காயாகி கனிந்த மரம் ஒன்று - பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா - கனிந்து விட்ட சின்ன
மரம்
கண்ணீரில் வாடுதடா, கண்ணீரில் வாடுதடா (பூவாகி)
பெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக் கனியில்லை - பெற்றெடுத்த
மரக்கிளைக்கு மற்ற சுகமில்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை -
பேறு மட்டும் இல்லை (பூவாகி)
வேண்டுமென்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவர்க்கும், மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுளத்தை யார் அறிவார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யாரறிவார் கண்ணே (பூவாகி)
அடுத்து 'டீச்சரம்மா' என்ற திரைப்படத்தில் திரு கண்ணதாசன்
அவர்கள் எழுதிய அம்மா புகழ் பாடும் பாடல் திரு பாப்பா
அவர்களின் இசை அமைப்பில் பி. சுசீலாவின் இனிய குரலில் அழகாக
ஒலிக்கிறது.
'அம்மா என்பது தமிழ் வார்த்தை அது தான் குழந்தையின் முதல்
வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
(அம்மா)
கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா (அம்மா)
பூமியின் பெயரும் அம்மா அம்மா;
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாய் மொழி என்றும் தாயகம் என்றும்
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா (அம்மா)
அம்மா இருந்தால் பால் தருவாள்
அவளது அன்பை யார் தருவார்?
அனாதை என்னும் கொடுமையைத் தீர்க்க
ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்
ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் (அம்மா)
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்
தேனாய் உண்டு சுவைத்த தமிழ் மக்களின் இதயத்தில் நீக்கமின்றிக்
கோலோச்சும் என்பது தமிழுலகம் அறிந்த ஒன்றாம்.
காலவெள்ளத்தில் கரைந்து போன தத்தம் தாயை, அவள் தன்னைப்
பாலூட்டி சீராட்டி வளர்த்த அருமை பெருமைகளை அன்னையின் இழப்பை
மறக்கவொண்ணாது பிறந்த குழந்தை முதல் எண்பது வயது முதியவர்
வரை ஒன்று போல் பழங்கனவுகளையும், நினைவுகளையும் அசை போடுவதே
அன்னையின் பெருமைக்கு உரைகல்லாகத் திகழ்கிறது. ஏழையோ,
சீமாட்டியோ, கற்றவளோ, படிப்பறிவில்லாதவளோ எவராயினும்,
தன்னலமற்ற அன்னையர் அனைவரும் ஆண்டவனின் பிரதிநிதியாய்
ஒவ்வொரு மழலையையும் பேணிக் காப்பவரே என்னும் பேருண்மையை,
கவிஞர் தமக்கே உரித்தான பாணியில் எழுதி இருக்கிறார் அல்லவா?
அடுத்து 'மன்னன்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்
அவர்கள் கை கால்களின் செயல்திறன் இழந்த தன் தாயாக நடித்த
பண்டரிபாயை இரு கரங்களிலும் ஏந்தியபடி கோயில் கோயிலாக ஏறி
வேண்டியவாறு அவருக்குப் பணிவிடை செய்யும் காட்சி
கே.ஜே.யேசுதாஸின் உள்ளத்தைத் தொடும் குரலில் உருக்கமாக
அமைந்து அனைவரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. அந்தப் பாடல்
கவிஞர் வாலியினால் எழுதப்பட்டு இளையராஜாவின் இசையில் இவ்வாறு
ஒலிக்கிறது.
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது? (அம்மா என்று)
அபிராமி , சிவகாமி, கருமாயி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீ தானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான் தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல - தாயே
உன் அருள் வேண்டும் , எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே (அம்மா என்று)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத் தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா.
ஈரேழு ஜன்மங்கள் எடுத்தாலும், உழைத்தாலும்
உனக்கின்று நான் பட்ட கடன் தீருமா?
உன்னாலே பிறந்தேனே" (அம்மா என்று)
இனிமையான வீணையிசையுடன் துவங்கி மற்ற தென்னிந்திய இசைக்
கருவிகளின் பின்னணியில் சீராக ஒலிக்கும் இப்பாடலுக்கு
திரு.யேசுதாஸ் அவர்களின் பண்பட்ட குரலும், இளைய ராஜா
அவர்களின் அருமையான இசை அமைப்பும் கவிஞரின் கற்பனை
வளத்திற்குப் பெருமை சேர்க்கும் முறையில் அமைந்துள்ளது. 'ஈரைந்து
மாதங்கள் கருவோடு சுமந்த' தாயின் கடனை ஈரேழு ஜன்மங்கள்
எடுத்தாலும் தீர்க்க இயலாது' என்பது சத்திய வாக்கு.
அடுத்து இவ்வரிசையில் திரு.வாலி அவர்களின் மற்றொரு பாடல்
திரு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைப்பில் 2004 ஆம் ஆண்டில்
வெளிவந்த 'நியூ' என்ற திரைப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.
இப்பாடலை திரு.உன்னி கிருஷ்ணனும், சாதனா சர்கம் அவர்களும்
பாடி இருக்கிறார்கள்.
"காலையில் தினமும் கண்விழித்தாலே
கை தொழும் தேவதை அம்மா.
அன்பென்றாலே அம்மா - என்
தாய் போல் ஆகிடுமா !
இமை போல் இரவும் பகலும்
எனைக் காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது (காலையில்)
நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத் தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி (காலையில்)
ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கென்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்குப் பின் தாரம் நான் தான் ஐயா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனி சேர் பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி உனை கொஞ்ச எண்ணுதே
அதி காலை சேவல் கூவும் அது வரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு (தலைவா)
இப்பாடல் வேறோர் கோணத்தில் தாயன்பை வருணிப்பதொடு,
தாய்க்குப் பின் தாயாகும் தாரத்தை அதாவது காதலியின்
மென்மையான உணர்வுகளைச் சொல்லி முன் நோக்கி சீராக சிறு ஓடை
போன்று முன் செல்லும் வாழ்க்கையில் தொடரும் புது உறவுகளை
அழகாக இனிமையாக எடுத்துரைப்பது ரசனைக்குரியதாக அமைகிறது.
இது வரை தன்னலமற்ற தாயின் அன்பை சுவைத்தோம். இயக்குனர் சேரன்
நடைமுறை வாழ்க்கையை ஒட்டி இயல்பான படங்கள் எடுப்பதில் வல்லவர்
என்பதை அனைவரும் அறிவோம். 2005 ஆம் ஆண்டில் அவர் தயாரித்த "தவமாய்
தவமிருந்து " திரைப்படத்தில் தாயன்பிற்கு இம்மியளவும்
தந்தையின் பாசம் குறையாதது என்று சபேஷ் - முரளியின் இசை
அமைப்பில் இப்பாடல் நெஞ்சைத் தொட்டு கண்களைப் பனிக்கச்
செய்வதும் தவிர்க்க இயலாது.
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த பிள்ள பெத்தாங்களே அது யாரு உங்க அப்பா (ஒரே ஒரு)
பொத்திப் பொத்தி வளத்தாங்க பாசத்தைக்காட்டி
நெலா வாங்கித் தரேன்னாங்க சாதத்தையூட்டி
நடந்து பழகச் சொன்னாங்களே நடவண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பாரி காட்டி (ஒரே ஒரு)
பள்ளிக்கூடம் நான் போகையிலே பம்பரமாவேனும் ஓடுவேண்டா
வாத்தியார நான் பார்க்கையிலே வணக்கம் சொல்லி நல்லா
பாடுவேண்டா
அந்தக்காலப் படிப்பையெல்லாம் படிக்கத்தாண்டா பார்த்தேன்
அந்தக் கணக்குப் பாடம் தெரியாமல் பரிட்சையிலே தோத்தேன் (அந்தக்)
நான் படிக்க நெனச்சதெல்லாம் நீ படிக்கோணம்
என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கோணம்
ஒங்களப் பெத்ததே சந்தோசம் ஒங்களப் பெத்ததே சந்தோசம்
ரெண்டு சிங்கத்தைப் பெத்தது சந்தோசம்
ரெண்டு சிங்கத்தைப் பெத்தது சந்தோசம் (ஒரே ஒரு ஊருக்குள்ளே)
தோளு மேலே என்னத் தூக்கிகிட்டு ஊர்வலமாய் எங்கய்யா
போவாரய்யா
எண்ணத்தேச்சி என்னக் குளிக்க வக்க ஒரு நாட்டியமே எங்கம்மா
ஆடுமப்பா
செல்லம் ரொம்பக் கொடுத்ததாலே வறும தெரியவில்ல
உலகத்த நான் புரிஞ்சுக்கிற வழியும் தெரியவில்ல (செல்லம்)
பெத்தவங்க போனபின் தான் வாழ்க்கை புரிஞ்சிக்சு
உங்களம்மா வந்த பின் தான் பொறுப்பு வந்திச்சி (ஒங்கள பெத்ததெ)
(ஒரே ஒரு)
சபேஷ் குரலில் ஒலிக்கும் இப்பாடலின் திரைக் காட்சியில், தன்
குழந்தைகளை இரு சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று
தெருக்கூத்துக் காண்பித்து, பனை நுங்கு வாங்கிக் கொடுத்து,
ஓடையில் குளிக்க வைக்கும் ராஜ் கிரணையும், எண்ணெய் தேய்த்துக்
குளிப்பாட்டும் சரண்யாவையும் பார்த்த எவரும் தம் தாய்
தந்தையரிடம் தாம் உணர்ந்த அன்பையும், தம் மக்களிடம் தாம்
கொட்டிய பாசத்தையும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த
யதார்த்தமே இத்திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்தது
எனலாம்.
*****