உலகிலேயே உயரமான மனிதர் யார்? யாருடைய கூந்தல்
உலகிலேயே நீளமானது, எவ்வளவு நீளம்? உலகிலேயே அதிக
பளுவை தலைக்கு மேலே தூக்கியது யார், எங்கே? உலகிலேயே
அதிக பளுவை இழுத்தவர் யார்? இப்படி கேள்விகளைக்
கேட்டுக் கொண்டே போகலாம் - மனம் போனபடி!
அதிகாரபூர்வமான, உண்மையான பதில்களுக்கு எங்கே போவது,
யாரிடம் கேட்பது?
கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸ் இதற்கான
அதிகாரபூர்வமான, உண்மையான பதில்களை நன்கு ஆராய்ந்த
பின்னர் தருகிறது! இதில் பதிந்து கொள்வதற்காகவே
உலகெங்கும் ஏராளமான இமாலய சாதனைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இமாலய சாதனைகளை வீட்டின்
முன்னறையில் உட்கார்ந்து பார்த்து பிரமிக்க முடியுமா?
முடியும்!
சில வாரம் முடங்கிக் கிடந்த ஏ.எக்ஸ்.என்
('AXN')
சேனல் மீண்டும் செயல்படத் துவங்கி விட்டது. இதில்
அனைவரும் விரும்பிப் பார்க்கும் முக்கிய
நிகழ்ச்சிகளில் அல்டிமேட் கின்னஸ் வோர்ல்ட்
ரிகார்ட்ஸ் பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சியாகும்! (செவ்வாய்க்கிழமை
தோறும்
Guinness World records
புதன்கிழமை தோறும்
Ultimate Guinness World records
)
மனித சக்தியின் உச்ச பட்ச பரிமாணத்தைக்
காண்பிப்பதில்தான் எத்தனை விதம்! முகமெங்கும்
தேனிக்கள் அடையென அப்பி இருக்க புன்னகை பூக்கும்
முகம்! நெருப்பு உடலெங்கும் பற்றி எரிய ஓடும் மனிதன்!
சில வியப்பூட்டும்; சில திகைப்பூட்டும்; சிலவற்றைப்
பார்த்தால் பைத்தியக்காரத்தனமானது என்றே தோன்றும்!
உலகின் சாதனைகள் அனைத்துமே கின்னஸ் வோர்ல்ட்
ரிகார்ட்ஸில் அதற்குரிய பார்வையாளர்களோடு
அங்கீகரிக்கப்பட்ட பின் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த கின்னஸ் ரிகார்டுகள் துவங்கியதே ஒரு சுவையான
நிகழ்ச்சி மூலம் தான்!
1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கின்னஸ்
ப்ரூவரி என்ற நிறுவனத்தின் உரிமையாளரான சர் ஹ்யூ
பீவர் என்பவர் அயர்லாந்தில் உள்ள வெக்ஸ்போர்ட்
என்னுமிடத்தில் ஸ்லானி நதிக்கரையோரம்
வேட்டையாடுவதற்காகச் சென்றார். அப்போது
வேட்டையாடப்படும் பறவைகளிலேயே அதிக வேகமாகப் பறப்பது
எது என்ற சூடான விவாதம் எழுந்தது. ஒருவர் கோல்டன்
ப்லோவர் என்று சொல்ல இன்னொருவர் க்ரௌஸ் பறவைதான்
என்று சொல்ல விவாதம் முடிவில்லாமல் நீண்டது. அன்று
தனது கேஸில்பிரிட்ஜ் இல்லத்திற்கு வந்த பீவர் எல்லா
புத்தகங்களையும் படித்தும் இந்தக் கேள்விக்கு விடை
காண முடியாமல் தவித்தார். இப்படி ஏராளமான பேருக்கு
நிறைய விஷயங்கள் பற்றிய உண்மையான அதிகாரபூர்வமான
பதிவு ஒன்றும் இல்லையே என்று எண்ணினார்.
அவரது கின்னஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த கிறிஸ்டோபர்
சடாவே என்பவர் லண்டனில் நோரிஸ் மற்றும் அவரது சகோதரர்
ரோஸ் மக்விடர் ஆகியோர் இப்படி உண்மைகளை ஆராயும் ஃபேக்ட்
பைண்டிங் ஏஜன்ஸி ஒன்று நடத்துவதைக் குறிப்பிடவே
உடனடியாக அந்தச் சகோதரர்களை தன்னிடம் வருமாறு பீவர்
அழைத்தார், 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கின்னஸ் புக்
ஆஃப் ரிகார்ட்ஸின் முதல் புத்தகம் வெளியானது. ஆயிரம்
பிரதிகள் அடிக்கப்பட்டன. ஆனால் இன்றோ பல லட்சம்
பிரதிகள் உலகெங்கும் விற்கப்படுகின்றன!
அறிவியல் சம்பந்தமான மற்றும் அதி நவீன தொழில்நுட்பம்
சார்ந்த சாதனைகளும் இதில் இடம் பெறுவதால் அனைவரும்
இதைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது.
தொலைக்காட்சியில் மனம் மகிழும் பொழுதுபோக்கு அம்சமாக
இருப்பதுடன் பிரமிக்க வைக்கும் சாகஸங்களையும்
பார்க்க முடிவதால் ஆக்ஷன் சேனலில் வரும் கின்னஸ்
ரிகார்ட் நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் உள்ளிட்ட
அனைவரும் பார்ப்பது வழக்கமாகி விட்டது.
தொலைக்காட்சியிலேயே அதிகம் அழுதது யார், அழுகை
சீரியலை அதிகம் எபிசோடுகள் எடுத்து சாதனை படைத்தவர்
யார், என்பதோடு, அழுகை சீரியலைத் விடாமல் தொடர்ந்து
பார்த்து சாதனை படைத்தவர் யார் என்று போட்டி மட்டும்
வந்தால் கின்னஸ்காரர்கள் தமிழ் நாட்டிலேயே
குடியிருக்க நேரிடும்- சரியான முடிவெடுப்பதற்காக,
இல்லையா?
சரி, கட்டுரை ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
பதில் தெரியாமல் இருக்க முடியாதல்லவா? பதில்களைப்
பார்ப்போம்:-
உலகிலேயே உயரமான மனிதர் சீனாவில் சீஃபெங்கில்
இருக்கிறார். பெயர் ஜை ஷன். இவரது உயரம் 7 அடி 8.95
அங்குலம்.
நீளமான கூந்தல் உடையவர் ஜீ கிப்பிங் என்ற சீன பெண்மணி.
இருப்பது சினாவில் உள்ள கௌன்சி மாகாணத்தில்.
கூந்தலின் நீளம் 18 அடி 5.54 அங்குலம்!
கனமான பொருளை இழுத்தவர் டேவிட் ஹக்ஸ்லி!
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 187 டன் எடையுள்ள
விமானத்தை 298.5 அடி தூரம் 1 நிமிடம் 27.7
விநாடிகளில் இழுத்தார். 1995ம் ஆண்டு அக்டோபர் 15ம்
தேதி இந்த நிகழ்ச்சியை அவர் செய்தார்.!
கனமான பொருளைத் தலைக்கு மேலே தூக்கியவர்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஈவான்ஸ்! 159.6 கிலோ
எடையுள்ள காரைத் தன் தலைக்கு மேலே தூக்கி 33
விநாடிகள் வைத்திருந்தார். மிகவும் அபாயகரமான இந்தச்
செயல் உலகம் முழுவதும் பரபரப்பான செய்தியாகப்
பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடந்த தேதி 1999ம் ஆண்டு
மே மாதம் 24ம் தேதி.
இன்னும் ஆயிரக்கணக்கான சாதனைகளை அறிய பார்த்தும்
படித்தும் மகிழ வேண்டிய ஒன்று கின்னஸ் வோர்ல்ட்
ரிகார்ட்ஸ்! சின்னத்திரைக்கு நாம் ஒதுக்கும்
நேரத்தில் இதற்கும் நேரம் ஒதுக்கலாமே!
நன்றி: சின்னத்திரை
*****