பருத்தி வீரனின் வெற்றிக்குப்பிறகு டைரக்டர் அமீர்
மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கிறார்.
ரஜினி, மற்றும் முதலமைச்சரிடம் பாராட்டுப்
பெறுவதென்றால் சும்மாவா? படத்தைப் பார்த்துவிட்டு
ரஜினி சொன்னது, "இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு
மீண்டும் 16 வயதினிலே படத்தைப் பார்ப்பதுபோல்
இருந்தது. அது என்னுள்ளே புகுந்து என்னவோ செய்தது.
இந்த அனுபவம் மிகவும் சக்தியளிப்பதாக இருந்தது" எனப்
பாராட்டியிருக்கிறார். முதலமைச்சர் கருணாநிதியோ, "காமிராவை
எங்கோ வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்தது போலிருக்கிறது".
படம் பற்றி இன்னொரு தகவல், வெளியான இரண்டு வாரத்தில்
வசூலை அள்ளித் தருகிறாராம் இந்த வீரன். இன்னமும்
டிக்கெட் கிடைக்காமல் திரும்புகிறார்களாம்.
***
மொழி படம் வெளிவருவதற்கு முன்னரே திருட்டு
வி.சி.டி.க்கள் வெளிவந்துவிட்டன. இந்தத்
தொல்லைகளிலிருந்து மீள்வதற்கு மொழி படத்
தயாரிப்பாளர்கள் அவர்களே படத்தின் டி.வி.டி. மற்றும்
வி.சி.டி.க்களை வெளியிடப்போகிறார்களாம்.
***
சினிமா உலகில் அரசியலைப் போல நிரந்தர நண்பர்களும்
இல்லை, நிரந்தரப் பகைவரும் இல்லை; சிம்பு, தனுஷ்
விஷயத்தில் இது மெய்யாலுமே நடந்திருக்கிறது. ஏதோ
இருவருக்குமுள்ள பகை முடிந்து விட்டது போலவும்,
சுமுகமாகி விட்டது போலவும் தோற்றமளித்தாலும்
உண்மையில் அது நீறு பூத்த நெருப்பாக இன்னும்
தொடர்கிறது. செல்வராகவன் தயாரித்து ஜவஹர் டைரக்ட்
செய்யும் படத்தில் தனுஷ் நயன்தாராதான் நாயகியாக
நடிக்க வேண்டும் என்று சொல்கிறாராம். பகைவனுக்குப்
பகைவன் நண்பன் என்ற விதிதான். சிம்பு வந்த வம்பை
விடுவாரா? தன்னுடைய படத்தில் தனுஷுக்கு எதிரான பஞ்ச்
வசனங்களை வைத்திருக்கிறாராம்.
இன்னொரு செய்தி, நயன்தாரா விவகாரத்தால் சிம்புவுடன்
நடிக்க பாவ்னா, ரீமா சென், கோபிகா என பல நாயகிகள்
நடிக்க மறுக்கிறார்களாம். அலை படத்தில் சிம்புவின்
ஜோடியாக நடிக்க திரிஷாவுக்கு வலை விரிக்கப்படுகிறது,
சிக்குவாரா திரிஷா?
***
வரப்போகும் வெயில் காலத்தைப் போலவே சினிமா உலகமும்
சூடாகிக் கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்
பந்தயம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி, கமலின்
தசாவதாரம், கேப்டனின் சபரி என்று இந்தக் கோடைகாலம்
அனல் பறக்கப்போகிறது.
***
சபரி படத்தைப் பற்றிய தகவல்: மருத்துவமனைகளில்
நடக்கும் அட்டூழியங்களைப் பற்றியும் மருத்துவத்
தொழிலில் நிலவும் சீரழிவுகள் பற்றியும் ஒரு கிழி
கிழிக்கிறாராம் கேப்டன். ஆனால் ஒன்று, அரசியல் பஞ்ச்
எதுவும் இல்லையாம்!
***
அழகிய தமிழ்மகன் படப்பிடிப்பு படு தீவிரமாக நடைபெற்று
வருகிறது. இதில் விஜய் ஒரு புதுமையான பாத்திரத்தை
ஏற்று நடிக்கிறார். ஆறாவது அறிவு என்னும் ஈ.எஸ்.பி.
சக்தி உள்ளவராக வருகிறார். படம் வெற்றி பெறுமா,
பெறாதா என்று சொல்ல முடியுமா அவரது ஆறாவது அறிவால்?
***
ரம்பாவை எங்கே காணோமென்று தவிக்கும் ரசிகர்களுக்க்கு
ஒரு சேதி. ரம்பா இப்போது பாட்னாவில் பங்கே பிஹாரி
எம்.எல்.ஏ. என்ற போஜ்புரி படத்தில் பிசியாக
இருக்கிறார். அந்தப் படத்தைப் பற்றிப் பேச லாலுவிடம்
சென்ற போது அவர் ரம்பாவைப் பாடச் சொன்னதும் ரொம்பவும்
அலட்டிக் கொள்ள¡மல் ஒரு பாட்டுப் பாடினாராம். லாலூ,
லல்லல்லு என்று பாடியிருப்பாரோ என்னவோ? அகமகிழ்ந்த
லாலு ரம்பாவுக்குப் பரிசளித்தாராம். ரம்பா எங்கே
இருக்கிறார் என்று தெரிந்து விட்டதல்லவா? ஒரு பெரிய
கவலை விட்டது.
***
பத்மஸ்ரீ கமல்ஹாசன் வாங்கியிருக்கும் விருதுகளுக்குப்
பஞ்சமே இல்லை. இதுவரை 171 விருதுகள் வாங்கியிருக்கிறார்.
மும்பையில் உள்ள
UFO
Digital சினிமா
என்னும் பெயர் பெற்ற நிறுவனம்
'Contemporary
living legend of the year' என்ற
விருதைக் கமலுக்கு அளிக்கப்போகிறார்கள். முத்தத்தில்,
சாரி, மொத்தத்தில் இது அவரது கிரீடத்தில் இன்னொரு
சிறகு.
***
கொசுறு:
காலஞ்சென்ற சங்கீதப் பிதாமகரான செம்மங்குடி சீனிவாச
ஐயர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் கூட
வாங்கி விட்ட நிலையில் அவருடைய அப்பா கிணற்றில்
விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால்
செம்மங்குடி சினிமாவில் நடிக்கவில்லை.
"ராண்டார் கை"
*****