சிவபெருமானின்
திருவிளையாடல்களில் சிலவற்றைத் தொகுத்து ஏ.பி. நாகராஜன்
இயக்கத்தில் 1965ஆம் ஆண்டு வண்ணத்தில் வெளிவந்த திருவிளையாடல்
திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிவபெருமானாக
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பார்வதியாக சாவித்திரி,
மதுரை மன்னன் ஷெண்பகப் பாண்டியனாக முத்துராமன், அரசியாக
தேவிகா, தருமி என்ற புலவராக நாகேஷ், நக்கீரராக ஏ.பி.
நாகராஜன், முருகனாக ஸ்ரீதேவி, விநாயகராக பக்கோடா காதர்,
ஔவையாராக கே.பி. சுந்தராம்பாள், மீனவர் தலைவராக சாரங்கபாணி,
மீனவப் பெண்ணாக மனோரமா, மீனவரில் ஒருவராக கூஜா கருணாநிதி,
தக்ஷனாக ஓ.ஏ.கே. தேவர், ஹேமநாத பாகவதராக
டி.எஸ். பாலையா, அவரது சீடர்கள் பலரில் டி.கே. சம்பந்தம், உசிலை மணி மற்றும் வரகுண பாண்டியனாக ஈ.ஆர். சகாதேவன்,
பாணபத்திரராக டி.ஆர். மஹாலிங்கம், அவர் மனைவியாக ஜி. சகுந்தலா மற்றும் பலர் இப்படத்தில் சக்கைப்போடு போட்டிருக்கின்றனர். கண்ணதாசனின் அழகான பாடல்களுக்குத் திரை இசைத் திலகம் கே.வி. மஹாதேவன் அருமையாக இசையமைத்திருக்கிறார். ஈஸ்ட்மென் கலரில் தேவலோகக் காட்சிகளும் பிறவும் மிகவும் அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நாரதர் கொண்டு வந்த ஞானப் பழத்தைப் பெற ஏற்பட்ட போட்டியில் முருகன் உலகைச் சுற்றி வருமுன் விநாயகன் அம்மையப்பனைச் சுற்றி வந்து பழத்தைப்
பெற்றுக்கொண்டதால் கோபம் கொண்ட முருகன் அம்மையப்பனைப் பிரிந்து சென்று ஆண்டியாகப் பழனி மலைமேல் நிற்க, பார்வதி தேவி முருகனின் கோபம் தணிய, சிவபெருமானின் திருவிளையாடல்களில் சிலவற்றை அவர்க்குக் கூறுவதே கதை.
கைலாயத்தில் பூதகணங்கள் நடனத்துடன் பறை, தாரை, தப்பட்டை, சங்கு, சேகண்டி முதலிய வாத்தியங்கள் இசைக்க நாரதர் பாடும், "தேவா, சம்போ மஹாதேவா" எனும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அமைந்த பாட்டும்,
ஔவையார் பாடும், "ஞானப் பழத்தைப் பிழிந்து", "பழம் நீயப்பா" என்ற பாடல்களும் இத்தொடக்கக் காட்சிகளைத் தூக்கி நிறுத்துகின்றன. குழந்தைப் பருவ ஸ்ரீதேவி முருகனாகவே
காட்சியளிக்கிறார்.
ஞானப் பழத்தை விநாயகன் தந்திரத்தால் அடைந்ததை அறிந்ததும், "பேஷ், நல்ல நாடகம், பெரியோர்களாகச் சேர்ந்து நடத்திய நாடகமல்லவா? மிகவும் நன்றாக இருக்கிறது. வருகிறேன்' என்று கூறி முருகன் அம்மையப்பனிடமிருந்து விலகிச் செல்ல முற்படுகையில் பார்வதி தேவி, "குமரா, எங்களை விட்டு எங்கே செல்கிறாய்?" என்று கேட்க, "எங்கோ செல்கிறேன், எனக்கென ஒரு உலகம், என் நாடு, என் மக்கள் என்று ஏற்படுத்திக் கொண்டு தனிமையில் இருக்கப் போகிறேன், முடிந்தால் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்" என்று கூறிச் செல்வதும்,
ஔவையார் அவரைத் தேற்ற வேண்டி, "வேலவா, வேதமுற்றும் கற்றவன் நீ. அதை உன் தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன் சாமி என்று பெயர் பெற்றாய். அன்புத் தெய்வமே, அருள் வடிவே, சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று என் அறிவுக்கு எடுத்துக் காட்டிய தமிழ்க் கடவுளே, நீ தவறு செய்யலாமா? அம்மையப்பனிடம் கோபப் படலாமா? வேண்டாமையா, வேண்டாம். நீ திரும்பிச் செல்" என்று கூறுகையில் முருகன், "ஔவையே, அம்மையப்பனிடமிருந்து ஒரு பழத்தைப் பெற எனக்கு அருகதை இல்லையா? எனக்கு அப்பழம் தரக்கூடாதா?" என்று கேட்பதும் பின்னர் "பழம் நீயப்பா" பாடலை
ஔவை பாட, "ஆயிரம் முறை நீ ஆறுதல் கூறினாலும் அவற்றைக் கேட்க நான் தயாராக இல்லை, வருகிறேன்" என்று கூறிவிட்டு மயில் மேலேறிச் செல்வதும்
காணக் கண் கொள்ளாக் காட்சிகள்.
தருமி வரலாறு
பார்வதி கூறும் திருவிளையாடல்களில் முதலாவதாக வருவது தருமிக்குப் பொற்கிழியை வழங்கிய கதை. அரசியான தேவிகா அரண்மனை அந்தப்புரத்திலிருக்கும் குளியல் தொட்டியில், "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்" என்ற பி. சுசீலா குரலில் தொடங்கும்
பாடலுடன் குளித்து விட்டு, தலைக்கு சாம்பிராணிப் புகை காட்டிக் கொண்டிருக்கையில், "வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும்
மதுரையிலே" என பி.பி. ஸ்ரீனிவாஸின் குரலில் ஒலிக்கும் பாடல் வரிகளைப் பாடிய படியே அங்கு வந்து சேரும் அரசனான முத்துராமன், அரசியின் கூந்தலில் வரும் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என ஐயம் ஏற்படவே, அதைத் தீர்த்து வைக்கும் புலவருக்கு
ஆயிரம் பொன் பரிசாக வழங்கப்படும் என்று பறை அறிவிக்கிறார்.
புலவர் தருமியான நாகேஷ் அதைக் கேட்டு, "ஐயோ! நான் என்ன பண்ணுவேன்? யாரைக் கேட்பேன்? ஒரு காசா? ரெண்டு காசா? ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே, இந்த நேரம் பாத்தெனக்குப் பாட்டெழுத வல்லே, பாட்டெழுத வல்லே. என் சந்தேகத்தைத் தீக்கறதுக்கே வழியக் காணோம், அரசன் சந்தேகத்த நான் எங்கிருந்து தீக்கப்போறேன். எனக்கில்லே, எனக்கில்லே, வேறெவனோ, வேறெவனோ அடிச்சிக்கிட்டுப் போயிடப் போறான். சொக்கா! அரசன் கொடுக்கற ஆயிரம் பொன்னையும் எனக்கே கெடைக்கற மாதிரி அருள்புரிய மாட்டாயா?" எனப் பலவாறு புலம்பி இறைவனிடம் வேண்டுகையில் சொக்கநாதரான சிவாஜி "புலவனே" என்றழைத்தபடியே அங்கு வர அந்தக் காட்சியின் உரையாடல்கள் களைகட்டும்
"யாருய்யா அது?"
"அழைத்தது நான் தான்"
"ஏன் அழைச்சீங்க, யார் நீங்க?"
"சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் கூட்டி, சுந்தரத் தமிழினிலே பாட்டிசைத்து, செந்தமிழ்க் கவி பாடும் புலவன் நான்"
"தண்டோரா போட்டதை நீங்களும் கேட்டாச்சா? என் வயித்தில அடிக்கறதுக்குன்னே வந்திருக்கீங்க, ஓ ஹோ ஹோ ஹோ"
"பாண்டியன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாட்டுனக்குக் கிடைத்து விட்டால், பரிசனைத்தும் உனக்குக் கிடைக்குமல்லவா?"
"ஐயஹோ, அந்தப் பாட்டு மாத்திரம் எனக்குக் கெடச்சது, அடுத்த க்ஷணம் என் கையில ஆயிரம் பொன் பரிசு."
"கவலைப் படாதே, பாட்டை நான் உனக்குத் தருகிறேன்"
"என்னது, பாட்டே நீங்க தாங்களா? உங்க பாட்டைக் கொண்டு
போய் என் பாட்டுன்னு சொல்லிக்கவா? ஏற்கெனவே சொந்தமா
எழுதற பாட்டையே கன்னாபின்னானு பேசறாங்க, 'கொஞ்சம்
வசன நடையா இருக்கு, இருந்தாலும் புலவன்'னு ஒத்துகிட்டிருக்காங்க,
அதையும் கெடுக்கலாம்னு பாக்கறயா? யோவ், நீ புதுசாப்
பாட்டெழுதறே, அதை நீயே கொண்டுபோய்க் கொடுத்தா எப்படி உதைப்பாங்களோன்னு பயந்து என் தலைலே கட்டப் பாக்கறே"
"என் திறமை மீது உனக்குச் சந்தேகமிருந்தால் என்னைப் பா£ட்ஷித்துப் பாரேன், உனக்குத் திறமை இருந்தால்"
"என்னது, என் கிட்ட, என் கிட்டயே மோதப் பாக்கறியா? நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன், ஆனா என் புலமையைப் பத்தி உனக்குத் தெரியாது, தயாரா இரு"
"ம்.. கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?"
"ஆங்.. நீ கேட்காதே, நானே கேக்கறேன், எனக்குக் கேட்கத் தான் தெரியும்" என்று விட்டு அவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு சிவாஜி அளிக்கும்
பதில்களும் மிகவும் சுவாரஸ்யமானவை.
பிரிக்க முடியாதது என்னவோ? - தமிழும் சுவையும்;
பிரியக் கூடாதது? - எதுகையும் மோனையும்;
சேர்ந்தே இருப்பது? - வறுமையும் புலமையும்;
ம் ஹ¥ம்.. ம் ஹ¥ம்.. (இருமல்)
சேராதிருப்பது? - அறிவும் பணமும்
சொல்லக் கூடாதது? - பெண்ணிடம் ரகசியம்;
சொல்லக் கூடியது? - உண்மையின் தத்துவம்
பார்க்கக் கூடாதது? - பசியும் பஞ்சமும்;
பார்த்து ரசிப்பது? - கலையும் அழகும்
கலையிற் சிறந்தது? - இயல் இசை நாடகம்;
நாடகமென்பது? - நடிப்பும் பாட்டும்
பாட்டுக்கு? - நாரதன்;
வீணைக்கு? - வாணி;
அழகுக்கு? - முருகன்;
வில்லுக்கு? - விஜயன்;
சொல்லுக்கு? - அகத்தியன்;
ஆசைக்கு? - நீ; அறிவுக்கு? - நான்
தோல்வியை ஒப்புக்கொள்ளும் நாகேஷ் ஒலையை எடுத்துக்கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று அங்கே நக்கீரர் ஏ.பி. நாகராஜனிடம்
சிக்கிக்கொண்டு படும் பாடு மிகவும் வேடிக்கை.
நாகேஷ் ஓலையைப் பார்த்துப் பாடலை வாசிக்க அதைக் கேட்டு அரசனின் சந்தேகம் தீர அரசன் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பையை நாகேஷின் மடியில் போடும் தருவாயில், "மன்னா, சற்றுப் பொறும், புலவரே, சற்று இப்படி வாரும்" என நக்கீரர் இடைமறிக்க நாகேஷ், "வர மாட்டேன், பரிசை வாங்கிக்கொண்டு பிறகு வருகிறேன், அதற்குள் என்னய்யா அவசரம்?" என, நக்கீரர், "அதில்தான் பிரச்சினை இருக்கிறது, இப்படி வருகிறீரா?" என அழைத்து, "இப்பாடலை இயற்றியது நீர் தானே?" எனக் கேட்க நாகேஷ், "பின்னே, மண்டபத்தில யாராவது எழுதிக் கொடுத்து, அதையா
வாங்கிட்டு வந்திருக்கேன், என்னுடையது தான், என்னுடையது தான், என்னுடையது தானையா" என்பார் நடுங்கும் குரலில்
"புலவரே, உமது பாடலில் பிழை இருக்கிறது" என நக்கீரர் சொல்ல நாகேஷ், "இருந்தாலென்ன? எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்த படி பரிசைக் குறைத்துக் கொள்ளுங்களேன்" என, நக்கீரர், "புலவரே, இச்சபையிலே முறையானதொரு பாட்டுக்கு எம்மன்னவன் பரிசளிக்கிறாரென்றால் அதைக் கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான் தான், ஆனால் அதே சமயம் இறையனாரும், எம்பெருமான் முருகவேளும், அகத்தியரும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்திலே பிழையான ஒரு பாட்டுக்குப் பாண்டியன் பரிசளிக்கிறானென்றால் அதைக் கண்டு வருத்தப் படுபவனும் அடியேன் தான்" என, நாகேஷ், "இங்கே எல்லாமே நீர் தானோ?" என்று கேட்டுவிட்டு, "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமையா. பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்" என்றுவிட்டு “எனக்குப் பரிசு வேண்டாம்" என்று கூறிவிட்டு அவையை விட்டு பின்னங்கால் பிடரியிலிடிக்க ஓடுவது நகைச்சுவையின் உச்சம்.
அதன்பின் நாகேஷை அழைத்துக்கொண்டு சபைக்கு வரும் சிவாஜி நக்கீரரிடம், "புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, புரந்தது, புரவாதது, அனைத்துமறிவோம், அது பற்றி உமது அறிவுரை தேவையில்லை, எல்லாம் எமக்குத் தெரியும்" என கர்ஜிப்பார். சிம்மக்குரலோனின் குரலில் அந்த வசனம் பெருமை பெற்றது
பின் நக்கீரர் பாடலின் பொருளை சொக்கநாதப் புலவரை விளக்கச் சொல்லுவார்
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற்றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
"அழகிய மலர்களினிடத்தே உள்ள மகரந்தப் பொடிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் தும்பி இனத்தைச் சேர்ந்த உயர்ந்த ஜாதி வண்டே, நீ கண்ட மலர்களில் இம்மங்கையின் கூந்தலை விட அதிக மணமுள்ள மலரும் உண்டோ?" என்று கேட்பதைப் போல் எழுதியிருக்கிறேன்" என அவர் கூற, நக்கீரர், "இதிலிருந்து எம் மன்னவர்க்கு நீர் கூறும் முடிவு?" எனக்கேட்க, சிவாஜி,
"புரியவில்லை? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பது தான் எமது தீர்ப்பு" எனவே நக்கீரர் அது தவறு என உக்கிரமாக வாதாட சிவபெருமானான சிவாஜி ஒரு கணம் தனது நெற்றிக் கண்ணைக் காட்டி,
"நக்கீரனே, நன்றாக என்னைப் பார், நான் எழுதிய தமிழ்ப் பாட்டு குற்றமா?" எனக் கேட்க நக்கீரர் அவரைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, "புலவரே, நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக, உமது நெற்றியிலொரு கண் காட்டிய போதும், உமது உடம்பெல்லாம் கண்ணாகிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என முழங்கும் காட்சி செல்லுலாய்டில் திரைப்படம் காண்கிறோம் என்பதையே மறக்கச் செய்யும். அற்புதமான பொருளுள்ள வசனங்கள்; வசனத்துக்கு உயிர் தந்த உச்சரிப்பு; காட்சிக்குப் பொருந்திய கம்பீரமான நடிகர்கள்...
(இன்னுமிருக்கிறதே...)
திருவிளையாடல்
டிவிடி வாங்க இங்கே சுட்டுங்கள்
****