<<<<<<சென்ற
வாரம்
மீனவர் தலைவன் மகளாக சக்தி
சக்தியான சாவித்திரி சாபத்தால் மீனவர் தலைவன் சாரங்கபாணியின் மகளாகப் பிறந்து வளர்கையில் கடலில் ஒரு ராட்சத சுறா மீன் வந்து
மீனவர்கள் பலரைக் கொன்றும் அவர்களது வலைகளை அறுத்தும் அட்டகாசம் செய்கிறது. அச்சுறாமீனை யார் கொல்கிறார்களோ
அவ்வீரனுக்குத் தன் மகளையே தருவாதாக மீனவர் தலைவன் அறிவிக்கிறார். சிவனான சிவாஜி உடலெங்கும் கறுப்பு நிறத்தில் தோன்றி ஒரு தினுசாக நடந்து வந்து சாவித்திரியை கலாட்டா செய்வதும் பின்னார் சுறாமீனைக் கொல்வதும், சக்தியை மணமுடித்து மீனவர்க்கு அருள் புரிவதுமாகிய காட்சிகள் நன்கு படமாக்கப் பட்டுள்ளன. பி. சுசீலா குழுவினர் பாடும், "ஏலேலோ, ஏலோ ஏலேலோ, நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பொண்ணு" எனும் பாட்டு மிக இனிமையானது.
தக்ஷன் வரலாறு
தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டதால் தக்ஷன் சிவனுக்கு
எதிரியாகி சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகம் செய்கிறான். தந்தை மீது கொண்ட பாசத்தால் சக்தியான சாவித்திரி சிவனான
சிவாஜியின் சொல்லை மீறி தக்ஷனான ஓ.ஏ.கே. தேவர் நடத்தும் யாகத்துக்குச் செல்கிறார். அங்கு யாகம் தொடங்குவதைக் கண்ணுற்று,
"நிறுத்துங்கள் யாகத்தை" என்று கூறிப் பின், தந்தையே,
அனைத்துமறிந்த தாங்களே ஈசனை அழைக்காமல் யாகத்தைத் துவங்கலாமா?" என்று கேட்க தக்ஷன், "என்னை மதிப்பவர்களை நான் அழைத்து விட்டேன். மதிக்கத் தவறியவர்களை எதிர்க்கவும் துணிந்து விட்டேன், அதைக் கேட்க நீ யார்?" என்று கூற சக்தி, 'உம்மையும் இவ்வுலகத்தையும் கட்டிக்காக்கும் ஈசனின் மனைவி" எனவே, "ஈசன், யாரவன்? இறந்தவர்களின் சடலங்களை எரித்த சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ளும் பித்தன். பேய்கள் நடமாடும் சுடுகாட்டைக் கட்டிக் காக்கும் சடையன். அந்த இடுகாட்டுத் தலைவனின் மனைவியை எதிர்கொண்டழைக்க இங்கு யாரும் விரும்பவில்லை, போய்விடு" என்று அவமரியாதையாகக் கூற, அவனை சபித்துவிட்டு சிவலோகம் திரும்புகிறார் பார்வதி. சிவன், "நில், யார் நீ? எங்கு வந்தாய்? எந்த முகத்தோடு என்னைப் பார்க்க வந்தாய்?" என்று கோபமாய்க் கேட்க, "நான் உங்கள் மனைவி" என சக்தி கூற, சிவன், "என் சொல்லை மீறி என் வாயில் படியைக் கடந்த போதே என் மனைவி இறந்து விட்டாள், இப்போது என் முன் நிற்பது என் பரம எதிரி தக்ஷனின் மனைவி தாக்ஷ¡யிணி தான்" எனக்கூற சிறிது நேரம் சிவனுக்கும் சக்திக்கும் மாபெரும் யுத்தம் நடக்கிறது. இறுதியில் சக்தியை சிவன் தனது வடவாமுகாக்னியால் எரித்துவிட்டு உக்ர தாண்டவம் ஆடுவார். சிவாஜி தனித்து ஆடும் அந்த நடனம் மிகவும் அற்புதம்.
ஹேமநாத பாகவதர்
வரகுண பாண்டியன் (ஈ.ஆர். சஹாதேவன்) ஆட்சியில் இசையில் புகழ்பெற்ற ஹேமநாத பாகவதர் எனும் பாடகர் (டி.எஸ். பாலையா) பல
நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அங்குள்ள பாடகர்களனைவரையும் வெற்றி கொண்ட பின் ஒரு நாள் மதுரையம்பதிக்குத் தன் சீடர்களான உசிலை மணி, டி.கே. சம்பந்தம் மற்றும் பலருடன் விஜயம் செய்கிறார். அங்கே அரச சபையில் பால முரளி கிருஷ்ணா பாடும், "ஒரு நாள்
போதுமா" என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடுகிறார். பாலையா அப்பாடலுக்கு வாயசைப்பதும் பலவிதமான தலையசைப்பு, கையசைப்புடன் கூடிய அபிநயங்கள் காட்டுவதும் மிகவும் அருமை. உண்மையிலேயே அவர்தான் அப்பாடலைப் பாடுகிறாறோ என்று மலைக்க வைக்கும்
நடிப்பு, சபாஷ். பாலையாவுக்கு நிகர் பாலையாவே தான். வேறொருவரும் இல்லை.
பாடலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் ஒரு பண முடிப்பைப் பரிசாக அளிக்கையில் பாலையா, "வரகுணா, இந்த சாதாரணமான பரிசுக்காக நான் பாடவில்லை. பின் ஏன் பாடினேன் என்று கேட்கிறாயா? நீ கூறியது போல் முத்தமிழும் சிறந்த இந்தப் பாண்டிய நாட்டிலே உன்னுடைய ஆஸ்தான வித்துவான் எவனேனும் இருந்தால் என்னோடு போட்டியிட்டுப் பாடச் சொல். போட்டியில் நான் தோற்று உன் வித்துவான்
ஜெயித்து விட்டால் இதுவரை நான் பெற்ற பரிசு, என் இசை முழுவதும் இப்பாண்டிய நாட்டிற்கு அடிமை என்று நான் உனக்குப் பட்டயம் எழுதித் தருகிறேன். அதற்கு மாறாக உன் வித்துவான் தோற்று நான் ஜெயித்து விட்டால் என் பாட்டிற்கு இந்தப் பாண்டிய நாடே அடிமை என்று நீ எனக்கு எழுதித் தரவேண்டும், அது மட்டுமல்ல, அதன் பிறகு இந்தப் பாண்டிய நாட்டிலே எவனும் வாயைத் திறந்து பாடக்
கூடாது. சம்மதமா?" என்று கேட்பார். அரசன், "தங்கள் பாட்டைக் கேட்கத்தான் அனைவரும் கூடியிருந்தோமே தவிர, இப்படி ஒரு
திட்டத்தைக் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பாண்டிய நாட்டுப் பாடகர்கள் இசையில் இளைத்தவர்கள் அல்ல. ஒரு
நாள் அவகாசம் கொடுங்கள்" என்று கேட்டுவிட்டு, பின்னர் தம் ஆஸ்தானப் பாடகர்களிடம், "ஆஸ்தான வித்துவாங்களே, உங்களில் யார் ஹேமநாதருடன் போட்டியிட்டுப் பாடப் போகிறீர்கள் என்பதை முடிவு கட்டி விட்டீர்களா?" என்று கேட்க அவர்கள், "மன்னா, யார் பாடப்
போகிறீர்கள் என்று கேட்பதை விட யார் உயிரை விடப் போகிறீர்கள் என்று கேட்பது சாலச் சிறந்தது" என்பர். பின்பு அரசன், ஆலயத்தில் அன்றாடம் பக்திப் பாடல்களைப் பாடும் பாணபத்திரரைப் போட்டிக்குப் பாடச் சொல்லலாம்" என்பார்.
"இல்லாததொன்றில்லை, எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லிவைத்தாய்" என்று தொடங்கும் விருத்தப் பாடலைப் பாடியவாறே சிவனை வழிபடும்
பாணபத்திரரான டி.ஆர். மஹாலிங்கம் அரசனிடமிருந்து அழைப்பு வரவே அரசனைக் காணச் செல்கிறார். அரசன் கூறியதைக் கேட்ட பாணபத்திரர், "மன்னா, இசையில் ஹேமநாதருக்கு இணை யாருமே இல்லை. அவரை என்னால் போட்டியில் வெல்ல முடியாது" எனக்கூற மன்னன் கண்டிப்புடன், அவரைப் போட்டியில் பங்கேற்குமாறு கட்டளையிட்டு விடுவார்.
பாணபத்திரர் சிவபெருமானிடம், "இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை"
எனும் இனிய பாடலைப் பாடி மதுரையம்பதியைக் காக்க வேண்ட, சிவன்
ஒரு விறகு வெட்டியின் வேடம் பூண்டு தலையில் சில விறகுக் கட்டைகளைச் சுமந்து கொண்டு,
"பாத்தாப் பசுமரம், படுத்து விட்டா நெடுமரம்" எனும் டி.எம்.எஸ். பாடிய பாடலைப் பாடிக்கொண்டே விறகு விற்கும் பாவனையுடன் ஹேமநாதன் சீடர்களுடன்
தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து, விடுதித் திண்ணையில் அமர்ந்து கொண்டு, "பாட்டும் நானே, பாவமும் நானே" என்ற டி.எம்.எஸ்.
பாடலைப் பாட, அதைக்கேட்டு வெலவெலத்தும் போகும் பாலையா வெளியே வந்து, " சற்று நேரத்துக்கு முன் தேவகானம் கேட்டதே, யார்
பாடினார்கள்? நீ கேட்டாயா?" என்று சிவாஜியைப் பார்த்துக் கேட்க, சிவாஜி, "ஐய்யய்யே, யாரும் பாடலைங்களே, நான் தேன் தூக்கம் வராம சித்த நேரம் கத்தினேன்" என்பார் அவர். பாலையா, "அசையும் பொருள்களெல்லாம் ஒரு நாழிகை அப்படியே நின்று விட்டன, அப்படிப்பட்ட ஒரு
பாட்டைக் கத்தினேன் என்கிறாயே. என் பாட்டிற்கு மனிதர்கள் தான் தலையசைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அசையும் பொருள்
நிற்கவும் நின்ற பொருள் அசையவும் ஒரு பாட்டை இந்தப் பாண்டிய நாட்டிலே தான் கேட்டேன். அப்பா, இந்த இசையை நீ யாரிடம் கற்றுக் கொண்டாய்?" என்று கேட்க சிவாஜி, " ஐயா, இந்த ஊர்லே பாணபத்திரர்னு ஒருத்தர் இருக்கார். அந்தப் பாணபத்திரர் கிட்டே நான் சின்னப் பிள்ளையா இருந்த போது என்னை சங்கீதம் கத்துக்க அனுப்பினாங்க, ஆன என் மர மண்டைக்கு சங்கீதம் ஏறலைங்க, சீ, மடப் பயலே,
ஞானசூன்யம் உனக்கு சங்கீதம் சுட்டுப் போட்டாலும் வராதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டாருங்க. அதுக்கப்புறம் வயித்துப் பொழப்புக்காக
விறகு வெட்டிப் பொழைக்குறேனுங்க. எப்பவாவது பொழுது போகலைன்ன அவர் சொல்லிக் கொடுத்த பாட்டிலே ஏதாவது ஒண்ண எடுத்து அப்படியே உடுறதுங்க, அம்புட்டு தேன்" என்றதும் பாலையா நிலைகுலைந்து போய்த் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு தன்னைத் தானே ஒரு சுற்று சுற்றி வந்து, சோர்வுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே, "பாணபத்திரர் கிட்டே சங்கீதம் கத்துக்கிட்டு உருப்படாமப் போனவனே இப்படிப் பாடினா, நாளைப் பாணபத்திரர் வந்து..." என்று தனக்குத்தானே புலம்பிவிட்டு, சிவாஜியிடம் தான் தோற்று விட்டதாக ஓலை எழுதிக் கொடுத்து விட்டு சீடர்களோடு மூட்டையைக் கட்டும் காட்சி பாலையாவின் நகைச்சுவைத் திறமையைப் பரிபூரணமாகச் சித்தரிக்கின்றது.
பார்வதி கூறிய கதைகளைக் கேட்டு சமாதானமாகும் முருகன் அன்னையிடமும் அங்கு அப்போது வரும் தந்தையிடமும் தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கையில் சிவாஜி, "பாதகமில்லை, பழத்தின் காரணமாகக் கோபம் கொண்டு இங்கு வந்து நின்றதால் இம்முதல் இவ்விடம் பழம் நீ என்று அறியப் படட்டும்" என அருளுகையில் அங்கு வரும் வை, "ஞான பண்டிதா, நீ இப்போது அம்மையப்பனுடன்
காட்சியளிப்பது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது. இதை விடுத்துத் தனித்து நின்றாயே, எங்கே நான் எழுதிய 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பாட்டுக்கு உயிரில்லாமல் போய்விடுமோ என்று எண்ணினேன், அதற்கு உயிர் கொடுத்த வேலவா, உன்னை என் மனமாற வாழ்த்துகிறேன் என்பார். இறுதியில், "வாசி வாசியென்று", "ஒன்றானவன் உருவில் இரண்டானவன்" எனும் இரு பாடல்களையும் பாடி முடிக்கையில், "ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்" எனும் வரிகள்
ஒலிக்கையில் சிவாஜியின் ஒரு பாதியும் சாவித்திரியின் மறு பாதியும் சேர்ந்து அர்த்தநா¡£ஸ்வரராகக் காட்சியளிப்பது கம்ப்யூட்டர் அனிமேஷன் போன்ற தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத அக்காலத்திலும் மிகவும் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
எத்துணை முறை பார்த்தாலும் அலுக்காத அருமையான எல்லா அம்சங்களும் கொண்ட படம் திருவிளையாடல்.
****