
போக்கிரி,
பொல்லாதவன், பொறுக்கி என்றெல்லாம் அடிதடிகளும் வன்முறையும்
மலிந்த படங்களே பார்த்துப் பழகிவிட்ட திரை ரசிகர்களுக்கு
மொழி ஒரு மிக வித்தியாசமான படம். இப்படி ஒரு படத்தை
எடுக்கத் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் "செம
தில்" இருக்க வேண்டும்.
ராதா மோகனும் ப்ரகாஷ் ராஜும் இணைந்து கொடுத்த 'அழகிய
தீயே' படத்திற்குப் பின் மேலும் ஒரு தொடர் முயற்சிதான்
மொழி.
படத்தின் பெயர்தான் மொழி. ஆனால் படம் முழுவதும்
மவுனம்தான் பேசுகிறது. எளிமையான ஒரு கதையை
எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் காட்சிகளில்
அமைத்திருக்கிறார் இயக்குனர்.
இசைக் கலைஞர்களான இரு நண்பர்கள் பிரகாஷ் ராஜும்
ப்ரித்வி ராஜும். ப்ரித்வி ராஜ் காதலிக்கிற பேச
முடியாத, காது கேளாத, எனக்கு இரக்கம் வேண்டாம் எனப்
பிடிவாதம் பிடிக்கிற தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக
ஜோதிகா, அவரது சிநேகிதியாக, இளம் விதவையாக சொர்ண
மால்யா, இவர்களே படத்தின் தூண்கள். இவர்களைச் சுற்றி
சின்னச் சின்ன ரசிக்கும் படியான பாத்திரங்கள், தன்
இளம் மகனை 1984ம் ஆண்டில் ஒரு விபத்தில் இழந்து
அதற்குப் பின் நினைவே ஸ்தம்பித்துவிட்ட ஒரு
பேராசிரியர், அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்ரடரி,
ஜோதிகாவின் பாட்டி, இப்படி சின்னப்
பாத்திரங்களானாலும் மனதில் நிற்கிறார்கள் அனைவரும்.
எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் திறமை பெற்ற
ஜோதிகா இந்த சவால் நிறைந்த பாத்திரத்தில் வாழ்கிறார்.
அவரது தவிப்புகள், கோபங்கள், பாசங்கள் அனைத்தையும்
அவரது விழிகள் பேசுகின்றன. அவர் நடிப்பைத் துறக்க
முடிவு செய்திருப்பது பட உலகிற்கு ஒரு இழப்பு. (சூர்யாவின்
லாபம் தமிழ்த் திரைப்பட நஷ்டம்).
பிருத்விராஜ் நடிப்பில் எந்த விதத்திலும்
சளைக்கவில்லை. எப்போதும் ஆர்ப்பாட்டமாக வரும் ப்ரகாஷ்
ராஜ் இதில் ஒரு காமெடி நிறைந்த பாத்திரத்தில்
பின்னியிருக்கிறார்.
விஜியின் வசனங்களில் காமெடியும் கவிதையும் இணந்து
கைகோர்க்கின்றன.
"காற்றின் மொழியே ஒலியா இசையா" என்பது போன்ற
வைரமுத்துவின் கவிதை வரிகளுக்கு வித்யாசாகரின்
இசையில் மனத்தை வருடுகின்றன சுகமான ராகங்கள்.
மொத்தத்தில் மொழி- ஒரு இனிய கவிமொழி! தமிழ்ப்பட
உலகிற்கு நம்பிக்கை தரும் ஒரு புதிய வழி!
*****