ஃபெயில் காலம் (1)

“பெரியப்பா மெட்ராஸ்க்கு நாளக்யாம்மாப் போறாவ?” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட செல்லம்மாவைக் கூர்மையாய்ப் பார்த்தாள் அம்மா.

“என்ன, பெரியப்பா போறாவளான்னு மொள்ளமாக் கேக்க? நீயுந்தானட்டி அவியக் கூடப் போற! ராத்திரி ஏழு மணிக்கி ரயிலாம். வீராவரத்ல போய் ரயிலேறணும். நாலு மணிக்கெல்லாம் பெரியப்பா வந்துருவாவ. அப்ப அளுதுட்டு நிக்யாத. உடுப்பெல்லாம் எடுத்து வச்சிட்டியா?”

செல்லம்மாவுக்கு இப்போதே அழுகை வரப் பார்த்தது. கடந்த ஒரு வாரமாய், நாள் தவறாமல் அம்மா இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிற சமாச்சாரம் தான். ஆனாலும் அதை முழுமையாய்க் கிரகித்துக் கொள்ள இவளுடைய மனசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. முன்னே பின்னே தெரியாத மெட்ராஸில் போய், முன்னே பின்னே தெரியாத ஒரு வீட்டிலே எடுபிடி வேலை செய்யப் போக வேண்டுமாம்.

திருநவேலிக்கார நாடாக்கமார் மெட்ராஸில் போட்டிருக்கிற பலசரக்குக் கடை ஒன்றில் வேலை பார்க்கிற பெரியப்பாவுக்கு, அந்தக் கடையில் சரக்கு வாங்குகிற ஒரு வசதியான வீட்டில், வீட்டு வேலைக்கு பன்னிரண்டு பதிமூணு வயசுப் புள்ள ஒண்ணு வேணும். வீட்டோட இருக்கணும் என்று தெரிய வந்ததும், அவருக்கு செல்லம்மாவின் ஞாபகம் வர, தாலியறுத்த தம்பி பொஞ்சாதிக்குக் கடுதாசி போட்டு அவர், வீட்டு வேலைக்கு செல்லம்மாவை ஏற்பாடு செய்து விட்டார்.

“உடுப்பு ஒண்ணும் எடுத்து வக்யலம்மா…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

“வக்யாட்டிப் பரவாயில்ல, வெள்ளன எந்திரிச்சி எடுத்து வச்சிக்கலாம். இப்பப் படுத்து ஒறங்கு” என்று அம்மா தம்பிக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

படுத்துக் கொண்ட பிறகு, “ஒனக்குப் பாய எடுத்துக் குடுக்காமப் படுத்துட்டேம் பார்” என்று எழும்பக் கையூன்றிய அம்மாவிடம், “நானே எடுத்துக்கிருதேம்மா” என்றாள் செல்லம்மா.

“ஒனக்கு எட்டாதேட்டி?”

“இஸ்டூல் போட்டு ஏறி எடுத்துக்கிருதேம்மா.”

ஸ்டூல் போட்டு ஏறி, பரணிலிருந்து பாயை உருவினபோது, பாயை முந்திக் கொண்டு ஒரு அட்டை வந்து விழுந்தது. ஒரு மரக்கைப்பிடியில் பொருத்தப்பட்ட அட்டை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்கிற வாசகம் ரெண்டு பக்கமும் எழுதப்பட்ட அட்டை.

இந்த அட்டையை உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் போன வருஷம் செல்லம்மா பள்ளிக்கூடப் பிள்ளைகளோடு ஊர்வலம் போனாள். மேரி ஆடன் ஸ்கூலிலிருந்து கிளம்பி, வடக்கு பஜார், தெக்கு பஜார் வழியாய், வ.உ.சி. மைதானத்தை ஊர்வலம் போய்ச் சேர்ந்த பின்னால் அங்கே பெரிய பொதுக்கூட்டம். மந்திரிமாரலெல்லாம் பேசினார்கள்.

பாயை விரித்துப் போட்டு விட்டுச் செல்லம்மா, அந்த அட்டையைக் குனிந்து எடுத்தாள். ரெண்டாய்க் கிழித்தாள். அட்டையைத் தாங்கியிருந்த கம்பையும் ரெண்டாய் முறித்து அடுப்புக்குப் பக்கத்தில் போட்டாள். அம்மாவுக்கு அடுப்பெரிக்கப் பிரயோஜனப்படும்.

போர்வையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்த செல்லம்மாவுக்கு உறக்கம் வரவில்லை. அழுகை தான் வந்தது. நாளைக்குப் பிரிந்து போகப் போகிற அம்மாவையும் தம்பியையும் ஏக்கத்தோடு பார்த்தாள்.

அப்பா உயிரோடிருந்திருந்தால் இவள் இப்படி வீட்டு வேலைக்குப் போக நேர்ந்திருக்காது. மகளின் மேலே ரொம்பப் பிரியமாயிருந்த அப்பா. அப்பாவுக்குப் பகல் ஷிஃப்ட் இருக்கிற நாட்களில் இவளை சைக்கிளில் உட்கார்த்திக் கொண்டு பள்ளிக் கூடத்தில் இறக்கி விட்டுவிட்டுத் தான் தச்சநல்லூருக்கு சைக்கிளை மிதிப்பார்.

ராத்திரி அப்பா வீட்டுக்கு வருவதற்கு ஒம்போது ஒம்போதரை ஆகிவிடும். தச்சநல்லூர் மில்லில் அப்பாவுக்கு வேலை ரொம்ப. சில ராத்திரிகளில் ரொம்பக் களைப்பாய் வருவார். அப்படிக் களைத்து வருகிற ராத்திரிகளில் “ஒடம்பு அடிச்சிப் போட்டாப்ல இருக்கு கடக்கிப் போய் மருந்து சாப்ட்டுட்டு வந்துருதேம் புள்ள” என்று அம்மாவிடம் சொல்லிட்டு, அம்மாவின் வித்யாசமான பார்வையைப் பொருட்படுத்தாமல் வெளியே போய்விடுவார். பிறகு ராத்திரி எத்தனை மணிக்குத் திரும்பி வருகிறாரோ தெரியாது. அதற்கு முந்தி செல்லம்மா தூங்கிவிட்டிருப்பாள்.

அப்படியும், காலையில் அவளை அப்பாதான் எழுப்பி விடுவார். ஒரேயொரு நாள் தான் அப்பா அவளை எழுப்பவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராத்திரி அப்பா வீடு திரும்பவே இல்லை என்று.

“மருந்து” சாப்பிடப்போன இடத்தில் தகறாரு வந்து, கைகலப்பாகி, நாலஞ்சு பேர் அப்பாவை அடித்துப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள் என்று. அதன் பிறகு இவளை எழுப்பிவிடுவதற்கும் சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிக் கொண்டு போவதற்கும் அப்பா இல்லாமற் போனார்.

“இந்தப் பளக்கம் வேணாம் வேணாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன். அவிய கேக்கல. சரி, நாப்பூரா வேல செஞ்சு ஓஞ்சி போய் வாற மனுசன், தாகந்தீர கொஞ்சம் குடிச்சிட்டுப் போவட்டுமேன்னு நானும் பெறவு வுட்டுட்டேன். இப்படியாவும்னு தெரியாதே ஆத்தா! மவராசன் எங்க மூணு பேத்தயும் இப்படி அனாதியா வுட்டுட்டுப் போய்ச் சேந்துட்டாவளேம்மா” என்று வீட்டுக்கு வருகிற உறவுக்காரர் களிடம் சொல்லி அம்மா புலம்புகிறபோது செல்லம்மாவுக்கும் அப்பாவை நினைத்து அழுகை வரும். அப்பா செத்துப் போன பின்னால் தான் அம்மாவே வீட்டு வேலைக்குப் போக அவசியமேற்பட்டது.

பொழுது விடிந்ததிலிருந்து, விளக்கு வைக்கும் வேளை வரை நாலு வீடுகளில் மாறி மாறி உழைத்து அம்மா சீக்காளியாய்ப் போனாள். அவளால் முடியவில்லை. நாலு வீடு இப்போது ஒரேயொரு வீடாய்ப் போனது. அந்த ஒரு வீட்டில் கூட, பாவம் பார்த்துத்தான் அவளை இன்னும் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் பார்க்க வேண்டுமென்கிற ஆசை செல்லம்மாவுக்குக் கனகாலமாய் உண்டு. பெரியப்பா பாளையங்கோட்டைக்கு வருகிறபோது, “பெரியப்பா, நீங்க மெட்ராஸ்க்குப் போறப்ப நானும் வாறேன் பெரியப்பா” என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் பெரியப்பாவோடு மெட்ராஸ்க்கு இந்த மாதிரி போக நேரும் என்று நினைத்திருக்கவில்லை.

காலையில், கனத்த நெஞ்சோடும், கண்ணீரோடும் உடுப்புகளை எடுத்துப் பைக்குள்ளே திணித்தாள். பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பின தம்பியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். சாயங்காலம் இவள் கிளம்புகிற நேரம் அவன் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்திருக்க மாட்டான்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

1 Comment

  1. maduraiyampathi

    மனதை ஏதோ செய்யும்படி இருக்கிறது….பாவம் அந்தக் குழந்தை.

Comments are closed.