அனாடமிக் தெரபி (31)

இரத்தத்தின் அளவு குறைவது எப்படி? (இரத்தசோகை (அனிமிக்), ஹீமோகுளோபின் குறைவு)

ஒவ்வொருவருடைய வயது, உயரம், எடை ஆகியவற்றுக்கேற்ப உடலில் இரத்தம் இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால் அது மூன்றாம் நிலை நோய்.

ஆம், இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போனால் முதல்நிலை நோய். இதைக் குணப்படுத்தாமல், தவறான மருத்துவத்தை நாடி நோயைக் கட்டுப்படுத்தினால் இரண்டாம் நிலை நோயான, இரத்தத்தில் ஒரு பொருள் குறைவதற்கும், இல்லாமல் போவதற்குமான வாய்ப்பு ஏற்படும். இந்த இரண்டாம் நிலை நோய்க்கும் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், மூன்றாவது நிலை நோயான, இரத்தத்தின் அளவு குறையும் கட்டம் வருகிறது.

எலும்பு மஜ்ஜை இரத்தத்தில் உள்ள பல பொருட்களை எடுத்துப் புது இரத்தத்தைச் சுரக்க வைக்கிறது. எனவே, நமது இரத்தத்தில் சில பொருட்கள் தரம் குறைந்து போனால், சில பொருட்கள் இல்லாமலே போனால் எலும்பு மஜ்ஜைக்குப் புது ரத்தம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்காததால் இரத்த உற்பத்தியை அது நிறுத்தி வைக்கிறது. எனவே, இரத்தத்தின் அளவு குறைகிறது.

தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளருக்கு, அவருக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சரியான அளவிலும், நேரத்திலும் கொடுத்தால் மட்டுமே அவர் பணிகளை ஒழுங்காகச் செய்வார். அவர் வேலைக்குத் தேவையான பொருட்களைத் தரம் குறைந்தவையாகக் கொடுத்தால், அல்லது கொடுக்காமலே விட்டுவிட்டால் அவர் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டுதான் இருப்பார்.

அதைப் போல, எலும்பு மஜ்ஜைகளுக்குப் புது இரத்தம் உற்பத்தி செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றனவோ அந்தப் பொருட்கள் அனைத்தும் இரத்தத்தில் சரியான அளவிலும், தரத்திலும் இருந்தால்தான் உடம்பில் தினமும் இரத்தம் ஊறிக்கொண்டே இருக்கும். அப்படி இல்லாவிட்டால், எலும்பு மஜ்ஜை எனும் தொழிலாளி வேலை செய்வதை நிறுத்துகிறார்.

இப்படி எலும்பு மஜ்ஜைகள் இரத்த உற்பத்தியை நிறுத்தும்பொழுது இரத்தத்தின் அளவு குறைகிறது. இதைத்தான் இரத்த சோகை (அனிமிக்) என்றும், ஹீமோகுளோபின் குறைவு என்றும் கூறுகிறோம். எப்பொழுது இரத்தத்தின் அளவு குறைகிறதோ அப்பொழுது, போதுமான இரத்தம் கிடைக்காததால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.

நமது சிகிச்சையில், இரத்தத்தின் அளவை ஒழுங்காக, அளவாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை நாம் சுலபமாகக் கற்றுக்கொள்ளப் போகிறோம். இதன் மூலமாக நாம் மூன்றாம் நிலை நோய்களையும் எளிதாகக் குணப்படுத்தலாம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author