அனாடமிக் தெரபி (52)

12. ஐந்து வகையான உணவுகள்

உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் பிரிப்பதற்கு சுலபமாக இருக்கும் வகையில் நாம் சில வகையாகப் பிரித்துள்ளோம்.

முதல்வகை இயற்கையாக, சுவையாக இருக்கும். சமைக்காத உணவுகள், அனைத்துப் பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய் மற்றும் கேரட் போன்றவைகள். சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் அனைத்தும் முதல் வகை உணவுகள். இதில் சுவை 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராண சக்தி 100% இருக்கும், எனவே மேலும் 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே மீண்டும் 100 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதல்வகை உணவுக்கு 300 மதிப்பெண்கள். எந்த உணவை சமைக்காமலும், அதே சமயத்தில் சுவையாக பச்சையாகச் சாப்பிட முடியுமோ, இவைகளனைத்தும் முதல்வகை உணவுகளில் வரும்.

இரண்டாவது வகை

சமைக்காத ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதாரணமாக முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் மற்றும் சுவையில்லாத பழங்களும், காய்கறி வகைகளும். அதாவது இந்த இரண்டாம் வகை உணவுகளில் சுவையில்லாமல் பிராணனும், சத்துப்பொருட்களும் மட்டுமே இருப்பதால் இந்த வகை உணவுகளுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம்.

மூன்றாவது வகை

சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாகும். ஒரு உணவை சமைப்பதால் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராண சக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதாரணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்து சமைத்த உணவுகளும்.

நான்காவது வகை

அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும், அசைவ உணவில் சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0 மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0 மதிப்பெண். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 100 மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது.

ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவர வகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மீக ரீதியாக ஒரு உயிரை கொல்வது பாவம் என்ற அடிப்படையில் நமது மனதில் ஒரு எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோய் உண்டு செய்யும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாவமில்லை என்ற எண்ணத்துடன் மனதிற்கு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியாக ஜீரணமாகிறது. மனதில் சாப்பிடலாமா வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டு செய்கிறது. இது அசைவத்திற்கு மட்டுமல்ல. எந்தவொரு உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நம்பிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டு செய்கிறது. இறுதியாக அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.

ஐந்தாவது வகை

போதைப் பொருட்கள் (லாகிரி வஸ்து) உணவே கிடையாது. சில பொருட்களை நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அது உணவில்லை, போதைப்பொருள். உதாரணமாக டீ, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கஞ்சா, அபின், பாக்கு ஆகிய அனைத்தும் உணவுப் பொருட்களே கிடையாது. உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருட்கள். எந்தப் பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோடு இருக்க முடியாதோ, அது போதைப் பொருள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும். சிகரெட் மட்டும் குடித்துக்கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முடியும்.
கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா?

உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப் பொருட்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப் பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சத்துப் பொருட்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.

எனவே போதைப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பிட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமான தெம்பு இருக்கும். பிறகு வலுவிழந்து நாம் காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சில சத்துப்பொருட்களை இந்த போதைப்பொருள் எடுத்துச் செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒருபோதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப் பொருட்களைச் சாப்பிடக் கூடவே கூடாது.

நான் பல மருத்துவரிடம் சென்றேன், பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமாகவில்லையென்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருட்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காபித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம்.

மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்துகொண்டு நீங்கள் எந்த வகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல்வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். சில இயற்கை மருத்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இது எல்லோராலும் கடைபிடிக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து மூன்று வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நமது சிகிச்சையில் ஒரு சிறிய ஐடியா உங்களுக்குத் தருகிறோம்.

காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நமது உடலுக்குத் தேவையான பிராண சக்தியும், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். மதிய உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி போன்ற கஞ்சி மற்றும் ஏதாவது ஒரு காய்கறி பொறியலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கஞ்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருட்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும். சிறந்த வழியையும் கொடுக்கும்.

காலையில் ராஜா போல சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி போல சாப்பிட வேண்டும், இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுதான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி, ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனை போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் ஓடுகிறோம். மதியம் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு ராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான்.

காலை நேரங்களில் நமது வயிறு ஜீரணசக்தி அதிகமாக இருக்கும், எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறைவாக, அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். மதிய உணவு அளவாக இருக்கட்டும், இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள், ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு, சூரியனும் கிடையாது, நமது உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் வெப்பம் இருக்க வேண்டும், பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு முலமாக உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது, மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் புகுகிறது, அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள், இரவில் குறைவாக சாப்பிடுங்கள்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author