அனாடமிக் தெரபி (69)

அலாரம் வைத்து எழுந்திருக்கக்கூடாது!

நம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும்.

காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்பொழுது, உடல் முழுவதும் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது அலாரத்தின் சத்தம் வேகமாக அடிப்பதால் நாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும்பொழுது உடல் பாதிப்பு அடைகிறது. உடலில் ஒரு விதமான பதற்றம் (tension) ஏற்படும். அந்தப் பதற்றம் அந்த நாள் முழுவதும் நமக்கு இருக்கும்.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! ஒருவேளை அலாரம் அடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? நீங்கள் ஒரு இரண்டு மணி நேரம் அதிகமாகத் தூங்கி இருப்பீர்கள் அல்லவா? அப்படியானால் என்ன அர்த்தம்? நம் உடலுக்கு மேற்கொண்டு இரண்டு மணி நேரத் தூக்கம் தேவைப்படுகிறது என அர்த்தம். உடம்புக்குத் தூக்கம் தேவைப்படும்பொழுது அதைக் கொடுக்காமல், இடையில் அதைத் துண்டித்து எழுந்திரித்தால் அந்தத் தூக்கத்தை யார் தூங்குவது? இப்படி தினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத் தூக்கத்தைக் குறைத்தால், பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நாம் மொத்தமாகத் தூங்க வேண்டியிருக்கும். எனவே, ஒருபோதும் அலாரம் பயன்படுத்தாதீர்கள்!

இரவு சீக்கிரமாகப் படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியும். நாம் தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற தேவையில்லாதவற்றுக்காக இரவு 1 மணி / இரண்டு மணி வரை விழித்திருந்து விட்டுத் தாமதமாகப் படுப்பது தவறு. இரவு இரண்டு மணிக்குப் படுப்பவர்கள் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? இரவு தாமதமாகப் படுத்தால் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருக்க வேண்டும். எனவே, நாம் எப்பொழுது எழுந்திருக்க வேண்டுமோ அதற்கு 8 மணி நேரம் முன்பாகப் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

வேண்டுமானால், எப்போதாவது அவசரக் காலத்திற்கு மட்டும் அலாரம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றாடம் பயன்படுத்துவது ஆபத்து!

மனதில் அதிகம் குழப்பம் இருந்து, இரவு நீண்ட நேரமாகத் தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சுலபமான வழி உள்ளது. படுத்து ஓய்வு எடுத்தால் ஓய்வு மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால், அமர்ந்து ஓய்வு எடுத்தால் சீக்கிரமாக ஓய்வு கிடைக்கும். எனவே, படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள், நேரடியாகப் படுக்கைக்குப் போகாமல், அமர்ந்து முதுகுக்கு அண்டை (support) கொடுத்தவாறு ஏதாவது ஓர் இடத்தில் சாய்ந்து, தலைக்கும் அண்டை கொடுத்து, காலை நீட்டியோ சம்மணம் இட்டோ அமர்ந்து, கண்களை மூடி அமைதியாகத் தூங்க ஆரம்பியுங்கள். அமர்ந்து கொண்டு தூங்கினால், தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிக விரைவாகத் தங்களை அடுக்கி வைத்துக் கொண்டு விடும்; உடனே உங்களுக்குத் தூக்கம் வந்துவிடும்.

தூக்கம் சரியாக வரவில்லை எனக் கவலைப்படுபவர்கள் ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக் கொடுத்துக் கொள்வதன் மூலமாக நன்றாகத் தூங்க முடியும். இந்த இடத்திற்கு அக்குபங்சர் மருத்துவத்தில் DU-20 எனக் கூறுவார்கள். வர்ம சிகிச்சையில் ‘கொண்டைக் கொள்ளி’ என்பார்கள். இன்றும் கிராமங்களில் இதைச் சார்ந்த, குழந்தைகளுக்கான பாட்டி வைத்தியம் ஒன்று உண்டு.

பூ கட்டும் வெள்ளை நூலை ஓர் அடி அல்லது இரண்டு அடிக்கு எடுத்து, அதைத் தாய் தன் வாயில் வைத்துப் பந்துபோல் உருட்டி எச்சில் கலந்து, குழந்தையை அமர வைத்துக் குழந்தையின் உச்சந்தலையிலிருந்து இரண்டு அல்லது நான்கு அடி உயரத்திலிருந்தபடி துப்பினால் அந்த உருண்டை நேரடியாக உச்சந்தலையில் படும்பொழுது, அந்த ஒரு நொடி தொடுவதன் மூலமாகக் குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று, நோய்கள் குணமாகும் எனப் பல கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சில கிராமங்களில் அந்த எச்சில் கலந்த பந்து உருண்டையை உச்சந்தலையில் ஒட்டி வைத்து விடுவார்கள். உச்சந்தலை என்பது 72,000 நாடி, நரம்புகள் சங்கமிக்கும் இடம். இந்த இடத்தில் நாம் சக்தியைச் செலுத்துவதன் மூலமாகவும், மசாஜ் செய்வதன் மூலமாகவும், தொட்டுத் தடவுவதன் மூலமாகவும், அந்த இடத்தை நினைத்துப் பார்ப்பதன் மூலமாகவும் 72,000 நாடி, நரம்புகளையும் அமைதிப்படுத்த முடியும்.

எனவே, இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லையென்றால் உச்சந்தலையை உங்களுக்கு நீங்களே தடவிக் கொடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நோய் இருந்தாலோ, தூக்கம் வராமல் அழுதுகொண்டு இருந்தாலோ உச்சந்தலையைத் தடவிக்கொடுத்தால் குணம் கிடைக்கும்.

நம் கையில் உள்ள சுண்டு விரலையும், கட்டை விரலையும் தவிர மற்ற மூன்று விரல்களின் நுனியால் நம் தாடைக்குக் கீழே உள்ள எழும்பில் லேசாகத் தடவிக் கொடுப்பதன் மூலமாகவும் உடலில் தூக்கத்திற்குத் தேவையான சுரப்பிகளைச் சுரக்கச் செய்ய முடியும்.

வீடுகளில் குழந்தைகள் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருப்பார்கள்; நடந்துகொண்டு படிக்கும்பொழுதும், அமர்ந்து கொண்டு படிக்கும்பொழுதும் தூங்க மாட்டார்கள். ஆனால், குப்புறப் படுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் தாடைக்கு கீழே வைத்து எப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறார்களோ, அப்பொழுது கண்டிப்பாக அரைமணி நேரத்திற்குள் நன்றாகத் தூக்கம் வந்து, படிப்பதை நிறுத்திவிட்டுத் தூங்கிவிடுவார்கள். எனவே பெரியவர்களும், தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப் படுத்துக் கண்களை மூடி, இரு மணிக்கட்டுகளையும் தாடைக்குக் கீழே வைத்து, திரைப்படங்களில் நடிகைகள் படுத்திருப்பது போலக் காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாகத் தூங்கிவிடலாம்!

கைதுறப்பு (Disclaimer):
இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்...

About The Author