அன்புள்ள அக்கா (1)

ஆறு ஐம்பதுக்கு வந்து சேரவேண்டிய நெல்லை எக்ஸ்ப்ரஸ் வழக்கம் போல ஏழு ஐம்பதுக்கு சாவகாசமாய் எழும்பூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

ரயிலை விட்டுக் கீழே இறங்கி, ரெண்டு பக்கமும் பார்த்தான்.
 
கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. அக்காவையோ அத்தானையோ காணோம். காலையில் ஆஃபீஸுக்கு போக வேண்டியவர் அத்தான். ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். ரயில் ஒரு மணி நேரம் லேட் என்றறிந்ததும் வேறே வழியில்லாமல் கிளம்பிப் போயிருப்பார். அது சரி, இப்போ இவன் அண்ணா நகருக்குப் போய்ச் சேர்வது எப்படி? எந்த பஸ், எங்கே ஏற வேண்டும், எங்கே இறங்க வேண்டும் என்கிற விவரங்களெல்லாம் தெரியாது. தெரிந்தாலும், அம்மா சுட்டுக் கொடுத்த முறுக்கு டின்னின் கனத்தைத் தூக்கிக் கொண்டு பஸ் நெரிசலில் ஏறி இறங்குவதென்ப தெல்லாம் இயலாத காரியம். மெட்ராஸ் பஸ் கண்டக்டர்களின் விருந்தோம்பலையும் கனிவையும் அக்கா சொல்லிக் கேட்டிருக்கிறான்.

ஆட்டோவில் அக்கா வீட்டு வாசலில் பந்தாவாய்ப் போய் இறங்கலாம் என்றால், அண்ணா நகருக்கு எவ்வளவு கேட்பான் என்று தெரியவில்லை. ஆட்டோக்காரர்களும் ஏமாற்றுவார்கள் என்று அக்கா சொல்லியிருக்கிறாள்.

கவனம். ஒரு திருநெல்வேலிப் பையன் மெட்ராஸில் வந்து ஏமாந்தான் என்கிற பழிச் சொல் நெல்லைச் சீமைக்கு வந்து விடக்கூடாது.

தன்னுடைய பெட்டியை ஒரு கையிலும் முறுக்கு டின்னை மறு கையிலும் சுமந்து கொண்டு, ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, ரொம்ப புத்திசாலித்தனமாய், மீட்டர் திருத்தப்பட்டது என்று எழுதியிருந்த ஆட்டோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஏறிக் கொண்டு அண்ணா நகர் போங்க என்றான்.

"எழும்பூர் சிக்னல் வரைக்கும் ஆட்டோவில் மீட்டர் போடப்படாததையுணர்ந்து, மீட்டர் போடலியா?" என்றான்.

"மீட்டர் வேல செய்யல சார்" என்றொரு அலட்சியமான பதில் வந்தது.

"மீட்டர் திருத்தப்பட்டதுன்னு எழுதியிருக்கீங்க?"

"நாம திருத்தலாம் சார், அது திருந்தணும்ல?"

சிரிப்போடு கலந்து வந்தது டிரைவரின் பதில்.
 
அவருடைய சாதுர்யமான பதிலை ரசிப்பதா அல்லது, தான் ஏமாந்து விட்டதை நினைத்துக் குமுறுவதா என்று இவனுக்குத் தெளிவாகவில்லை.

"மீட்டர் போட்டா நாப்பது ரூபா ஆகும். ஒரு பத்து ரூபா போட்டு அம்பதாக் குடுங்க."

பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அண்ணா நகரில் அட்ரஸைக் கண்டு பிடித்து வாசலில் இறங்கிக் கொண்டபோது, அத்தான் ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டிருந்தார்.

இவனைப் பார்த்ததும், உதைப்பதை நிறுத்திவிட்டுப் புன்னகைத்தார்.

"ரொம்பக் கஷ்டப்பட்டியா டேய்? காலைல எக்மோர்க்கு வரத்தான் கெளம்பினேன். ஒங்கக்காத்தான் வேண்டான்ட்டா. எந்தம்பி திருநவேலிச் சண்டியராக்கும், அவன் கண்டு பிடிச்சி வந்துருவான், நீங்க போக வேண்டாண்ட்டா."

ஆட்டோ டிரைவரை அத்தானுடைய கஸ்ட்டடியில் விட்டு விட்டு, பெட்டியையும் முறுக்கு டின்னையும் சுமந்து கொண்டு இவன் உள்ளே பிரவேசித்த போது அரவங்கேட்டு அக்கா வெளியே வந்தாள்.

அவளுடைய முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்தபோது இவனுக்குப் பொத்துக்கொண்டு வந்தது.

முறுக்குட் டின்னையும் பெட்டியையும் பொத்தென்று கீழே வைத்தான்.

"அத்தான் ஸ்டேஷனுக்கு வர்றேன்னாராம், நீ வேண்டான்ட்டியாமே?"

"ஹேய், ரிலாக்ஸ் யங் மேன், கொஞ்ச நாள்ல எஞ்சினிராகப் போற (எதுகையக் கவனிச்சியா?) இன்னும் நீ டிபன்டன்ட் டாவா இருக்கறது? நீயாவே எப்படியாவது வந்து சேந்துருவங்கற நம்பிக்கையில தான் அத்தான அனுப்பல. கோபமா?"

தன்னுடைய ரெண்டு கைகளாலும், தன்னைவிட வளர்ந்திருந்த தம்பியின் தலைமுடியை எட்டிச் செல்லமாய்ச் சிலுப்பி விட்டாள்.

இவனோ, இன்னமும் முறுக்கிக் கொண்டுதான் நின்றான்.

"இந்த முறுக்கையெல்லாம் எக்மோர்லயே வித்துப்புட்டு அடுத்த ட்ரெய்ன் ஏறி ஊர் போய்ச் சேர்ந்துர லாமான்னு யோசிச்சேன். ஒம்மேல எரக்கப்பட்டுத்தான் முறுக்கோட வந்து சேந்தேன்."

"இளமை முறுக்குடா ஒனக்கு" என்று தம்பிக்கு அக்கா நற்சாட்சிப் பத்திரம் வழங்கிய போது, வாசலில் அத்தானின் குரல் கேட்டது.

"அறுக்கறீங்க அக்காவுந் தம்பியும். நா தப்பிச்சிக்கறேன். நா ஆஃபீஸ் போய்ட்டு சாயங்காலமா வாறேன் டேய், எத்தன மணிக்கி இன்ட்டர்வ்யூ?"
 
"மத்யானம் மூணு மணிக்கி அத்தான்."

"சரியான சம்மர்ல மெட்ராஸ்க்கு வந்து சேர்ந்துருக்க. ஆல் த பெஸ்ட். நா வாறேன்."

அத்தான் போன பின்னால், டிஃபன் சாப்பிட்டுவிட்டு, அக்காளும் தம்பியும் ஊர்க் கதைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அப்புறம், இந்த இன்ட்டர்வ்யூவைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

"இன்னும் ரிஸல்ட்டே வரல, அதுக்குள்ள என்னடா இன்ட்டர்வ்யூ" என்றாள் அக்கா.

"இது நல்ல கம்பெனிக்கா. விட்டா கெடக்யாது என்றான் இவன்."

"இருக்கட்டுமே, படிச்சி முடிச்சிட்டு ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ வாழ்க்கைய அனுபவிக்காம இது என்னடா காலேஜ விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே வேல? நெல்லு வித்த காசு அப்பா மூட்ட மூட்டாயாக் கட்டிப் பரண்மேல போட்டு வச்சிருக்காகல்ல? அதுல ஒரு மூட்டயத் தூக்கிக்கிட்டு ஒரு ஆல் இண்டியா டூர் போய்ட்டு வரலாம்ல நீ?"

"நீ ஒண்ணுக்கா, இந்த முறுக்கு டின்னத் தூக்கியே கையொடிஞ்சிப் போச்சு!"

"பேச மட்டும் கத்துக்கிட்ட. இந்த மெட்ராஸ்ல தண்டையார்ப் பேட்டையிலயோ திருவான்மியூர்லயோ போய் விட்டா அங்கேயிருந்து தனியா அண்ணா நகர்க்கு வந்துசேர ஒனக்குத் தெரியுமா? எக்மோர்லயிருந்து வந்து சேரவே மூணு கிலோ மெலிஞ்சு போய்ட்ட!"

"சும்மா நக்கல் பண்ணாதக்கா, செய்துங்கநல்லூர்ல யிருந்து திருநவேலிக்கி வந்து, திருநவேலியிலருந்து தன்னந்தனியா மெட்ராஸ்க்கு வந்திருக்கேன், திருவான்மி யூர்லருந்து வரமாட்டேனாக்கும்?"

"அதெல்லாம் கத. நீங்க செய்துங்கநல்லூர்க் காரங்களுக்கெல்லாம் திருநவேலிதான் பட்டணம். உண்மையான பட்டணம் ஒங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாது."

"நீ என்னமோ மெட்ராஸ்லயே பொறந்து வளந்தவ மாதிரி தான்."

"இல்லாமலிருக்கலாம். ஆனா நா மூணு வருஷமா இங்க ஸெட்டில் ஆய்ட்டேன். இப்ப நா ஒரு கம்ப்ளீட் மதராஸி. நீயும் ஒரு ரெண்டு மாசம் மூணு மாசம் மெட்ராஸ்ல தங்கு. ஊரெல்லாம் ஜோரா சுத்திப் பார். மதராஸியா மாறு. அப்புறம்…"

"அப்புறம்?"

"வடக்கக் கெளம்பு. பாம்பே, டெல்லி, ஆக்ரா, கல்கத்தா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திப் பார். தாஜ்மஹால் பாத்திருக்கியா நீ? தாஜ்மஹால் பாக்காதவன் ஒரு இந்தியனா?"

"தாஜ்மஹால் பாக்காதவன் இந்தியன் இல்லதான். எனக்கு அவமானமாத்தான் இருக்கு. போதுமா? இப்ப ஆள வுடு. நா குளிச்சிட்டு, இன்ட்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்ணனும்."

அக்கா வாயடைத்துப் போனாள்.

சில நிமிஷங்கள் கழித்து வாயைத் திறந்தாள்.

"என் ஆருயிர்த் தம்பியே?"

"ம்?"

"நீ இன்ட்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்றதப் பத்தியோ இன்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்றதப் பத்தியோ எனக்கு ஆட்சேபனையில்ல. ஆனா, குளிச்சிட்டுன்னு ஒரு கொக்கி போடறியே. இந்த சம்மர்ல, இந்த மெட்ராஸ்ல, இந்தத் தண்ணியில்லாத காட்டுல நீ எங்க போய்க் குளிக்கப் போற?"

"ஐயையோ, பாத்ரூம்ல தண்ணி இல்லியா அக்கா?"

"ஒடனே பயந்துராத. பாத்ரூம்ல உப்புத் தண்ணி புடிச்சி வச்சிர்க்கேன். அதுல குளிக்க முடியாது. அஞ்சு மணிக்கித்தான் டாங்க்கர் வரும். நீ என்ன செய்ற, வெளி வெராண்டல இருக்கற பைப்புக்குக் கீழ ஒரு பக்கெட்ட வை. அதுல சொட்டுச் சொட்டாத் தண்ணி விழுந்து, ஒரு மணிபோல முக்கால் பக்கெட் நெறஞ்சுரும். மூணு மணிக்கித்தான இன்ட்டர்வ்யூ, நீ குளிச்சிட்டுக் கெளம்ப சரியாயிருக்கும்."

"அடக் கஷ்டகாலமே, இப்படித் தெரிஞ்சிருந்தா நா ஊர்லயே குளிச்சிட்டுக் கெளம்பியிருப்பேனே."

அக்காவின் காது பட முணுமுணுத்தவாறே குழாயடியில் ஒரு பக்கெட்டை வைத்துவிட்டு இவன் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

(மீதி அடுத்த இதழில்)
(கல்கி, 24.08.2003)

About The Author