அன்புள்ள அக்கா (2)

ஆடைகளைக் களைந்து, லுங்கி கட்டிக் கொண்டு கையில் ஒரு புஸ்தகத்தோடு ஜன்னலை ஒட்டியிருந்த கட்டிலில் சரிந்தான்.
கையில் காஃபிக் குவளையோடு அக்கா அந்த அறைக்குள் நுழைந்தபோது, இவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

"படிக்கப் போறேன்னு பராக்குப் பாத்துட்டிருக்க?" என்று சீண்டினாள் அக்கா.

"அப்படிச் சொல்லு. ப்ளேன் பாக்கறியாக்கும்? இந்த ஏரோ ப்ளேன் பாக்கற புத்தி போகவே போகாதே ஒங்களுக்கு!"
 
ஏரோப்ளேன் பாக்கற புத்தி என்று அக்கா குத்திக் காட்டியது இந்த எதிர்கால இஞ்சினியரின் தன்மானத்தைத் தொட்டது.

முகத்தை இறுக்கிக் கொண்டு புஸ்தகத்தால் மூடிக் கொண்டான்.

அக்கா வந்து புஸ்தகத்தை விலக்கினாள், சிரித்தவாறு.

"அடேயப்பா, ரோஷத்தப் பார். வெளயாட்டுக்குச் சொன்னேண்டா. சுருக்னு கோச்சுக்கிறியே. நீ மட்டுந்தானா ப்ளேன் பாக்கற, ஒங்க அத்தான் பாக்கலியா! அவர் இதப் பத்தி ஒரு கவிதை கூட எழுதி ஒரு பத்திரிகைக்கி அனுப்பிச்சார். ப்ளேன் வேகத்துல அது திரும்பி வந்துருச்சு. ஆனா எனக்குப் புடிச்சிருந்தது. கொண்டு வந்து காட்டறேன் பார்."

கவிதையைத் தேடி எடுத்து வந்து அக்கா இவன் கையில் கொடுத்தாள்.

பதினஞ்சு வருஷமாச்சு

நெல்லையிலிருந்து குடிபெயர்ந்து

சென்னையிலே காலூன்றி

வேக வாழ்க்கை ஏக வசனங்கள்

எல்லாம் பழகிப் போச்சு

மவுன்ட் ரோடு மயக்கம் தெளிஞ்சாச்சு

பாரிமுனை நெரிசலும் பாண்டிபஜார் அவசரமும்

மரத்துப் போய் நாளாச்சு

பட்டணத்துப் பிரமிப்பெல்லாம் அடங்கிப் போய்

மதராஸியாய் நானும் மறுபிறவி யெடுத்து

வருஷம் பல ஓடிப் போச்சு.

ஆனாலும்

ஆகாயத்திலொரு அரவங் கேட்கிற போது

அண்ணாந்து ஏரோப்ளேன் பார்க்கிற

புராதனப் பழக்கத்தை மட்டும்

மறக்க இயலவில்லை இன்னும்

"ஹை, அத்தான் நல்லாத்தான் எழுதியிருக்கார்" என்று மெச்சினான் இவன்.

"அதனால தம்பி, ப்ளேன் பாக்கறது வெக்கப்பட வேண்டிய விஷயமில்ல. வானத்துல சத்தங்கேக்கற போது அண்ணாந்து பாக்கத்தான் தோணும். அதுதான் இயற்கை. இந்த மெட்ராஸ் மனுஷங்க, மெஷின் மனுஷங்க. அனாவசியமான கட்டுப்பாட்டோட போலி வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்காங்க. ப்ளேன் பறக்கறதப் பாக்கறது ஒரு அழகு. பறவைகள் பறக்கறது ஒரு அழகு. அதையெல்லாம் ரசிக்க நாம பக்குவப்படணும்டா. சலீம் அலி கேள்விப்பட்டிருக்கியா? பறவைகளுக்காகவே வாழ்க்கைய அர்ப்பணிச்சவர். மனிதன் இல்லாமப் பறவை வாழலாம். ஆனா பறவைகள் இல்லாம மனிதன் வாழ முடியாதுன்னு சொன்னவர். நம்ம பாரதியார் சொல்லலியா, காக்கைக் குருவி எங்கள் ஜாதின்னு? இப்ப கூட பாண்டிச்சேரில சிவகணபதின்னு ஒரு பறவைப் பிரியர் இருக்கார்னு பத்திரிகைல வந்ததே பாத்தியா?"

"பாக்கல."

"பாக்காட்டி பரவாயில்ல. நா என்ன சொல்றேன்னாடா, வாழ்க்கையில பாக்கறதுக்கு, ரசிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு. அதுக்கெல்லாம் இதுதாண்டா டைம். நீ இன்ட்டர்வ்யூக்குப் போவ, அப்புறம் வேலக்கிப் போயிருவ. பணம் சம்பாதிக்கிறதுலயே குறியா இருப்ப. அப்பறம் செளதிக்கோ, ஸ்டேட்ஸ்க்கோ போகணும்னு ஆசப்படுவ. ஒனக்குக் கல்யாணம் பண்ணி வப்பாங்க. கொழந்த பெத்துக்குவ. அதுகளுக்குப் போய் பால் டின் வாங்கணும், அப்புறம் ஸ்கூல்ல போடணும்… இப்படியே காலம் ஓடிரும். ஒரு அருமையான வசந்த காலத்த நெரந்தமா இழந்துருவ."

"இப்ப என்னக்கா சொல்ற, இந்த இன்ட்டர்வ்யூ அட்டண்ட் பண்ண வேணாங்கறியா?"

"அப்படித்தான் வச்சிக்கோயேன், நீ ஃபஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணப் போற. ராங்க் வாங்கினாலும் வாங்குவ. ஒன்னத் தேடி எத்தனையோ இன்ட்டர்வ்யூ வரும். ஆனா இந்த வசந்தகாலம் வருமா?"

"சரி, ஆள வுடு, நா குளிக்கல, இன்ட்டர்வ்யூக்குப் போகல. போதுமா?"

"அட மண்டு, ஒன்னக் குளிக்க வேண்டாம்னா சொன்னேன்? குளி. பக்கெட் நெறஞ்சிருக்கும் பார். குளிச்சிட்டுக் கெளம்பு."

வெளி வராண்டாவில் பக்கெட் நிரம்பியிருக்கிறதா என்று பார்த்தான். முக்காலுக்கும் கொஞ்சம் அதிகமாகவே நிரம்பியிருந்தது.

பாத்ரூமுக்குள்ளே டவல், சோப் எல்லாம் செட்அப் செய்து விட்டு பக்கெட்டை எடுக்க வெளியே வந்தவன், சடன் பிரேக் போட்டு நின்றான்.

பக்கெட்டின் விளிம்பில் கால் பதித்து ஒரு காகம் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது.

அதன் தாகம் தணிந்ததும் காகாவென்று கரைந்து தன் இனத்தை அழைத்தது. அதன் அழைப்பை ஏற்று இன்னும் ரெண்டு காகங்கள் வந்து சேர்ந்தன.

தண்ணீர் பருகிவிட்டு அவையும் கரைய, இன்னும் சில காகங்கள் வந்து தாகந்தணித்தன.

காக்கைக் கரவாக் கரைந்துண்ணும் மட்டுமல்ல, காக்கைக் கரவாக் கரைந்து பருகும் கூட.

ஓசைப்படாமல் ஒரு ஸ்டூலை எடுத்து வாசலில் போட்டுக் கொண்டு, அந்த காகங்கள் கலைந்து விடாத தொலைவில் உட்கார்ந்து கொண்டான்.

உட்கார்ந்து கொண்டு அந்தக் கருப்புப் பறவைகள் பருகுகிற அழகைப் பார்த்து கொண்டிருந்தான். இவனுடைய உடலைக் கழுவ சேகரிக்கப்பட்ட தண்ணீருக்கு, சில ஜீவராசிகளின் கோடைத் தாகத்தைத் தணிக்க விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறபோது சின்னதாய் ஒரு சந்தோஷம்.

"என்ன தம்பி, குளிக்கலியா, இன்ட்டர்வ்யூக்குக் கெளம்பலியா" என்று பின்னாலிருந்து அக்காவின் குரல் கேட்டது.

அக்காவை அண்ணாந்து பார்த்து, உதட்டில் விரல் வைத்தான்.

"ஸ்ஸ்… மெதுவாப் பேசு அக்கா. அது கலஞ்சிரும் இந்த வேகாத வெயில்ல ஒவ்வொண்ணுக்கும் எவ்ளோ தாகம் பார்!"

அக்கா மெல்ல குனிந்தாள். தம்பியை நோக்கித் தணிந்த குரலில் கிசுகிசுத்தாள்.

"குளிக்கலியா?"

"இல்ல."

"இன்ட்டர்வ்யூக்குப் போகலியா?"

"இல்ல."

சிரித்தபடி அக்கா, தம்பியின் தலைமுடியைத் தன் ரெண்டு கைகளாலும் சிலுப்பி விட்டாள்.

மிகச் செல்லமாய்.

இந்த முறை சிரமப்படாமல், ரொம்ப சுதந்திரமாய்…

(கல்கி, 24.08.2003)

About The Author