அவன் மட்டும் இல்லாதிருந்தால்…..

கதவைத் தட்டினேன். காலிங்பெல் பார்வையில் படவில்லை. தட்டிய பிறகு தோன்றியது, இத்தனை வேகம் காட்டியிருக்க வேண்டாமென்று.

சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்த்தும் திகைப்பு.

"உள்ளே வரலாமா.."

"வா..ங்க."

சுதாரித்துக்கொண்டு அழைத்தாள். கூடவே குழப்பமும். நான் ஏன் இந்த வேளையில் இங்கே வந்திருக்கின்றேன் என்று.

"எதுவும் சாப்பிடறீங்களா?" என்றாள்.

அவளை நேராகப் பார்த்தேன்.

"நீ போ..நீ போ"என்று கடைசியில் என்னைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். எப்படி சொல்லப் போகிறேன்.

"கொஞ்சம் நாம இப்போ வெளியே போகணும். கிளம்பலாமா.."என்றேன்.

"எது..க்கு..?"

"நத்திங்.. வந்து சரவணன்.."

சுசீலாவுக்கு எதுவோ புரிந்திருக்க வேண்டும்.

"இருக்காரா..இல்லை.."

என் மௌனம் அவளை உலுக்கியது. அதை விட அவள் நிதானம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

‘போ..லா..ம்

உள்ளுக்குள் விசும்ப ஆரம்பித்து விட்டாள்.

"தினுவையும் கூட்டிக்கிட்டு போயிரலாம்"என்றாள் காரில் ஏறும் போது. ஹாஸ்பிடலில் போஸ்ட்மார்ட்டம் முடிந்து,

இறுதிச்சடங்குகளும் முடிய இரவு எட்டு மணியாகி விட்டது.

என் மனைவியுடன் கோபியின் மனைவியும் சேர்ந்து சுசீலாவுக்குத் துணையாக இருந்தார்கள்.

நாங்கள் மூவருந்தான் ரொம்ப வருஷமாய் சிநேகிதம். எங்களில் சரவணன் மட்டுமே வித்தியாசப்பட்டவன். பழக்கங்களுக்கு அடிமையாகி போனவன்.

"நீங்களாச்சும் அவருக்கு புத்தி சொல்லக் கூடாதா.."என்றாள் என் மனைவி ஒருமுறை

"சொல்லாமலா. ‘நோ அட்வைஸ் பிளீஸ். அப்புறம் உங்க நட்பே வேணான்னு போயிருவேன்’னான். வேற வழி பேசாம விட்டுட்டோம்"

"எனக்கு என்னவோ சரின்னுபடலீங்க. வீட்டுக்குப் பணமே தரலியாம்.பாவம் அவங்க ஒரு தடவை ரொம்ப அழுதுட்டாங்க"

"என்னை என்ன பண்ணச் சொல்றே. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லே. மீறி சொன்னா..இப்ப பேசறதும் போயிரும்.
அதனால திருந்தவும் போறதில்லே. அட்லீஸ் இப்போ எங்க மேல ஒரு மரியாதையாவது வச்சிருக்கான்"

சுசீலவுக்கு எங்கள் அலுவலகத்திலேயே வேலை கிடைத்து விட்டது. நானும் கோபியும் மிகவும் முயற்சித்தோம். பலன் இருந்தது.

அவ்வப்போது அவளைப் பார்த்து விட்டு வருவோம். தினு நன்றாக படிக்கிறான் என்பது தெரிந்து சந்தோஷப்பட்டோம்.
அன்றும் போயிருந்தோம்.

"தினு பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் காட்டு அங்கிள்கிட்டே.."

முதல் ரேங்க். கையைப்பற்றி குலுக்கினேன். லேசாய் வெட்கப்பட்டான். அப்படியே சரவணன் ஜாடை!.

எனக்குள் பெருமூச்சு.

"ஹும்..அவன் இருந்தா..சந்தோஷப்பட்டிருப்பான்.."

சுசீலாவிடமிருந்து நிதானமாக பதில் வந்தது.

"இல்லீங்க..இவனும் அவரைப் பார்த்து கெட்டுப் போயிருப்பான்…இப்ப அந்த அதிர்ச்சியில பொறுப்பு வந்து என் பேச்சை முழுசா கேட்கிறான். நிச்சயமா இவன் முன்னுக்கு வந்திருவான்… எங்களுக்கும் இழந்து போன சந்தோஷம் கிடைச்சுரும்.."

சில சமயங்களில் யதார்த்தம் விடுகிற அறை பளீரென்றுதான் விழுகிறது!!

About The Author

3 Comments

  1. ஸ்ரீ

    செமை அறை! முகத்தில் அறைகிற நிஜம் என்பது இதுதானா? தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுகதை ரிஷபன்! வாழ்த்துகள்!

  2. சதீஸ் கண்ணன்

    ஒரு சில இழப்புகள் கூட சில சமயங்களில் சந்தோசமாக மாறுகிறது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்….. கதை மிக அருமை ரிஷபன்….

  3. A. Ravi

    ரிஷபன்,

    நன்றாக எழுதுகிறீர்கள். யதார்த்தம் அறையத்தான் செய்யும். பல குடும்பங்களில் தலைவனுக்குப் பிறகு பல நல்ல விஷயங்கள் நடந்ததை நானே பார்த்திருக்கிறேன். இப்படியும் நடப்பதுண்டு.

    ரவி

Comments are closed.