எழுதக் கூடாத கடிதம் (2)

பல நேரங்களில்
நீ உன்
விரல் கொழுந்துகளை
என்முன் நீட்டி நீட்டி
என்னைத் தொட
முன் வந்திருக்கிறாய்

உன்
பெண்மைக்கே உரிய நாணம்
என் பதில்
என்னவாக இருக்குமோ
என்ற அச்சம் எழுப்ப
விருப்பமே இல்லாமல்
பின்வாங்கி இருக்கிறாய்

இருந்தும்
என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை
.

நான்…

உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே
தவமிருக்கும் உன்னையே
உயிருக்கு உயிராய்
காதலிக்கும்
ஈர நெஞ்சன் தான்

ஒரு
நெடிய காட்டுத்தீ
உன் நெஞ்சில் எழுந்துவிட
நான் காரணமாகிவிடுவேனோ
என்ற பீதியினால்தான்
கல்நெஞ்சனாய் இருக்கிறேன்
.

உனக்குள்
எழுந்துவிடுமோ என்று நான்
ஐயப்படுகின்ற அந்தத் தீ
எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்
ஆனால் உன்
சொந்தக் கூட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்

எனவேதான் என் அன்பே…

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author