கண்டது,கேட்டது,படித்தது,ரசித்தது

இப்படியும் ஒரு எடிட்டர்..! 

(எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சொன்னதாக -–(மின்னஞ்சலில் வந்தது)

அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் என பலரும் குடியிருந்தார்கள்.
வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.

வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும் கூடக் கலந்து கொள்வார் – ப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!

ஒருநாள், அவர் யதேச்சையாக, "ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?" என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.

"குளியலா..? அப்படின்னா..?" என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.

எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?" என்றார்.

"இல்லே… குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!" என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.

அமைதியில் ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி. அதன்பின், சில மாதங்களில் மழை பெய்து, தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்து, எல்லோரும் குதூகலமாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைகூட தாராளமாகக் குளிக்க முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓடியிருக்கும். பழைய தண்ணீர்ப் பஞ்ச அனுபவங்கள் மறந்தே போன நிலை.

வழக்கம்போல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, பூஜை நிகழ்ச்சிக்கு குமுதம் ஊழியர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அனைவரும் ப்ரெஷ்ஷாகக் குளித்துப் புத்துணர்ச்சியோடு இருந்தார்கள்.

எஸ்.ஏ.பி. வந்தார். பாக்கியம் ராமசாமி அவரிடம் யதார்த்தமாக, "என்ன சார்! திவ்வியமா ஷவர் குளியல் போட்டுட்டு வந்தீங்களா?" என்று கேட்டார்.

"ஷவரா… அப்படின்னா?" என்று திருப்பிக் கேட்டார் எஸ்.ஏ.பி.

பாக்கியம் ராமசாமிக்குப் புரியவில்லை. பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, சுமார் ஒரு வருட காலமாகவே – அதாவது, ‘குளியலா… அப்படின்னா?’ என்று பாக்கியம் ராமசாமி குறும்பாகக் கேட்டுத் தண்ணீர்ப் பிரச்சினை பற்றிச் சொன்ன அன்றைய தினத்திலிருந்தே, ஷவரின் அடியில் நின்று குளிப்பதைத் தவிர்த்து விட்டிருக்கிறார் எஸ்.ஏ.பி.

சிக்கனமாக ஒரே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து, சொம்பால் மொண்டு ஊற்றிக் கொண்டுதான் குளிப்பாராம் கடைசி வரையில், ஷவர் குளியலை அவர் மீண்டும் அனுபவிக்கவே இல்லையாம்..!

இப்படியும் ஒரு எடிட்டர்..!

About The Author