கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நாலு விஷயம்

பயம் போனால் ஜெயம் வரும்

ஜாக் லெம்மன் புகழ் பெற்ற நகைச்சுவை, குணசித்திர நடிகர், இயக்குனர். பிராட்வே நாடக அரங்குகளிலும் நடித்திருக்கிறார். அவரது ‘some like it hot’, ‘The Apartment’ ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

அதன் பின்பு அவர் ‘Face a Hero’ என்ற பிராட்வே நாடகத்தில் நடித்தார். அது தோல்வியடைந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றதால் அவர் மனமுடைந்து போயிருந்தார். தன் எதிர்காலமே இருளாகி விட்டதென கலங்கி தூக்கமே வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.

மறுநாள் காலையில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. தோல்வியைத் தழுவிய அந்த நாடகத்திற்குப் பின்பு அவருக்கு எந்த நாடகமும், திரைப்படமும் இல்லாததால் அவருக்கு நேரம் நிறைய இருக்குமெனக் கருதி, படத் தயாரிப்பாளர்கள் ‘Days of wines and Roses’ என்ற திரைப்படத்திற்கான கதை, உரையாடல்கள் அடங்கிய ஸ்க்ரிப்ட்டை அனுப்பியிருந்தார்கள்.

அதன் பிறகு அவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். வெற்றிகளும் விருதுகளும் தேடிக் குவிந்தன. நாடகத்தில் அடைந்த தோல்வி அவருக்கு இன்னொரு வெற்றிக் கதவைத் திறந்துவிட்டது.

”தோல்வி நமக்குத் தடையாக இருப்பதில்லை. தோல்வியைப் பற்றிய பயமே நமக்குத் தடையாக இருக்கிறது’ – இப்படிச் சொல்லியிருக்கிறார் ஜாக் லெம்மன்.

நாரா? பூவா?

உலகப் புகழ் பெற்ற வயலின் மேதை ஜூபின் மேத்தாவின் வயலின் கச்சேரியை ஒரு தம்பதியர் சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தனர். அவர் வாசிக்கும்போது கழுத்தில் அவருக்கு அணிவித்த மலர் மாலை இருந்தது. அவர் தன்னை மறந்து அசைந்து ஆடி வாசிக்கையில் மலரிலிருந்து இதழ்கள் கீழே விழுந்து கொண்டிருந்தன.

மனைவி சொன்னார். “அவர் வாசித்து முடிவதற்குள் இதழ்கள் யாவும் கீழே விழுந்து கழுத்தில் வெறும் நார்தான் இருக்கும்”

கணவர் சொன்னார். “இருக்கலாம், ஆனால் அவர் ஒரு அழகான மலர்க்குவியலின் நடுவில்தானே இருப்பார்”

எதைப் பார்ப்பது வெறும் நாரையா? அல்லது அழகான மலர்களையா?

மீனா? நானா?

சாக்ரட்டீசை அவருடைய சிஷ்யர் ஒருவர் கேட்டார். “ உங்களிடம் சிஷ்யராக வருபவர்களை ஏற்றுக் கொள்ளுமுன் நீங்கள் ஏன் அவர்களை ஒரு குளத்தைப் பார்க்கச் சொல்கிறீர்கள்?”

“அவர்கள் குளத்தில் குனிந்து பார்க்கும்போது வண்ண மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கவனிக்கிறார்களா, அல்லது தன் உருவத்தை மட்டுமே ரசித்துக் கொள்கிறார்களா என்று தெரிந்து கொள்ளத்தான்” என்றார் சாக்ரட்டீஸ்.

நாயிருக்க பயமேன்?

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், •பாலா என்ற நாயை மிக அருமையாக வளர்த்து வந்தார். அந்த நாயி‎ன் பராமரிப்புக்காக ஏகப்பட்ட பணம் செலவழித்தார். எதிர்க்கட்சிக்காரர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாக்கி “ஒரு நாய்க்காக இவ்வளவு பணம் வீணடிக்கப்படலாமா?” என கூக்குரலெழுப்பினர்.

ஆனால் அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் ரூஸ்வெல்ட். “ஒரு வாயில்லா ஜீவனிடம் கருணையுடன் நடந்துகொள்வது தவறா?” என்று வாதிட்டார். அந்த நாய்க்காக அவர் பரிந்து பேசிய சொற்பொழிவு அவரின் மிகச்சிறந்த பேச்சுகளில் ஒன்று. அவர் நாயிடம் காட்டிய பரிவில் அமெரிக்க மக்கள் மனம் நெகிழ்ந்தார்கள். அவரிடம் அனுதாபமும் அன்பும் பெருகியது மக்களுக்கு. அவருக்கு ஆதரவு பெருகி அவரின் எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது. அவரது எதிரிகள் தோல்வியைத் தழுவினார்கள்.

About The Author

1 Comment

  1. A.Ramamoorthy

    நாயிருக்க பயமேன்? என்ற தலைப்புக்குப் பதில் நாவிருக்க பயமேன்? என தலைப்பிட்டிருக்கலாம். ரூஸ்வெல்ட்டின் சாமார்த்தியம் பாராட்டுக்குரியது.

Comments are closed.