கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்

அவன் பெயர் கிளாமர் திவாகர்.

அவன் பெயர் கிளாமர் திவாகர் அல்ல.

சினிமா கற்பழிப்பு வில்லன்.

கிளாமர் திவாகர், ரெட்டை அர்த்த வசனத்தை இழுத்து இழுத்துப் பேசுகிற ஸ்டைலே அழகு. ஒரு கெட்ட வார்த்தையைப் பாதி சொல்லி உதட்டுக் காற்றை விடுவான். ஜனங்களுக்கு அந்த வார்த்தை புரிந்தது. கொந்தளித்துக் கைதட்டினார்கள். ஆனால் சென்சாரால் அந்தக் கட்டத்துக்குக் கத்திரி போட முடியவில்லை.

அறிமுகம் ஆனபோதே ஜனங்களின் அபிமானக் கற்பழிப்பு வில்லனாகி விட்டான். மற்ற எவரையும் விட, ஏன் கதாநாயகனின் காதல் காட்சிகளையும் விட அவன் காட்சிகள், குறிப்பாகக், கற்பழிக்கும் காட்சிகள் வசீகரமாய் இருந்தன. டைட்டிலில் பேரைப் பார்த்தபோதும், அவன் முதல் காட்சியில் திரையில் தோன்றியபோதும் பரவசக் கைதட்டல்கள், விசில்கள், காகித எக்களிப்புகள்! அவன் பேசும் வசனத்துக்கு மந்திர சக்தி வந்திருந்தது.

"என்ன விட்ரு…" என்று மாராப்பு இல்லாமல் வெறும் ஜாக்கெட்டை மூடிக் கொண்டபடி அழும் கதாநாயகி. என்றாலும் ஜனங்கள், ஆச்சரியம்! அவளை அல்ல, அவனையே பார்த்தார்கள்!

அறிவுப்பூர்வமாய் அப்போது அவன் வசனம் பேசினான்.

"அதெப்பிடி பாப்பா உன்னை விட முடியும்? ஆணுக்கு ஒரு நீதி பொண்ணுக்கு ஒரு நீதியா… நீ ஒரு டிரஸ்ஸைக் கழட்டினா, நானும்…" மீதி டயலாக்கை முழுங்கி விடுவான். ஜனங்களின் விசில் ஊளை!

"ஒன்ஸ் மோர்!"

ஷுட்டிங்கில், காமெடி நடிகர்கள் அவர்களே ஐடியா தருவார்கள், சொந்த வசனம் பேசுவார்கள். அதைப்போலக் கற்பழிப்புக் காட்சிகளில் சளைக்காமல் அவன் யோசனைகள் சொல்கிறவனாய் இருந்தானோ என்னவோ! காலப்போக்கில் ஒரு படத்தில் ஒரு கற்பழிப்பு என்கிற சராசரிக்கும் மேலதிகம் இடம்பெற விநியோகஸ்தர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

மண்வாசனை அல்லது வெளிப்புறப் படப்பிடிப்பு என்று ஸ்டுடியோவுக்கு வெளியே சினிமாவைத் தெருத்தெருவாக இழுத்து வந்து – ஒரு படத்தில் கழுதையேற்றிக் கரும்புள்ளி செம்புள்ளியும் குத்திப் – புரட்சி செய்த ஓர் இயக்குநர் போல நம்ம கிளாமர் திவாகர்.

பூகம்பத்தில் அசைவது போல, அல்லது அம்மணிகள் அரிசி புடைக்கிறாப்போல முன்குனிந்து உடம்பை ஜிகுஜிகுவென்று ஆட்டி ஆட்டம்போடும் கிளப் டான்ஸ்களிலிருந்து திரையுலகை மீட்ட சுந்தரபாண்டியன், கற்பழிப்பை நோக்கித் தேர் இழுத்த மாவீரன்! கதாநாயகன் வாய்ப்பு அடுத்து தேடி வந்தபோதும் மறுத்து விட்டான்.

"ரசிகர்கள் நான் கற்பழிப்பதையே விரும்புகிறார்கள்" என்றான் அடக்கத்துடன்.

உண்மையில் சில படங்களில், கதாநாயகனை விடவும் அவனுக்கு அதிகச் சம்பளம் கிடைத்தது.

கிளாமர் திவாகர்.

அவன் பெயர் – அப்பா அம்மா வைத்த பெயர் – என்ன? வெளியே சொல்ல வேணாம்! கண்டிப்பாச் சொல்லக் கூடாது!

மோ க ன் தா ஸ்!

"ஏ பாவி! நள்ளிரவில் ஒரு பெண் உன்னை நம்பித் தனியே வர முடியுமா?" சிரிக்கிறான். "கட்டாயம் முடியும் சார்!" என்றான் அதற்கும் அடக்கத்துடன். உண்மையில், அவன் அடக்கமாய்ப் பேசப் பேச அதைக் கேட்கவே பயமாய் இருந்தது. வில்லனாச்சே!
திரையில் அவனது திமிர்த்தனமும், அட்டகாசமும், அடாவடியும், ரகளையும்… நேரில் திருநீறு நெற்றி நிறையப் பூசினான். வருடா வருடம் சபரிமலை போவதாகவும் தெரிந்தது.

அப்ப அந்த சமயங்களில் ஷுட்டிங்? அது நடிப்புல்லா!

அதையே காட்சியாக்கி ஒரு படமும் வந்தது. சபரிமலை பக்த சாமி கற்பழிப்பதாக! இருமுடியில் இருந்து நாகப்பாம்பை அவிழ்த்து விடுவதாக. ஐடியா உபயம் யாரோ? படம் சில்வர் ஜுபிலி! கலைமாமணி பட்டமும், ஆண்டின் சிறந்த வில்லன் நடிகர் பட்டமும் தந்து ஆளுங்கட்சி அவனைத் தன் கட்சியில் சேர்க்க முயன்றது அப்போதுதான். அப்போதைய பெரும் கதாநாயகன், மார்க்கெட் சரியத் துவங்கியதில், எதிர்க்கட்சியில் சேர்ந்திருந்தான். இந்தக் கட்சிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து அவசரமாய்த் தேவைப்பட்டது. மேடையில் கவர்ச்சிகரமாய், கிளர்ச்சிகரமாய் அவன் பேசினால் ஆகாவென்றிருக்குமே! ஆனால் இந்த இழவெடுத்தவன் வெளியில் நல்லவனாட்டம் அடங்கிப் போகிறான்!

அரசியல் பெரும் புள்ளிகள் கிளாமர் திவாகரின் தலையாட்டலுக்குக் காத்துக் கிடந்தார்கள். அவன் சட்டசபைக்குத் தேர்வாகி வரும் நாளில் கைதட்டல், விசில், மாலை மரியாதை, காகிதக் கொந்தளிப்பு செய்யவும் தயாராய் இருந்தார்கள்.

‘ஆணையிட்டேன் நெருங்காதே!’ என முன் தலைமுறைப் படத்தில் காட்சி. ‘தப்பிக்க முடியாது’ என்கிற தினுசில் திகில் பின்னணி இசையுடன் கிளாமர் திவாகர் படத்தில் ஒரு பாடல். படம் வருமுன் ஆடியோ சி.டி விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. படத்தின் பெயர் ‘இல்வாழ்க்கை’! இந்தப் பாடல் ஹிட்டாகியதும் அந்தத் தலைப்பையே ‘தப்பிக்க முடியாது’ என்று மாற்றிவிட்டார்கள். பாடலை அவனே பாடியிருந்தான். பொது இடங்களில் ஜனங்கள் அந்தப் பாடலைப் பாடித் திரிந்தார்கள். அவன் மேடையில் பிரசன்னம் தந்த சந்தர்ப்பங்களில் மைக்கில் அவனையும் அதைப் பாடச் சொன்னார்கள்.

"தப்பிக்க முடியாது, உன்னால் தப்பிக்க முடியாது…
இப்போ பத்து எண்ணுவேன் நான் பத்து எண்ணுவேன்.
ஒண்ணு! ஒண்ணு! கிட்ட வாடி கண்ணு!"

– இதை ஒரு கிழட்டு இசையமைப்பாளர் மெட்டுப் போட்டு, இன்னொரு கிழட்டுப் பின்னணிப் பாடலாசிரியர் எழுதி அந்தாட்கள் சம்பளமும் உயர்ந்துவிட்டது!

பிரபல நடிகைகள் அவன் படங்களில், கதாநாயகனுக்குப் பெண்டாட்டியாக வருவதைவிட அவனுக்கு வைப்பாட்டியாக நடிப்பதையே விரும்பினார்கள். சின்ன சைஸ் ஜாக்கெட் அணிகிற நடிகைகள் அவனுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது குறித்து வருந்தினார்கள்!

நகரத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ஒரு படத்தில் அவனது – வழக்கமான – வித்தியாசமான கற்பழிப்புக் காட்சி. கதாநாயகனின் தங்கையாகப் பிரபல நடிகை ஒருத்தி நடித்திருந்தாள். "தங்கையாகவா? வேணாம்!" என முதலில் மறுத்தாலும், படத்தில் கிளாமர் திவாகர் பெயர் பார்த்ததும் தான் நிச்சயம் திவாகரால் கற்பழிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உடனே ஒப்புக் கொண்டாள். கதைப்படிக் கற்பழிப்புக் காட்சி இருந்தது என்றாலும் கதாநாயகனின் தங்கையின் கற்பழிப்பு அல்ல அது. நடிகை போராடிக் காட்சியைத் தன் கற்பழிப்பாக மாற்றிக் கொண்டாள்.

வெகு சாவதானமான காட்சி அது. கற்பழிக்கப்படும் பெண்ணும் வசனம் பேசி அது எதிர்பாராத வெற்றி பெற்றது. அவளது ஜாக்கெட்டை நி தா ன மா க உருவி எடுக்கிறான் கிளாமர் திவாகர். படத்தில் அவன் டெய்லர்.

"உன் அளவென்ன பாத்திர்றேன்!"

ரசிகர்கள் அவளது அளவு என்ன, அவன் என்ன சொல்லப் போகிறான் என்று காத்திருந்தார்கள். எல்லாம் ஒரு ஜி.கே இம்ப்ரூவ்மென்ட்தான். திவாகர், சாரி கிளாமர் திவாகர் சட்டென்று முகம் மாறிக் கோபப்பட்டான். சிறு சிறு துண்டுகளாக அந்த ஜாக்கெட்டை நிதானமாக அவன் கிழிக்கிறான்.

அப்போதுதான் அந்த நடிகை சொந்த வசனம் விட்டாள். "துணியைத் தைக்க வேண்டிய நீயே… இப்பிடித் துணியைக் கிழிக்கலாமா?" ஊய்யென அதிர்ந்தது அரங்கம்.

"கிழிச்சித்தானேடி தைக்கணும்!"

"ஒன்ஸ் மோர்!"

அடுத்த நாலைந்து படங்களில், கற்பழிப்புக் காட்சியில் அவர்கள் இருவரையும் நடிக்க வைக்கவே விநியோகஸ்தர்கள் விரும்பினார்கள்.

பிரபல டி.வி-யில் ‘என் விருப்பப் பாடல்’ என ஒரு நிகழ்ச்சி. "உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?" எனத் தொகுப்பாளர் கேட்குந்தோறும் கிளாமர் திவாகர் பெயர்தான் எல்லாரும் சொன்னார்கள். டி.வி-யும் சட்டென்று அவனது கற்பழிப்பு வசனத்தை ஒரு வரி இடைச்சொருகலாய் வைத்தது.

"வாம்மா பாலும் பழமும்…"

படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறபோதே திடீரெனச் செய்தித்தாளில் ஒரு செய்தி சூடு பிடித்தது. கிளாமர் திவாகர் அந்தக் கதாநாயகனின் தங்கை நடிகையை, தன்னால் கற்பழிக்கப்பட்டவளைக் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக. சாமியார் ஒருவரின் கற்பழிப்புக் கேஸ் அதுவரை பரபரப்பாகியிருந்தது. அடங்கி விட்டது அது இப்போது.

***

மல்லிகாதாஸ் திவாகர் திருமணம்!

சமீபத்திய ‘காலேஜ் ரகளை’ படத்தில், கதாநாயகன் ஷிவ்சந்தோஷின் தங்கையாக நடித்தவர் மல்லிகாதாஸ். கதைப்படி அவர் கிளாமர் திவாகரால் கற்பழிக்கப்படுகிறார். போராடி அவரையே கல்யாணம் செய்து கொள்கிறார். பிறகு அவன் திருந்திய பின் விவாகரத்தும் செய்கிறார்.

தற்போது மல்லிகாதாஸ் கிளாமர் திவாகரை மணக்க இருப்பதாகவும், அவர்கள் கல்யாணம் ‘கா த ல்’ கல்யாணம் என்றும் அறிவித்து உள்ளார்!

***

கல்யாண வரவேற்பு அமர்க்களமாய் இருந்தது. திரையுலகப் பிரமுகர்கள் ஏறத்தாழ அனைவருமே கலந்து கொண்டனர். எல்லாருமே திவாகரைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். "நல்ல, பக்திப்பூர்வமான ஆள். குணசீலன். சரியாக நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். கல்யாணத்துக்குதான் முகூர்த்தம் தவறக்கூடாது. கற்பழிப்புக்கும் கூடவா! சிறந்த நடிகர். (கற்பழிக்கும்) கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்! இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் அவர் (கற்பழிப்புக்) காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது!"

மல்லிகாதாசும் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் எல்லாரும். அவள் திவாகரிடம் காதல் வசப்பட்டது எப்படி! திவாகர் கற்பழிப்பில் மயங்கி விட்டாளா?

"திவாகர் சாரோட எனக்கு இது முதல் படம். அவர் நடிச்ச எல்லாக் (கற்பழிப்புக்) காட்சிகளுமே பெரும் வரவேற்பு பெற்றவை…."

அவரோட சரிக்குச் சமமா ஈடு கொடுத்து நடிக்க முடியுமா? மல்லிகாதாசுக்குக் கவலையாகி விட்டது. "திவாகர் சார்தான் ஊக்கம் கொடுத்தது. நல்லாப் பண்ணுவேம்மா என்று உற்சாகப்படுத்தியது. காட்சி முடிந்து ‘கட்’ சொன்னதும் என்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு ‘சாரி’ சொன்னார் அவர். சில காட்சிகள் பல டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தன. என்றாலும் பொறுமையாய்த் திரும்பத் திரும்ப – கற்பழித்தது – நடித்துக் கொடுத்தது என்னால் மறக்க முடியாதது."

கல்யாண ரிசப்ஷனில் ஏதோ மெல்லிசைக் குழுவின் கச்சேரி. கிளாமர் திவாகர், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்தக் கற்பழிப்புப் பிரபலப் பாடலை… ‘தப்பிக்க முடியாது!’ பாடி விசில் பாராட்டுப் பெற்றுக் கொண்டான்.

விநியோகஸ்தர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். ஷிவ்சந்தோஷ் வரவில்லை. தங்கை கல்யாணத்துக்கு அண்ணனே வரவில்லையா?

தங்கையாக அவள் அவனுடன் ‘அம்மா செத்துவிட்டாள்’ என அழும் காட்சியில் ஷிவ்சந்தோஷ் சில்மிஷம் செய்து விட்டான். படப்பிடிப்பில் ரகளை ஆகி… கிளாமர் திவாகர் தலையிட்டு அவளைக் காப்பாற்றினான். அப்போதுதான் உங்களுக்குள்… காதல்…?

அட! வெட்கப்பட்டாள் மல்லிகாதாஸ்!

அது எப்படியோ கிசுகிசு செய்தியாக வெளியாகி விட்டது. சின்ன சைஸ் ஜாக்கெட் போட்ட நடிகை ஒருத்தி, அந்தச் செய்தி ஷிவ்சந்தோஷைக் களங்கப்படுத்தும் நோக்கத்துடன் கிளப்பப்பட்டதாகப் பேட்டி தந்தது தனி விஷயம். அவள் மார்க்கட்டு சரிந்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டிய காலக்கட்டம் அவளுக்கு.

About The Author

3 Comments

Comments are closed.