கறி ( மட்டன்) சமோஸா

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1 பெரியது
இஞ்சி – 1 அங்குலம்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லித்தழை,புதினா இலை -தேவையான அளவு
உப்புத் தூள் – தேவையான அளவு
நெய் – 2 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மைதா – 350 கிராம்
சமையல்சோடா- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சமையல்சோடாவை கலந்து சலித்த பின் தேவையான உப்புத் தூள், 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.அரை மணி நேரம் கழிந்த பின்னர், மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெயில் கொத்துக்கறியை போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், மல்லித்தழை, புதினா இலை இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை அரை கோப்பை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, பிசைந்துக் கொள்ளவும்.
கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய் , கரம் மசாலா,தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும்.

மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் பாதியாக வெட்டி, அதை முக்கோண வடிவமாக அமைத்து, அதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும்.

அரை மணி நேரம் அப்படியே உலர வைக்க வேண்டும். அதன்பின் வாணலியில் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய வைத்து, சமோஸாக் களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறலாம்.

சுவையான ‘கறி சமோஸா’ தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author