கல்யாணமாம் கல்யாணம் (3)

வற்றாத புன்னகையும்
வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
கருத்தினை சைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தாமல் துடைத்துவிட்டு
சிரிப்பாளே பெண்ணின்தாய்

*
‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author

1 Comment

  1. சோமா

    வந்தாடும் வசந்தங்கள்
    வாழ்த்துக்கள் கூறிநிற்கும்
    முந்தானை எடுத்துமெல்ல
    முந்திவரும் கண்ணீரை
    சிந்தாமல் துடைத்துவிட்டு
    சிரிப்பாளே பெண்ணின்தாய் – நல்ல வரிகள்.

Comments are closed.