காலையில் — ஒரு ஒளி ஒலிச்சித்திரம்

கங்குல் கலையச் சேவல்கள்
காகளம் ஊதும் வேளையிலே
குங்குமப் பூக்கள் அடிவானில்
குலுங்கு வதைப்போல் செவ்வரிகள்.
புலரிப் பொழுதில் பறவையினம்
பூபாளத்தின் குழைவுகளைச்
சிலுசிலுப் பேற்றும் பூந்தென்றல்
சிவிகையி லேற்றித் தூதுவிடும்.

சிறுசிறு வைரத் திவலைகள்
சிதறிக் கிடக்கும் புல்நுனிமேல்;
பொறுக்கி எடுக்கக் குனிவதற்குள்
பொன்முகக் கதிரோன் திருடுகிறான்

குடத்தில் மங்கையர்`மொள்ளும்நீர்
குபுகுபு வென்னப் புகும்ஓசை?
படித்துறை மீது அவர்ஆடை
படியத் துவைக்கும் தாளஒலி;

கன்றுகள் தாய்மடி முட்டுகையில்
கழுத்துச் சிறுமணி கிணுகிணுக்கும்;
மன்றல் முடிக்கக் கோத்தும்பி
மலரைச் சுற்றி ரீங்கரிக்கும்;

கோலம் போடும் பூவையர்கை
குலுங்கும் வளையல் சங்கீதம்;
ஆலயக் கண்டா மணிநாதம்
அகச்சுவர் மோதும் எதிரொலிகள்.

சூடிக் கொடுத்த திருப்பாவை
சுப்ர பாதம் பல்லாண்டு
பாடிப் பள்ளி எழுச்சிசெயப்
பரமன் தாமரை கண்மலர்வான்.

பாதசரங்களின் பண் உதிரப்
பாவையர் கோவில் வலம்வருவார்;
நாதசுரத்தின் இசை வெள்ளம்
நதியாய் விசும்பின் வழிபாயும்.

பயிரிடை வாய்கால் வழிதண்ணீர்
பாயும் ஒசை; பானையிலே
தயிரிடை மத்து சுழல்அரவம்;
தத்தும் குருவியின் பாதஜதி.
—-

About The Author

1 Comment

  1. ram

    புதுக்கவிதை எழுதாமல் மரபுக் கவிதை-உம்
    புலமைக்குச் சான்றாக படித்தேன் அதனை
    மதுக்கவிதை எனமகிழ்ந்து தந்தேன் வாழ்த்தும்-மரபு
    மாறாதீர் என்றென்றும் மகிழ்வில் ஆழ்த்தும்

Comments are closed.