கிளியோபாட்ரா (45)

கிளியோபாட்ராவுக்கு மன்னிப்பு கொடுத்துவிட்டு ஆண்டனியைப் பழி வாங்க காத்திருந்த ஆக்டேவியன், கிளியோபாட்ராவிடம் தைரஸ் என்பவனைத் தூதாக அனுப்பினான். அவன் அவளிடம் ஆக்டேவியனின் நிலையைத் தெளிவுபடுத்திக் கூறினான்.

"எங்கள் தலைவர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். தாங்கள் ஆண்டனியுடன் இருப்பதற்குக் காரணம் அன்பு அல்ல, அச்சம்தான் என்பது இளைய சீஸருக்கு நன்றாகவே தெரியும்".

"ஓ… இப்படியெல்லாம் அவர் நினைக்கிறாரா?"

"ஆண்டனியுடனான தங்கள் நெருக்கம் உங்களுக்கு களங்கத்தையே ஏற்படுத்தும். அதனால் உங்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. இப்போது உங்கள் கருத்தை அறிந்து வரவே என்னை இங்கே அனுப்பி இருக்கிறார். தங்களது நிலைபாட்டைச் சொன்னால், அவரிடம் முறையாக எடுத்துரைப்பேன்…"

"எகிப்துக்கு எதிரான கடற்போரில் அவர் படை பெற்றுள்ள வெற்றியை நான் ஏற்றுக்கொள்வதாகச் சொல். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் சொல்லிவிடு".

"நன்றி அரசியாரே!" என்ற ஆக்டேவியனின் தூதுவன் கிளியோபாட்ராவின் கையை முத்தமிட்டான். இதை அங்கு வந்த ஆண்டனி பார்த்துவிட்டான். அக்கணமே அவனது முகம் கோபத்தால் சிவந்த து. ஆக்டேவியனின் தூதுவனை சவுக்கால் அடிக்குமாறு தன் வீரர்களுக்கு அவன் உத்தரவிட்டான். கோபம் அடங்காத ஆண்டனி, அதே அனல் வீசும் கோபப் பார்வையை கிளியோபாட்ரா மீதும் வீசினான்.

"தூது வந்த ஒருவனிடம் முத்தமிட கையைக் கொடுப்பது ஒரு அரசிக்கு அழகா?"

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?"

"கை நீட்டி பரிசு பெறும் ஒரு சேவகனிடம் கையை நீட்டிவிட்டு என்னிடமா கேள்வி கேட்கிறாய்? இந்த ஆண்டனியின் காதல் மனைவி இப்படி இருக்கக்கூடாது…" என்று அவன் சொல்லி முடித்தபோது, சவுக்கடி பட்ட தூதுவன் தைரஸை ஆண்டனியின் வீரர்கள் இழுத்துக்கொண்டு வந்து அவன் முன்பு நிறுத்தினர்.

"ஆக்டேவியன் வெற்றி பெற்ற இந்த நாளில் அவன் தூதுவன் நம்மிடம் சவுக்கடி வாங்கியிருக்கிறான். இங்கு நடந்தை அவன் ஆக்டேவியனிடம் போய்ச் சொல்லட்டும்" என்ற ஆண்டனி அந்த தூதுவனை விரட்டியடித்தான்.

நடந்ததை எல்லாம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. ஆனாலும், அவள் மனதில், ஆண்டனியின் கடுமையான வார்த்தைகள் ஆழமாய்ப் பதிந்து விட்டிருந்தன.

"ஆண்டனி! என் கையை ஆக்டேவியனின் தூதுவன் முத்தமிட்டதைப் பற்றி தவறாக விமர்சனம் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது?"

"அப்படியென்றால், அந்த இளைய சீஸரான ஆக்டேவியனை மகிழ்விக்க ஒரு சேவகனைக் காதலிப்பாயா?"

"எப்போதும் அன்பாய்ப் பார்த்த உங்கள் பார்வையும், தேனினும் கனிவாகப் பேசிய உங்கள் பேச்சும் இப்போது திடீரென்று மாற என்ன காரணம்?

"என் மீதான அன்பு இப்போது உன்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இல்லையெனில் ஒரு ஏவலாள் முத்தமிடும் பொருட்டு உன் அழகிய கரங்களை நீட்டி இருக்க மாட்டாய்".

"ஏன் ஆண்டனி திரும்பத் திரும்ப அதே விஷயத்திற்குள் நுழைகிறீர்கள்?"

"இப்போது அதுதானே பிரச்சினை?"

"எதையும் தவறாக நினைத்தால் தவறாகத்தான் தோன்றும். ஆக்டேவியனின் தூதுவன், அவன் படை பெற்றுள்ள வெற்றியின் காரணமாக ஒருவித மமதையில் என் கரத்தை முத்தமிட்டான். அவன் என் கரத்தை முத்தமிட்ட அக்கணமே அவனை என்னால் கொன்றிருக்க முடியும். ஆனால் அவன் ஆக்டேவியனின் அந்தரங்க செய்தியை சொல்வதற்காக நம்மைத் தேடி வந்துள்ளான். அப்படியிருக்கும்போது அவனை முறையாக நடத்துவதுதான் போர் சூழலில் சரியானது"

"நீ சொல்வதைப் பார்த்தால், என்னைப் பற்றி கவலைப்பட்டது போலவே தெரியவில்லையே…??"

"ஆண்டனி! திரும்பத் திரும்ப ஏன் என்னை வதைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதற்குப் பதிலாக ஒரேயடியாக சாகடித்து விடுங்கள்" என்ற கிளியோபாட்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.

தன் மீது கிளியோபாட்ராவின் காதல் எள்ளளவும் குறையவில்லை என்று கணித்த ஆண்டனி வெகுநேரத்திற்குப் பிறகு சமாதானம் ஆனான்.

"அழாதே கிளியோபாட்ரா. உன்னை நான் சந்தேகப்படவில்லை. ஏதோ ஒரு ஆதங்கத்தில் அப்படி கேட்டுவிட்டேன். உன் மனதை எனது பேச்சு புண்படுத்தி இருந்தால் இப்போதே மன்னித்துவிடு!" என்று சொன்னான்.

இதற்கிடையில், கடல் வழிப் போரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ரோமானியப்படை, அடுத்ததாக தரை வழியில் எகிப்து படையை எதிர்கொள்ளத் தயாரானது. இதையறிந்த ஆண்டனி உற்சாகம் ஆனான். ஆக்டேவியனின் ரோமானிய தரைப்படையை விட தனது கூட்டுப்படையின் வலிமை அதிகம் என்று அவன் அறிவான்.

"எனது பலம் மூன்று மடங்காகும். துணிவோடு போராடுவேன். என் கையில் சிக்கிய எதிரிகள் எவரும் தப்பிக்க முடியாது. முன்பு எனது பகைவர்கள் பலருக்கு உயிர்ப்பிச்சை வழங்கினேன். ஆனால், இப்போது நான் என்னை எதிர்க்கும் அனைவரையும் மரண உலகத்திற்கு அனுப்பப் போகிறேன்…" என்று ஆண்டனி கர்ஜித்ததாக பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர்.

ஆண்டனியின் புதிய உற்சாகம் கிளியோபாட்ராவுக்கு புது தெம்பையும் நம்பிக்கையையும் தந்தது. கடற்போரில் தோற்ற தனது படைக்குத் தரைப்போரில் ஆண்டனியின் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பால் வெற்றி கிடைக்கும் என்று இவளும் எண்ணினாள்.

ஆனால், அவள் போட்ட கணக்கை சுக்கு நூறாக உடைத்து தகர்த்தெறிய தயாராகிக் கொண்டிருந்தான் ஆக்டேவியன்.

(இன்னும் வருவாள்…)

About The Author