கிளியோபாட்ரா (48)

"ஆண்டனி என்னை விடுங்கள். போர்க்களத்தில் நடந்ததை முதலில் கூறுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். அது, உங்களைப் போன்ற மாவீரனுக்கு அழகும் அல்ல…"  தனது கழுத்தை வேகமாக நெறித்த ஆண்டனியிடம், கிளியோபாட்ராவால் இதற்கு மேலும் பேச முடியவில்லை. கிளியோபாட்ரா கெஞ்சியதால் அவளைத் தனது பலமான பிடியில் இருந்து விடுவித்தான் ஆண்டனி.

"ஏன் என்னை ஏமாற்றினாய்? சொல்லி வைத்தது போல் நம் கடற்படையும், தரைப்படையும் ஆக்டேவியனிடம் சரணடைய என்ன காரணம்? நமது படைவீரர்களிடம் எனக்குத் தெரியாமல் நீ என்ன சொல்லி வைத்தாய்?"

"ஆண்டனி… நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. போர்க்களத்தில் நடந்ததை முதலில் கூறுங்கள்".

"உன்னை நம்பி அந்த ரோமாபுரியை விட்டு நீயே கதியென கிடந்த எனக்கு நீ நல்ல பாடம் கற்பித்து விட்டாய். உண்மையைச் சொன்னால் உனக்கு கோபம் வருகிறது. எகிப்து படைகள் ஆக்டேவியனிடம் ஒட்டுமொத்தமாக சரணடைந்ததன் காரணம்தான் என்ன?".

"ஆண்டனி! அவசரப்பட்டு வார்த்தையை உதிர்க்கிறீர்கள். எனக்கு உங்கள்மேல் கோபம் வரவில்லை. உங்கள் அறியாமையையும், நம்பிக்கை இல்லாத்தன்மையையும் நினைத்துதான் பரிதாபப்படுகிறேன். நீங்கள்தானே போர்க்களத்தில் இருந்தீர்கள். நீங்கள்தானே நம் படைகளை வழிநடத்திச் சென்றீர்கள்? உங்களுக்கே அதற்கான காரணம் தெரியாதபோது எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?"

"உன் பேச்சைப் பார்த்தால் நடந்த சம்பவங்களுக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் இருக்கிறதே… ஒருவேளை நீ நடிக்கிறாயா? இல்லை உண்மையைத்தான் சொல்கிறாயா?"

"ஆண்டனி… இதற்கு மேலும் உங்களிடம் நான் பொறுமையாக விளக்கம் கூறிக் கொண்டிருக்க முடியாது. தோல்வி பயத்தில் உயிருக்குப் பயந்து எதிரியிடம் சரணடைந்து விட்ட நம் படையினரை, நான்தான் சரணடையச் சொன்னேன் என்று நீங்கள் சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை".

"நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை! நீ சொல்லித்தான் அவர்கள் அந்த ஆக்டேவியனிடம் சரணடைந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை என்கிறேன்".

"ஆண்டனி! நீங்கள் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. மனைவியிடம் நம்பிக்கை வைத்துப் பேசவேண்டிய கணவனாக நீங்கள் நடந்துகொள்ளவில்லை….".

கிளியோபாட்ராவின் மேலும் தொடர்ந்த பேச்சினால் கொந்தளித்த ஆண்டனி, அந்த போர்ப்படை முகாமில் இருந்து வேகமாக வெளியேறினான். ஆண்டனியைத் தொடர்ந்து கிளியோபாட்ராவும் அங்கிருந்து வெளியேறி, அலெக்ஸாண்டிரியாவில் உள்ள தனது அரண்மனையை அடைந்தாள். ஆண்டனி பேசிய விஷயங்கள் அவளது மனதை பெரிதும் பாதித்திருந்தன.

மிகவும் சோகமாக அமர்ந்திருந்த கிளியோபாட்ராவிடம் ஒரு யோசனையைத் தெரிவித்தாள் அவளது தோழி சார்மியான். பின்னர் வரலாறே மறக்க முடியாத சம்பவம் நடைபெறக் காரணமாக அந்த யோசனை அமையப்போவதை அத்தோழி அறியவில்லை!

"அரசியாரே! விரைவில் நாம் அனைவரும் ஆக்டேவியனால் கைது செய்யப்படவோ அல்லது கொல்லப்படவோ நேரிடலாம். ஆண்டனியும் இப்போது நம் வசம் இல்லாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதை நான் தங்களிடம் தெரிவிக்கலாமா?"

"ஆண்டனியே என்னை ஏமாற்றுக்காரி என்று சொல்லிவிட்டார். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? இருந்தாலும் தாராளமாக உன் யோசனையைச் சொல்".

"நமது குற்றவாளிகளைக் கொலைக்களக் கூடத்தில் வைத்து தண்டிப்போம் அல்லவா! இப்போதைக்கு தங்களுக்கு பாதுகாப்பான இடம் அது ஒன்றுதான் என்பது என் கணிப்பு. நீங்கள் அங்கு இப்போதே புறப்பட்டுச் சென்று விடுங்கள். ஆண்டனி உட்பட வேறு யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம்".

"இல்லை சார்மியான்! எதிர்பார்க்காத தோல்வி காரணமாக அவர் ஏதோ ஒருவித வேகத்தில் என்னை அப்படிப் பேசிவிட்டார். ஆனால், அவரது மனதிற்குள் நிச்சயம் எனக்கு எப்போதும் ஓர் இடம் உண்டு".

"அரசியாரே! நான் தங்களின் நெருங்கிய தோழி என்கிற முறையில் என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். சற்று நேரத்திற்கு முன்பு தங்களை மதிப்பிற்குரிய ஆண்டனி தவறாகப் பேசினார் அல்லவா? அவர் இதயத்தில் தங்களுக்குத் தனி இடம் இருப்பதாகவும் சொன்னீர்கள். தங்கள் மீதான அவரது காதல் எத்தகையது என்பதை இந்த நேரத்தில் ஏன் பரிசோதித்துப் பார்க்கக்கூடாது?"

"அது தவறு. காதலர்களுக்குள் நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் காதலர்களாகவே இருக்க முடியாது. இப்போது ஆண்டனி வேண்டுமானால் என்னைத் தவறாகப் பேசலாம். ஆனால், அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கிளியோபாட்ராவுக்காக தனது உயிரைக் கூட கொடுப்பார். அவர் மனதில் எனக்கு இடம் இல்லை என்று மட்டும் நிச்சயம் சொல்லவே மாட்டார்".

"நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் அரசியாரே! ஆனாலும்…"

"என்ன ஆனாலும்… அவரை சோதித்தே ஆக வேண்டும் என்று சொல்ல வருகிறாயா? அப்படியெனில் அவரை எப்படி சோதிக்க வேண்டும் என்கிறாய்? நமது படைகள் எல்லாம் எதிரியிடம் சரணடைந்துவிட்ட இந்த நேரத்தில் இப்படியொரு சோதனை அவசியம்தானா?"

"தங்களது கருத்திலும் நியாயம் இருக்கிறது அரசியாரே! ஆனாலும், தங்களைப் பற்றிய ஆண்டனியின் விமர்சனத்தின்படி வரலாறு தங்களைத் தவறாக கருத வாய்ப்பு உண்டு அல்லவா?"

"ஆமாம்… இப்போதுதான் புரிகிறது சார்மியான். என்னுடன் பழகிப் பழகி நீயும் கூட ராஜதந்திரத்துடன் பேச ஆரம்பித்து விட்டாய். வரலாறு மிக மிக முக்கியம் தோழி! அதுசரி… எனது ஆண்டனியை நான் எப்படி சோதிப்பது? அதுவும், இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில்!"

"நான் இப்போது கூறும் யோசனையை நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. வரலாறு உங்களைப் பழிக்கக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன். கொலைக்களக் கூடத்தில் தஞ்சம் புகும் தாங்கள் அங்கே இறந்துவிட்டதாக….."

இதற்கு மேல் சார்மியானை பேச அனுமதிக்கவில்லை கிளியோபாட்ரா. "நிறுத்து உன் பேச்சை! பொய் சொல்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. ஆண்டனி என் மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நீ என்னவோ தவறுதலாக வழிகாட்டுகிறாயே…"

"மன்னிக்க வேண்டும் அரசியாரே! தங்கள் மனம் புண்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் நான் அவ்வாறு சொல்லவில்லை. தங்களைப் பற்றி அப்படியொரு பொய்யான தகவலை மதிப்பிற்குரிய ஆண்டனியிடம் கூறினால், அவர் தங்களை நோக்கி ஓடோடி வருவார். அவர் மனதில் நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பதற்காக அப்படிச் சொல்ல வந்தேன். அதில் தவறு இருந்தால் மீண்டும் என்னை மன்னித்து விடுங்கள்…" என்ற சார்மியான், சட்டென்று கிளியோபாட்ராவின் காலில் விழுந்துவிட்டாள்.

சில நிமிடங்கள் மவுனமாக இருந்த கிளியோபாட்ராவுக்கு சார்மியான் சொன்ன யோசனை சரியாகவே தோன்றியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ரகசியமாக நெருங்கிய தோழியர் சிலருடன் அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் இருந்து வெளியேறி எகிப்தின் கொலைக்களக் கூடத்தைச் சென்றடைந்த கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு அந்தப் பரபரப்பான தகவலை அனுப்பினாள்.

"எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் மறைந்திருந்த கிளியோபாட்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டாள்!"

(இன்னும் வருவாள்…)

About The Author