சில்லுனு ஒரு அரட்டை

வாங்க! வாங்க! வாசகர்கள் எல்லோருக்கும் நிலாக் குடும்பம் சார்பா, தமிழர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல்னு சொன்னதும் சின்ன வயசுல பூப்பறிக்கப் போனதுதான் நினைவுக்கு வருது. ஊரில் இருக்கற வாண்டுகள் எல்லாம் உறவுக்காரங்க வாங்கி தரும் தின்பண்டங்களுடன் ஆத்தங்கரையோரம் வரைக்கும் பலவிதமான பாடல்கள் பாடிக் கொண்டு நடந்து செல்வோம். ஆலமர, அரசமர நிழலில் அமர்ந்து யாருக்கு எது பிடிக்கிறதோ அதை யாருடைய பையிலிருந்தும் எடுத்து சாப்பிடுவோம். கட்டாயம் கரும்பு உண்டு (கண்டதையும் சாப்பிட்டா செரிக்க வேண்டாமா?). மத்தியான நேரம் வரைக்கும் ‘கோ கோ’ , கபடி, கண்ணாம்பூச்சி விளையாடிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.

வரும் வழியெங்கும் இருக்கிற பூக்களையும், மஞ்சள் கிழங்கையும் சேர்த்துக்கிட்டே வருவோம். ஒவ்வொருத்தர் கையிலும் கட்டாயம் 2 அடி நீள பூங்கொத்து காம்புடன் இருக்கும். கேலிக்காக ஒருவரையொருவர் அடிக்க வர, வாய்க்காலிலும், வரப்புகளிலும் விழுந்து ஒடுவதுண்டு. இதில் ‘என் முறைப் பெண்ணை அடிக்கறது யாரு’ன்னு, இல்லாத மீசையை முறுக்கும் காளைகளும் உண்டு. கல்யாணம் பண்ணிக்கப் போற பெண்ணைப் பார்த்துப் பேச மைனர்கள் சைக்கிளை விமானமாய்க் கருதி பறந்து வருவதும் நடக்கும். பெண் பார்க்கும் படலம் பற்றிய நகைச்சுவைக் கதையைப் படிச்சிட்டு வாங்க, பொங்கல் சாப்பிடலாம்.

https://www.nilacharal.com/ocms/log/07060911.asp

நாங்க வருவதற்குள் பொங்கல் தயாராகி இருக்க, நடு வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் மேல் நாங்கள் கொண்டு வந்த பூக்களைப் பரப்பி, தோரணமாய் மஞ்சளும், கரும்பும் வைச்சு, படையல் போடுவோம். அடுத்த நாள் காலையில் பூக்களுடன் பூஜையில் வைத்த பிள்ளையாரை வாய்க்கால் தண்ணியில் கரைக்க அதிகாலையில் செல்வோம். முதலில் சொன்ன மாதிரி ஆட்டம் பாட்டத்தோட. பிள்ளையார் வாய்க்கால் தண்ணியில் கரைய, கொண்டு வந்த மஞ்சளைப் பூசிக் குளித்து வீடு திரும்புவோம்.

அமெரிக்காவில் காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு டி.வி நிகழ்ச்சியைப் பார்த்தோ, ஷாப்பிங் போயோ பொங்கலைக் கொண்டாடறோம். அதுவும் ஆளுக்கொரு அறையில், ஆளுக்கொரு மடிக் கணினியுடன்!

மடிக் கணினியும் கிடைக்காம, செய்தித்தாளைப் படிச்சா, அதில் வந்த விளம்பரத்தைப் பார்த்து சிரிச்சு வயிறு புண்ணாச்சு.

MONDAY: For sale – Vishanth has a sewing machine for sale. Phone 98407 16581 after 7PM and ask for Mrs Mani who lives with him cheap.

சரி, ஏதோ பிரிண்டிங்கில் தப்புன்னு சிரிச்சு முடிச்சேன். அடுத்த நாள் படிக்கும் போது எதேச்சையாக, விளம்பரப் பகுதியைப் பார்த்தா

TUESDAY: Notice: We regret having erred in Vishanth’s ad yesterday. It should have read, "One sewing machine for sale cheap. Phone 98407 16581 and ask for Mrs Mani, who lives with him after 7 PM."

அட மக்கா ! சரி பண்றேன் பேர்வழின்னு கலாய்ச்சிட்டிங்களேன்னு நினைச்சேன்.

மறுநாள் என்ன போடறாங்கன்னு பார்த்தேன்.

WEDNESDAY: Notice: Vishanth has informed us that he has received several annoying telephone calls because of the error we made in the classified ad yesterday. The ad stands correct as follows: "For sale – Vishanth has a sewing machine for sale; Cheap. Phone 98407 16581 after 7 PM and ask for Mrs.Mani who loves with him.

யப்பா ! முடியலடா சாமி!

ஐயா! எப்பத்தான் சரியா போடுவீங்கன்னு நினைச்சிட்டு அடுத்த நாள் விளம்பரத்தைப் பார்த்தா …

THURSDAY: Notice: I, Vishanth, have no sewing machine for sale. I smashed it. Don’t call 98407 16581 as I have had the phone disconnected. I have not been carrying on with Mrs. Mani. Until yesterday, she was my housekeeper but she quit!

இன்னும் கொஞ்சம் சிரிக்க, ரிஷியோட தேர்தல் இராசிபலன்களைப் படிங்க:

https://www.nilacharal.com/ocms/log/05110911.asp

தை மாசத்தில் இன்னொரு மறக்க முடியாத சின்ன வயசு ஞாபகம் தேர்த் திருவிழா. சென்னிமலை, சிவன்மலைன்னு இரு மலைகளுக்கிடையே உள்ள கிராமம் எங்க ஊர். பொங்கல் முடிந்ததும் வரும் பெளர்ணமிக்கு 10 நாள் முன்னாடி எல்லோரும் ஒருவர் வீட்டில் கூடுவோம். களிமண்ணால் செய்யப்பட்ட உக்கை என்னும் செவ்வக வடிவ உருவத்தை கிடைக்கும் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்து கும்மிப் பாட்டு பாடி நள்ளிரவு வரை விழித்திருப்போம். பத்து நாளும் ஒவ்வொரு விதமான சாதம்னு கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். அதிக மின்சாரப் பழக்கமில்லாத அந்தக் காலங்களை இப்போது நினைத்தாலும் மனதிற்குள் பூ பூக்கும். அந்தக் கால விளக்குகள் பற்றிய ஞானசம்பந்தன் கட்டுரையைப் படிக்க:

https://www.nilacharal.com/ocms/log/08170914.asp

கடைசி இரண்டு நாளும் விடிய விடிய கும்மி, கோ கோ, கபடின்னு ஊரே களை கட்டும். கடைசி நாள் ஆளுக்கொரு செடி நடுவோம். அதோட, தேருக்குக் கிளம்புவோம் ஒரு வருடமா உண்டியலில் சேர்த்த காசில் விரும்பியதை வாங்க.

மரம் வளர்ப்பையும் விளையாட்டாய் வளரும் தலைமுறைக்குச் சொல்லி தந்த நம் முன்னோர்களின் பண்பாட்டைத் தொலைத்து விட்டு பலவிதமான நோய்களுடன் அல்லாடுகிறோம் இப்போது. பெங்களூரைச் சேர்ந்த ராஜு என்னும் IAS அதிகாரி பீகாரில் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தையும் பீகாரின் வறுமையையும் சரியான விதத்தில் பயன்படுத்தி பீகாரை மீண்டும் மரங்களின் மூலம் வளமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதிலும் வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர், விதவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மரங்கள் வளர்க்கச் சொல்லியிருக்கிறார். ஒரு கிராமத்துக்கு 50,000 வீதம் நாலு பேர் உள்ள குடும்பம் 200 மரங்கள் வளர்க்க வேண்டும். 90 % வளர்ச்சியைக் காட்டும் குடும்பத்திற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும்.

75 – 80% வளர்ச்சிக்கு ஜந்தாயிரம் ரூபாயும், அதற்கும் கீழேயுள்ள மரங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிங்கதான் செய்யனும்னு இல்ல, நீங்க கூட உங்களுக்கு அருகிலுள்ளவர்களுடன் மரம் வளர்ப்பைத் தொடங்கலாம்.

அது சரி! நான் ஆரம்பிச்ச நிறுவனம் என்னாச்சுன்னு நினைக்கிறீங்களா? Born free Arts நிறுவனத்துடன் இணைந்து குழந்தைத் தொழிலாளர்களுக்கு இலவச கணினி வகுப்புக்களை நடத்தறோம். எங்கள் தொடக்கப் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அவரவர் ஊர்களில் மரம் நட்டுள்ளோம் . பசுஞ்சோலை என்கிற எங்கள் இயக்கத்திற்கு வனத்துறை இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கிறது. இதெல்லாம் நான் தற்பெருமைக்குச் சொல்லலைங்க. எங்களைப் பார்த்து உங்களில் யாருக்காவது ஆர்வம் வரணும்தான்!

புதுப்பானையில் பொங்கிடும் பொங்கலைப் போல, இனியெல்லாம் இன்பமாய் அமைந்து அன்பாய், ஆரோக்கியமாய் உங்கள் வாழ்வு சிறக்க சிங்கியின் வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல்!

About The Author

6 Comments

  1. SANTHOSHI

    வணக்கம் தோழி கவிதாவிற்கு! பொங்கல் செய்திகள் அனைத்தும் அருமைங்க. ஆனால் இந்த கோலம் போட்டுவிட்டு மறுநாள் கால் வலியில் நாம் படும் அவஸ்தை இருக்கே! சொல்ல முடியாது. இருந்தாலும் அதுவும் சுகமான அனுபவமே. எங்களுக்கும் ஏதாவது இலவச வகுப்புகள் நடத்தி உங்களுக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுக்கலாமே! மற்றபடி உங்கள் செய்திகள் அனைத்தும் அருமைங்க. வாழ்த்துக்கள்.

  2. Kavitha Prakash

    வணக்கம் சந்தோஷி,

    வருகைக்கு நன்றி !.

    // எங்களுக்கும் ஏதாவது இலவச வகுப்புகள் நடத்தி உங்களுக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுக்கலாமே! // – நிச்சயம் ஒரு நாள் உங்களை சந்திக்கும் போது சொல்லி தருகிறேன்.

  3. Rishi

    கவிதா ஆரம்பிச்சிருக்கற இயக்கத்திற்கு பேர் வச்சது நான்தேன் நான்தேனு பெருமையா சொல்லிக்கறேன்.. (கவிதா சொல்லாம விட்டுடாங்களே!!)

  4. kavitha Prakash

    தவறுக்கு வருத்தங்கள் ரிஷி !

    அதற்குப் பதிலாய் 100 மரக்கன்று தந்துவிடுகிறேன். சந்தோஷமா?. சந்தோஷம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே?

  5. Rishi

    அட! நமக்குள்ள என்னங்க கவிதா வருத்தமெல்லாம் தெரிவிச்சிக்கிட்டு!
    சொல்லாம விட்டுட்டீங்கனு நான் சும்மா கலாய்க்கறதுக்காக சொன்னேன்..

    அது சரி… சந்தோஷம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு ஏதோ பொடி வச்சுப் பேசுறாப்ப்லத் தெரியுது…!!

  6. Kavitha Prakash

    நான் சாதரணமாத்தான் சொன்னேன்.

    ஏதோ பழமொழி சொல்லுவாங்களே ! என்னமோ குறுகுறுக்கும்னு அதுமாதிரி நீங்களே நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை

    🙂

Comments are closed.