ஜோதிடம் கேளுங்கள்

குருஜி, நான் சைப்ரசில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது கல்வியில் தடங்கல் ஏற்படுகிறது. இது தொடருமா? எனது பல்கலைக்கழக கல்வியில் தடங்கல் ஏற்படுமா? நான் கல்வியைத் தொடரமுடியுமா? – தனுஷ்காந்த், வவுனியா, இலங்கை.

அன்புடையீர், தற்போது தங்களுக்கு வயது 21 ஆகின்றது. இரண்டாமிடத்தில் ராகு அமர்ந்து இரண்டிற்குடைய குரு 3ல் அமர்ந்துள்ளதால் கல்வியில் தடை ஏற்படுகிறது. இருப்பினும் குரு சந்திரனுக்குப் 11ஆம் இடத்தில் அமர்ந்து உள்ளதாலும், புதன் 5ஆம் இடத்தில் திரிகோணம் பெற்றுள்ளதாலும் தங்களது கல்வி தொடரும். பல்கலைக் கழகப் படிப்பில் நிச்சயம் தேர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுதல் நல்லது. அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருதல் மன தைரியத்தையும் கிரக தோஷங்களையும் நீக்கி சுபிட்சத்தைத் தரும். தங்களது வலது கை மோதிர விரலில் கனக புஷ்பராகம் மோதிரமாகச் செய்து அணிந்து கொள்ளவும்.

கார்மெண்ட்ஸ் (Garments) தொடர்பான தொழில் என்னுடைய ராசிக்கு எப்படி இருக்கும்? அதைச் செய்யலாமா? – உமா, அரவக்குறிச்சி.

அன்புடையீர், தற்போது தங்களுக்கு வயது 29 ஆகின்றது. ஜென்ம லக்கினம் கும்பம். 10க்குடைய செவ்வாய் 8ஆம் இடத்தில் கேதுவுடன் கூடிச் சனி, ராகு பார்வை பெற்றுள்ளதால் கார்மெண்ட்ஸ் சம்பந்தமான தொழில்கள் செய்தால் பொருள் விரையம் உண்டாகும். எனவே இத்தகைய ஜவுளி, நூல், ரெடிமேட் ஆடைகள் சம்பந்தமான தொழில்களைத் தவிர்க்கவும். காய்கறி, இலை, பூ, பழங்கள், ஆகிய தொழில்களைச் செய்தால் நற்பலனைத் தரும். சனிக்கிழமை விரதமிருந்து ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும். வலது கையில் வைரம் அல்லது வெள்ளைப் புஷ்பராகக் கல் பதித்த மோதிரம் அணிந்து கொள்ளவும்.”

About The Author