ஞாயிறு முதல் சனி வரை (7)

சனி

பெயர்: செல்வா
படிப்பு : பி.ஏ
தொழில் : வேலை தேடுவது

ஏழரைச்சனி அவனுக்கு உச்சத்தில் இருப்பதாக ஜோசியர் சொல்லியிருக்கிறார்.

அன்று..

டீக்கடையில் செந்திலைப் பார்த்தான் செல்வா. செந்தில் செல்வாவின் பால்ய நண்பன். சேல்ஸ் ரெப்பாக இருக்கிறானாம். நன்றாகப் பேசினான். கடைசியில் "இதை வைத்திரு.. நாளை வாங்கிக் கொள்கிறேன்.." என்று ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டுப் போனான்.

போலீஸ் செல்வாவை பிடித்துக்கொண்டது. காரணம்? பெட்டியில் இருந்தது போதைப் பொருள். போலீஸ் செல்வாவை அடித்து துவைத்து விட்டது. சி.பி.ஐயின் ‘ஆண்ட்டிநார்க்கோட்டிக்ஸ்’ பிரிவு தலையிட்டதால், செந்தில் பிடிபட்டு செல்வா விடுதலையானான்.

வழியில் வக்கீல் வரதராஜன், "போலீஸ் மீது மான நஷ்ட வழக்கு போட்டு நஷ்ட ஈடு கேட்கலாம். என்ன சொல்ற.." என்றார் செல்வாவிடம். அவனுக்கும் ஆசைதான். ஆனால் சனியை நினைத்தால்தான் பயமாக இருந்தது.

பக்கத்து கடையில் சனிப்பெயர்ச்சி பலன்கள் என்ற புத்தகத்தைப் பார்த்தான். ‘ஆஹா! சனி பெயர்ந்து விட்டதா..?’ என்று நினைத்துக் கொண்டு "நீங்க கேஸைப் போடுங்க வக்கீல் சார். ஒரு கை பார்க்கலாம்" என்றான்.

பாவம்! அவனுக்குத் தெரியாது…அது போன வருடத்துப் புத்தகம் என்று!

About The Author