நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும் (2)

"மத்யானம் நீங்க குட்டித்தூக்கம் போட்டுட்டிருந்தப்ப, ஒங்க க்ளப் ப்ரஸிடன்ட்டோட மிஸஸ் ஃபோன் பண்ணாங்க” என்று பெருமையாய்ச் சொன்னாள்.

“இன்னிக்கி சாயங்காலம் ஃபாமிலி மீட்டிங், நீங்க கட்டாயம் வரணும்னாங்க. ஏழெட்டு மாசமா நீங்க ஃபாமிலி மீட்டிங்குக்கு என்னக் கூட்டிட்டே போறதில்ல, ஏங்க? இனி ஒவ்வொரு மீட்டிங்குக்கும் நா கட்டாயம் வருவேன், என்ன?”
குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

பிறகு என் பக்கத்தில் இன்னும் நெருங்கி, என் காதருகில் கேட்டாள், “ஆமா, என்னோட தலைவர் எப்ப ப்ரஸிடென்ட் ஆகப்போறாராம்?”

ப்ரஸிடென்ட்!

ரெண்டு வருஷத்துக்கு முந்தியே என்னைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். பதவியேற்பதற்கு மூணுமாசங்களுக்கு முந்திதான் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டுக் கொண்டிருப்பது உறைக்க ஆரம்பித்தது. இந்தத் தருணத்தில் சங்கத்தின் தலைவர் பதவியையெல்லாம் எடுத்துக் கொள்வது சரிப்பட்டு வராது என்று, பாபுவிடம் விண்ணப்பம் வைத்து, அவரைத் தலைவராக்கி விட்டேன். அதன் பிறகு சுந்தரம், இந்த வருஷம் மோகன், அடுத்த வருஷம் அனந்த கிருஷ்ணா.
அனந்த கிருஷ்ணாவையடுத்து நான்தான் என்று அதிகாரபூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இனியும் நான் கழண்டு கொண்டிருந்தால் க்ளப்பிலிருந்தே கழட்டி விட்டுவிடுவார்கள்.

ஆனது ஆச்சு, இன்னும் ஒரு மூணு மாசம் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தால், சினிமாவில் முத்திரை பதிக்க ஆரம்பித்து விடுவேன். கதாசிரியனாய் உள்ளே நுழைந்து, பாடலாசிரியனாய் ஓர் அவதாரமெடுக்கவும் திட்டமிருக்கிறது.
இப்பவெல்லாம் சினிமாவில் பாட்டா எழுதுகிறார்கள்? ஐயா எழுத ஆரம்பித்தால் தான் பட்டுக்கோட்டை, கண்ண தாசனுடைய பொற்காலம் திரும்பவும் தமிழ் சினிமாவில் விடியும். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாய்த் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து, யார் கண்டது, நான் இந்த கிளப்புக்கு ப்ரஸிடென்ட்டாய் ஆகிறபோது ஒரு சினிமா டைரக்டராகவும் ஆகியிருப்பேன்! இந்த க்ளப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு இணையாய்ப் பொருளாதாரத்தில் மீண்டும் உயர்ந்திருப்பேன்.

இதை இவளிடம் சொன்னபோது, ஆட்டோ டிரைவர் எங்களை அவதானிக்க மாட்டார் என்று உறுதி செய்து கொண்டு என்னை இறுக்கிப் பிடித்துக் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தாள். என் தோளில் தலை சாய்த்து, ஹோட்டல் போய்ச் சேரும் வரை மெய்மறந்த சந்தோஷத்திலிருந்தாள்.

நட்சத்திர ஹோட்டல் போர்ட்டிகோவில் ஆட்டோவில் போய் இறங்குவது அழகாயிருக்காது என்று வெளியிலேயே இறங்கிக் கொண்டோம். முன்னரே திட்டமிட்டு, காலத்தோடு வந்து சேர்ந்து விட்டது ரொம்ப நல்லது. காரில் வந்து இறங்குகிற மற்ற அங்கத்தினர்கள் எங்களுடைய வருகையைப் பரிகாசமாய்ப் பார்க்க வாய்ப்பில்லை.

மீட்டிங் முடிவுக்கு வருகிற தருவாயில், சங்கத்தின் பொருளாளர் எழுந்து, ஒவ்வொருவரிடமும் “அந்த ஆயிரம் ரூபாயை” நினைவுபடுத்தியபடி ஆசனம் ஆசனமாய் வந்தார். தயாராய்க் கொண்டு வந்திருந்த செக்கை எடுத்து நீட்டினார்கள் சிலர். வாலட்டிலிருந்து சலவை நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தார்கள் சிலர். அடுத்த மீட்டிங்ல குடுத்துர்றேன் சார் என்றார் ஒருவர். செக்கை எழுதி மறந்து வச்சிட்டு வந்துட்டேங்க, ஒங்களுக்குக் கூரியர்ல அனுப்பிச்சிர்றேன் என்றார் இன்னொருவர்.

நான் என்னுடைய வாலட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ஆயிரம் ரூபாய்.இன்றைய நிலையில் ஆயிரம் ரூபாய் ஓர் ஆடம்பரச் செலவுதான். நெஞ்சில் ஒரு நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒரு காலத்தில் ரிஸர்வ் பாங்க் ரிலீஸாக ஐயாயிரத்துக்குக் குறையாத புத்தம்புது நோட்டுக்கள் கொலுவிருந்த வாலட்டில் இன்றைக்கு கைமாத்து வாங்கிய ஆயிரம் ரூபாய்! அதுவும் சில நிமிடங்களில் ரிலீஸாகிவிடப் போகிறது.

அட விடப்பா, இது ஒரு டெம்பரரி ஸெட் பேக் தானே! இன்னும் ரெண்டே ரெண்டு அல்லது மூணேமூணு மாசந்தானே. அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு கதாசிரியன், கவிஞன், அப்புறம் சில மாதங்களில் ஒரு டைரக்டர். தமிழ்நாடே உன்னைப் பேசப்போகிறது.

வெகு விரைவில், இங்கே உட்கார்ந்திருக்கிற எல்லாருக்கும் சமமாய், அல்லது இவர்களைவிட உயரமாய்ப் பொருளாதாரத்தில் நீ விஸ்வரூபமெடுக்கப் போகிறாய். நெஞ்சை நிமிர்த்து, வாலட்டை வெளியே எடு.

எடுத்தேன்.

பொருளாளர் என் ஆசனத்தை சமீபித்தார்.

“ஹலோ சார்” என்றார். “குட் ஈவ்னிங் மேடம்” என்றார்.

“மொதல் ஆளா வந்துட்டீங்க போலயிருக்கு! ப்ரைஸ் ஒண்ணு ஒங்களுக்கு இருக்கு. ப்ரஸிடென்ட் மறந்தாலும் மறந்துருவார், டின்னருக்கு முந்தியே நீங்க ஞாபகப்படுத்தி வாங்கிக்கிருங்க” என்று என் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு என்னைக் கடந்து போனார், அடுத்த ஸீட்டுக்கு.

“ராஜேந்தர், நீங்க் தவ்ஸண்ட் ருப்பீஸ் தரணும் ஆர்ஃபனேஜ் ப்ராஜக்ட்க்கு. காஷ் தர்றீங்களா, செக்கா?” என்றார், அடுத்த ஸீட் காரரிடம்.

“என்ன சார் இது, அவர விட்டுட்டீங்க, என்ட்ட வந்து கேக்கறீங்க!” என்ற ராஜேந்தரிடம் பொருளாளர் சொன்னது சுற்று வட்டாரத்தில் துல்லியமாய்க் கேட்டது.

“அவரேப் பாவம் கஷ்டப்பட்டுட்டிருக்கார், அவர்ட்ட கேக்க வேண்டாம், விட்டுருவோம்னு ப்ரஸிடென்ட் சொல்லிட்டார் ராஜேந்தர். ரொம்ப ப்ரஷர் குடுத்தா க்ளப்ப விட்டு ஓடிப் போனாலும் போயிருவார்.” சுற்றிலும் சில முகங்கள் சிக்கனமாய் சிரித்தன.

என்னுடைய முகத்தில் சில வினாடிகளுக்கு முன்பு கருக்கொண்டிருந்த புன்னகை இப்போது செத்துக் கொண்டிருந்தது. வாலட் கனத்துக் கிடப்பதாய்ப் பட்டது, என் இதயத்தைப் போல. பான்ட் பாக்கெட்டிலிருந்து வாலட்டை உருவப் பணிக்கப் பட்டிருந்த கை, அதை உள்ளே தள்ளி அழுத்தியது.

என்னுடைய அந்தக் கையின்மேலே இன்னொரு கை படர்ந்து அழுத்தியதை உணர்ந்தேன்.

இவள்.

அந்தப் பக்கம் பார்வையைத் திருப்ப எனக்கு த்ராணியில்லை. மீட்டிங் முடிந்தது.பெண்கள் ஸூப்பின் பக்கமும், ஆண்கள் கோப்பைகளின் பக்கமும் நகர்ந்தார்கள்.

“போகலாமா” என்றேன், அவள் பக்கம் திரும்பாமலேயே.

“ம்” என்று சம்மதம் தந்தாள், என் புஜத்தைப் பற்றியபடி.

ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, என்னை மிக நெருங்கி உட்கார்ந்தாள். என் தலைமுடியைச் சிலுப்பி விட்டாள்.

பிறகு என்னைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு கன்னத்தோடு கன்னம் இழைய, “ச்சியர் அப் ஐ ஸே” என்று தேற்றினாள். என் கன்னத்தில் படர்ந்து பிசுபிசுத்தது அவளுடைய கண்களின் ஈரம்.

(கல்கி, 31.12.2006)

About The Author