நீங்கள் உணர்வதெல்லாம் உண்மையாகிவிடுமா?

மூலம் : கேரன் ரைட்

நாம் நினைப்பதுதான் அப்பட்டமான நிஜம் என்று நம்புவது நமது தினசரி வாழ்க்கையில் இயல்புதான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த முரண் பற்றி, நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்திற்கும், நிஜத்திற்கும் உள்ள இடைவெளி பற்றி சிந்திக்கிறோம்?

பழக்கத்திற்கு அடிமைகளான நாம், சட்டென்று நமது இயல்பை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் நிஜம் வேறு; நாம் நினைப்பது வேறு என்று அறியும்போது கிடைக்கிற மன நிம்மதி அலாதியானது.

உதாரணமாக, உங்களுக்குப் பிடிக்காத ஒரு சாப்பாட்டுப் பொருளைப் பற்றி உங்களைப் பேசச் சொன்னால், சட்டென்று உங்கள் உதட்டில் வருவது நிச்சயம் இனிமையான வார்த்தைகளாய் இருக்காது. “அய்யோ! அந்தப் பாகற்காய் கறி எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்” என்றோ, “சே! மனுஷன் திம்பானா அதை. உவ்வே” என்றோதான் சொல்வீர்கள்.

இரண்டு கைகளிலும் பை நிறையப் பொருட்களைச் சுமந்து கொண்டு அவசரமாக சாலையைக் கடக்கும் போது திடீரென்று மழை வருகிறது. “சே! சனியன் பிடித்த மழை நேரம் கெட்ட நேரத்தில் வந்து பெய்கிறது” என்று சலித்துக் கொள்வீர்களா அல்லது “தட்ப வெப்பச் சமன்பாட்டை நிலை நிறுத்த இந்த மழை அவசியம்” என்று வரவேற்பீர்களா? நிச்சயம் முதலில் சொன்ன மாதிரிதான் சொல்வீர்கள். ஏனென்றால் அது உங்கள் அபிப்பிராயம் மட்டுமே. உண்மை வேறு விதமானது!

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பச்சைச் சட்டை போட்டுக் கொண்டு போகும்போது, “இவனும் இவன் டேஸ்டும்!!” என்று முனகியிருப்பீர்கள். அந்த நிறம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பது உங்கள் கருத்து. அதற்காக அந்த நிறச் சட்டைகளே கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நமது அன்றாட வாழ்க்கையில் இது போல் எத்தனை விஷயங்களில் நமது விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலிக்கிறோம்?!

மழை, வெயில், குளிர், காபி, சினிமா, இசை, மனைவியின் சமையல், வாட்ச், கண்ணாடி என்று முடிவில்லாத பட்டியல் அது. நாம் உணர்வதுதான் உண்மை என்று அடம் பிடிக்காமல் ‘அவை எனது கருத்துக்கள்’ என்று சொந்தம் கொண்டாடும் போது, மற்றவர்கள் உங்களை மதிக்கத் துவங்குவர். உங்கள் வார்த்தைகளுக்குப் புதிய மரியாதை கிடைக்கும். நீங்கள் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கத் துவங்குவீர்கள். யாரையும் எதற்கும் வெறுக்கத் தோன்றாது.

இந்த வினாடி முதல் இதை முயன்று பாருங்கள். எதிரிகளைக் கூட நண்பர்களாக்கிக் கொள்ள முடியும்.

About The Author

3 Comments

  1. m. srinivasan

    I was amazed to note for the first time that such an e-magazine exists. All kudos to the author and efforts

  2. suganthe

    உண்மைதான் ஆனால் கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருத்துள்ளவர்களாக படைக்கவில்லையே

  3. Rishi

    ஸ்ரீனிவாசன்,
    வருகைக்கு நன்றி. மற்ற இதழ்களிலிருந்து/தளங்களிலிருந்து எப்படி நிலாச்சாரல் வேறுபடுகிறது… உங்களால் விரும்பப்படுவதாக இருக்கிறது.. என்பதை விளக்கி சொன்னால் நம்ம டீம் மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பூஸ்ட்டிங் கொடுக்கறதா இருக்கும்.

Comments are closed.