பாபா பதில்கள்-விளை நிலத்தை வீணாக்கலாமா?

விளை நிலத்தை வீணாக்கலாமா?

மழை பெய்கிறது. அது எல்லா இடத்திலும் ஒரு போலத்தான் பெய்யும். ”இது சாக்கடை நான் பெய்ய மாட்டேன். இது வயல், இதில் அதிகமாகப் பெய்வேன். இது கல்பாறை வேஸ்ட் ஆகிவிடும்’ என்றெல்லாம் கணக்குப் பார்ப்பதில்லை. அந்த மாதிரி கடவுளைப் பொறுத்தமாத்திரம் அவனுடைய அன்பும், அருளும் இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை ஜீவராசிகளுக்கும் ஒரு போலவே கொடுக்கப்படுகின்றன.

அது எந்த மாதிரி நிலத்தில் போய் விழுகிறதோ அதை வைத்துத்தான் பலன் பெறுகிறது. நல்ல விளைநிலத்தில் விழுந்தால் பயிர் பச்சைப்பசேல்னு வரப்போகிறது சாக்கடைக்குப் போனால் வேஸ்ட் ஆகிவிடும்.

அப்போது நீ நல்ல விளைநிலமாக இருக்கப்போகிறாயா? அல்லது சாக்கடையா இருக்கப்போகிறாயா என்பதுதான் கேள்வி. கடவுளைப் பற்றி ஒரு கவலையும் இல்லை. அவன் எல்லோருக்கும் நல்லதுதான் செய்து கொண்டிருக்கிறான். அதை வைத்து நீ உருப்படப்போகிறாயா, அதை வீணாக்கப்போகிறாயா, என்பதை நீ உன்னையே கேட்டுக்கொள். இதுதான் ஆன்மீகம். இதைத் தெரிந்து கொண்டால் கடவுளுடைய மகத்துவம் புரிந்துவிடும்.

நாணி நிற்கிறேன்

தேவாரத்தில், நக்கு நிற்பேன் அவர் தமை நாணியே என்ற வரி வரும். ‘நகுதல்: அவங்க செயலைப் பார்த்து நான் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

எவருடைய செயலைப்பார்த்து நாணி நிற்கிறார்? இந்த உலகத்தில் இருக்கிற மானுடர்களைப் பார்த்து. எந்த மாதிரியான மனிதர்கள்? இவ்வளவு தங்களுக்கு செய்திருக்கக்கூடிய இறைவனை நன்றியோடு நினைத்துப் பார்க்க மறுக்கிற மனிதர்களைப் பார்த்து.

‘கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை கண்ணால் பார்க்கிறார்கள். சந்திரன் வருகிறான்; சூரியன் வருகிறான்; நட்சத்திரம் இருக்கிறது; செடி, கொடிகள் இருக்கின்றன; விலங்குகள் இருக்கின்றன; எல்லாவற்றையும் இயக்குகிற ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும். கண்ணையும், காதையும், மூக்கையும், வாயையும், இருப்பதற்கு இடத்தையும் கொடுத்த பெரிய ஆற்றல், பரம்பொருள் இருக்கவேண்டும். அப்படி ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய செயலைப் பார்த்து நான் நாணுகிறேன்’ என்று சொல்கிறார்.

About The Author