புளியோதரை

தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப் ,
புளி- ஆரஞ்சுப்பழ அளவு,
சிகப்பு மிளகாய் -ஆறு,
பச்சை மிளகாய் – நான்கு ,
உளுத்தம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி(ஊற வைத்தது),
நல்லெண்ணெய் – அரை கப் ,
கல் உப்பு – ஒரு மேசைக்கரண்டி,
கடுகு – ஒரு தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
வெல்லம் – சிறிதளவு.

பொடிக்க:
பெருங்காயம் – ஒரு துண்டு,
தனியா – ஒரு மேசைக்கரண்டி,
வெந்தியம் – அரை தேக்கரண்டி,
மிளகாய் வற்றல் – இரண்டு,
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
சிறிது நல்லெண்ணெய்.
எள் – இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:
        சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த கடலைப்பருப்பும், உளுத்தம்பருப்பும் சேர்த்து சற்று சிவந்ததும், கடுகு, சிகப்பு மிளகாய் சேர்த்து வறுத்த பின்னால், கீறிய பச்சை மிளகாய்களை சேர்த்து சற்று நேரம் கிளறி, புளியை நன்றாகக் கரைத்து ஊற்றவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்து இறுகி வந்ததும் கழுவி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கிளறி விட்டு, சுவைக்கு வெல்லம் சேர்த்து எடுத்து வைக்கவும்.
       வாணலியை சூடாக்கி எள்ளை சற்று நீர் தெளித்து பொன்னிறமாக வறுத்து வைக்கவும். எள்ளைத் தனியாகவும், எண்ணெய் விட்டு வறுத்த பெருங்காயம், தனியா, மிளகாய் வற்றல், வெந்தியம், உளுத்தம்பருப்பைத் தனியாகவும் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஆற வைத்த சாதத்தில் தேவையான அளவு, புளியோதரை விழுதையும், பொடித்து வைத்திருக்கும் பொடியையும், எள்ளுப்பொடியையும் நல்லெண்ணெயையும் சேர்த்து கலக்கவும்.
       இதோ! அனைத்து வயதினரும் விரும்பும் சுவையான புளியோதரை தயார்!!!.

About The Author