பெண் தேடும் படலம்

இரண்டு வருடங்களாகத் தேடியும், அவன் மனதிற்குப் பிடித்த மாதிரி பெண் அமையாததில் வெறுப்புற்றிருந்தான் குமார். அதற்கு முக்கிய காரணகர்த்தா, அவன் அப்பாவின் நம்பிக்கைக்குரிய குடும்ப சோதிடர்.

‘ஜாதகப் பொருத்தமில்லை’ என்று காரணம் சொல்லியே பெரும்பாலான பெண் ஜாதகங்களைத் தள்ளுபடி செய்வதில் குறியாக இருந்தார் அவர்.

ஒரு காலத்தில் நல்ல வருமானம் ஈட்டித் தந்த அவரது தொழில், தற்காலத்தில் பெருகி வரும் காதல் திருமணங்களால் சுத்தமாகப் படுத்துவிட்டது. மேலும் கணிணியில் ‘சாப்ட்வேர்’ போட்டு ஜாதகம் கணிக்கும்(!) இக்காலத்தில், தம்மிடம் வரும் ஒன்றிரண்டு நபர்களின் திருமணம் விரைவில் முடிந்து விடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்தார்.

"7க்குடைய புதன் ராகுவுடன் சம்பந்தப்பட்டு, 2ம் இடத்தில் இருப்பதால் களத்திர தோஷம் உள்ளது. 4ல் செவ்வாய் அமர்ந்து தோஷம் அடைந்துள்ளது" என்று ஏதேதோ சொல்லி குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்.

"மாமா, இந்தச் செவ்வாய், புதன் எல்லாம் அவங்களுக்குப் புடிச்ச இடத்துல சஞ்சரிச்சிட்டுப் போகட்டும். அவங்களைத் தொந்தரவு பண்ணாதீங்க. எனக்குக் கொஞ்சம் கருணை காட்டுங்க" என்று அவ்வப்போது அப்பாவிற்குத் தெரியாமல் தனியே சந்தித்து குமார் அளித்த ‘சன்மான’த்தினால், போனால் போகிறது என்று பெரிய மனது பண்ணி, ஜாதகங்கள் ஒன்றிரண்டு பொருந்துவதாக எடுத்துக் கொடுப்பார்.

அறிவுமதி என்ற பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தபோது, தனது கற்பனை கதாநாயகி கிடைத்துவிட்டாள் என்று அகமகிழ்ந்தான் குமார். பெயருக்கேற்றாற்போல் அறிவும் அழகும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவளாகவே அவள் இருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது. பெண் பார்க்கப் போன இடத்தில், காரில் துவங்கி கைக்கடிகாரம் வரை, அவன் அம்மா கேட்ட வரதட்சிணைப் பட்டியலைக் கேட்டு மலைத்துப் போன அப்பெண், " கார் கேட்டீங்க சரி. உங்க மகனுக்குச் சொந்தமா ஒரு கைக்கடிகாரம் வாங்கிக்கக் கூடவா துப்பில்லை?" என்று கேட்டு விட்டாள். முகத்தில் காறித் துப்பாத குறைதான்!.

‘நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டு விட்டாளே!’, என்று புலம்பியவன், "அம்மா, இனிமே வரதட்சிணை அது இதுன்னு கேட்டு நீங்க வாயே திறக்கக்கூடாது" என்று உத்தரவு போட்டுவிட்டான். இப்போதெல்லாம் அம்மா, பெண் வீட்டில் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறப்பதோடு சரி.

அதற்குப் பிறகு வந்த ஏழெட்டு வரன்களும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மாலதி என்ற பெண்ணைப் பார்த்தபோது ஓரளவுக்குத் திருப்தியேற்பட்டது. இந்த வரன் முடிந்து விடும் என்ற நம்பிக்கையேற்பட்ட நிலையில், அவன் அப்பா சும்மாயில்லாமல், "உங்கப் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?" என்று வழக்கமாகத் தான் கேட்கும் கேள்வியைக் கேட்டுவிட்டார்.
அதைக் கேட்டதும், அவள் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

"எங்கப் பொண்ணை வைச்சுக் கூத்துப் பட்டறையா நடத்தப் போறீங்க? அவளுக்கு எது முக்கியமாத் தெரியணுமோ, அதை நான் கத்துக் கொடுத்திட்டேன்" என்றார், அவன் அம்மாவைப் பார்த்து முறைத்தபடி.

வாயைத் திறந்து அவரை ஏதோ கேட்க நினைத்தாள் அம்மா. ஆனால் ‘அசோகா’ என்ற பெயரில், கோதுமை மாவில் அவர்கள் செய்து வைத்திருந்த இனிப்பு, பிசினி போல் மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, வாயைத் திறக்க முடியாமல் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.

மனைவியின் அவஸ்தையைப் புரிந்து கொண்ட அவன் தந்தை, அவளுக்கு உதவும் விதத்தில், அவள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டார்.

"என்னது? சமையல் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?"

"சமையலா? அதை விட இந்தக் காலத்துப் பொண்ணுங்க, தங்களைக் காப்பாத்திக்க கராத்தே கத்துக்கிறது ரொம்ப அவசியம். அதனால எம் பொண்ணுக்கு கராத்தே கத்துக் கொடுத்திட்டேன். என்ன நான் சொல்றது?"

"சரிதான், சரிதான்" என்று தலையாட்டினாள் அம்மா.

" கராத்தேல, எம் பொண்ணு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கா" என்றார் பெருமிதத்துடன்.

அவ்வளவுதான். "போய்த் தகவல் அனுப்புகிறோம்" என்று சொல்லி வந்துவிட்டார்கள் . இப்போது அப்பெண் இருந்த திசையில் குமார் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, கண்மணி என்ற பெண்ணின் புகைப்படம் அவனுக்குப் பிடித்திருந்தது. பெண் நல்ல கலராகவும் முகக்களையாயும் இருப்பது போல் தோன்றியது. பெண் பார்க்கப் போனபோது, மின்னல் வேகத்தில் வெளியே வந்து போன அவளைச் சரியாகப் பார்க்கவிடாமல், அவனது வேலை, சம்பளம் முதலிய விவரங்களைக் கேட்டுத் தொண தொணத்துக் கொண்டிருந்தான் அவளின் சகோதரன்.

அவள் தந்தையிடம் அனுமதி பெற்று, தனியே அவளைச் சந்தித்த போது அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. அவன் எதிர்பார்த்தது போல் அல்லாமல், நிறம் ரொம்பக் கம்மியாயும், புகைப்படத்தில் இருந்ததை விட அதிக குண்டாகவும் இருந்தாள்.

“போகஸ் லைட் வைச்சு போட்டோ எடுத்து அனுப்பிட்டாரா உங்கப்பா? போட்டோவிலே ரொம்பக் கலராயிருந்தது மாதிரி தெரிஞ்சுச்சு" என்றான் கிண்டலாக.

"ஐஸ்வர்யாராய் மாதிரி பொண்ணு தேடறீங்க போலேயிருக்கு. அதுக்கு நீங்க அபிஷேக் பச்சனாயிருக்கணும். மண்டையில நாலே நாலு முடியோட, ஓமக்குச்சி மாதிரி இருந்துக்கிட்டு, ஐஸ்வர்யா ரேஞ்சுக்குப் பொண்ணு தேடறது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?" என்றாள் அவள் பதிலுக்கு.

நம் கதாநாயகனின் முகம் எப்படியிருந்தது என்பதை நிலாச்சாரல் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

About The Author

6 Comments

  1. suganthe

    உலகத்த நல்லா புரிய வைத்திருக்கிறீங்க.ஓமக்குச்சி மாதிரி இருந்துக்கிட்டு, ஐஸ்வர்யா ரேஞ்சுக்குப் பொண்ணு தேடறது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல? இப்படிதான் பலர் இருக்கிரார்கள். fuji film ல் photo எடுத்தால் நல்ல கலராக இருக்கும்.”

  2. geetha

    கதாநாயகனின் முகத்தை விடவும் கண்மணி, குமார் இருவரையும் தம்பதியராய் நிறுத்திப்பார்த்து செய்த கற்பனை மிகவும் நன்றாகவே இருந்தது. பல இடங்களில் இப்படிதான் நடக்கிறது. அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்று!

  3. R.V. Raji

    கற்பனைத் தொகுப்பு நல்லாயிருக்கு கலா!
    ‘கார் கேட்டீங்க சரி. உங்க மகனுக்குச் சொந்தமா ஒரு கைக்கடிகாரம் வாங்கிக்கக் கூடவா துப்பில்லை? இந்த கேள்வி சாட்டையில அடிச்ச மாதிரி இருந்திருக்கும். ஆரம்பத்திலேயே தன் அம்மாவை திருத்தியிருந்தால் இந்த அவமானம் குமாருக்கு நிகழ்ந்திருக்குமா? இப்படிதான்
    நிறைய பேர் வரதட்சணைங்கிற பேர்ல பெண்ணோட வீட்டில இருக்கிற
    எல்லாத்தயும் அபகரிச்சிடறாங்க…இப்பேர்பட்ட ஆளுங்களையெல்லாம் கண்மணி செஞ்ச மாதிரிதான் செய்யணும்.
    முழுவதையும் படிச்சிட்டேன். நல்லா எழுதியிருக்கீங்க கலா! நன்றி!.. வாழ்த்துக்கள்..”

  4. S.Gnanasambandan

    நகைச்சுவையாய் எழுதுவது கஷ்டம். உங்களுக்கு கைவந்திருக்கிரது. மேலும் எழுதுஙகள். பெண் தேடிய அனுபவம் நிறைய உண்டோ?
    சொ. ஞானசம்பந்தன்

  5. V.Ramprakaash

    அருமயாக இருந்தது. ஒக்காந்து யொசிப்பேன்ன்கலொ

Comments are closed.