மனக்குப்பை

ஆண்களின் கண்களை அவள் அறிவாள். சட்டென்ற முதல் எதிர்ப்பார்வையில் அவை சற்றே திகைக்கின்றன. ஒரு மாட்டிக்கொண்ட திகைப்பு அது. ரகசியம் வெளிப்பட்டு விட்டாப்போல… ஏன் அப்படி அவர்கள் தடுமாற வேண்டும்!

அலுவலகத்தில், சற்றே வேலைமும்முரத்தில் அவள் கவனமாய் இருந்தால், திடீரென்று முதுகுப்புறமோ தோள் பக்கமோ சிறு குறுகுறுப்பு. யாரோ நம்மைக் கூர்ந்து கவனிக்கிறாப்போல. சட்டென்று நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. வேலை கவனம் சிதறிப்போகிறது. பக்கத்து நாற்காலி சிவராமன்? இல்லை. ஒருவேளை சுதாரித்து அவன் பைலுக்குள் முகத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கலாம்.

ஆ – நாலுமேஜை தூரத்தில், கண்ணபிரான். தூரம் வெட்கம் அறியாது போலும்! வேலை ரெண்டாம்பட்சம் அவருக்கு. வெற்றிலை பாக்கு எப்பவும் வாயில் அதக்கிக்கொள்ள வேண்டும். மூன்று பெண் குழந்தைகள். ஆண்குழந்தை இல்லை என்கிற வருத்தம் உள்ளவர். ஆண்குழந்தை பெற்றுத்தரவும் தேவை ஒரு பெண்! பெரியவர்கள் ஆனபின்னால் பெண்களைத் துரத்திப்போகும் ஆண்பிள்ளைகள்! வயசு எத்தனை ஆனாலும் இவரைப்போல நிறைய ஆண்கள் சற்று தத்தளிப்பான வாழ்க்கையே வாழ்கிறார்கள். அதற்கு இளமையாய் இருக்கிறதாய் ஒரு சமாதானம், பிரமை வேறு.

மேலும் கவனம் சிதறவிடாமல் வேலையில் ஈடுபட முனைந்தாள். இன்னும் ஒரு பைல் இந்த விவரங்களை சரிபார்க்க அவளுக்குத் தேவைப்பட்டது. சற்று எழுந்து அவள் பீரோமேல் துழாவி தேடியெடுக்க வெண்டும். அவள் மெளனமாய் இருந்தாலே பார்வைகள் தூரதூரங்களில் இருந்து அவளைத் துழாவுகின்றன. பெரிய ஜவுளிக்கடைகளில் ரகசியகேமரா பொருத்தியிருப்பார்களாம், அவைபோல… ஈக்களாய் அவள்மேல் வந்தமரும் பார்வைகள். ஒரு பெண் தன் இயல்புடன் இருக்க இங்கே வாய்ப்பதேயில்லை. ஒரு பெண்ணின் தனிமையைக் கரைக்கவும், அவளது அந்தரங்கங்களை அறியவும், அதில் பங்கெடுத்துக் கொள்ளவும் எல்லா ஆண்களுக்கும் உந்துதல் இருக்கிறது. இதில் வயது வித்தியாசம் இல்லை!

சற்று நாற்காலியைப் பின்னகர்த்தி, எவ்வளவு குறைவான சத்தம் வந்தாலும், அது அந்த மொத்த அறையையே, அவளைத்தவிர அங்கே ஆறுபேர் – ஆறு ஆண்கள், ஆறு நாற்காலிகள்… சலனப்படுத்தி விடுகிறது. அவள் உள்ளேவர எதிர்கொண்டாடும் பார்வைகள், அவள் எழுந்துபோக பின்தொடர்கின்றன. பீரோவை மெலிதான தப்படிகள் வைத்து எட்டி, உயரத்தில் அடுக்கப்பட்டிருந்தன பைல்கள், அவளுக்குத் தேவையானதை உருவியெடுக்க… முடியுமா?… அவள் புடவையில் வந்திருந்தாள். புடவை அவளுக்குப் பிடித்த உடை. கையை உயரே தூ… சட்டெனத் திரும்பி அறையைப் பார்த்தாள். பன்னிரெண்டு கண்கள். சட்டென்று வெட்கத்தில் தலைகவிழும் முகங்கள்!

ஓரத்தில் தனிநாற்காலி போட்டுத் தனியே உட்கார்ந்திருக்கும் ராமநாதன், பியூன் சமாளித்து "நான் வேணா எடுத்துத் தரட்டுமா மேடம்?" என்கிறான். அவன் வந்து கையைத் தூக்கியிருந்தால் யாரும் வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அவன் சட்டை அக்குள்பக்கம் கிழிசல்! மிஸ்செலேனியஸ் பைலுடன் இருக்கைக்குக் திரும்பினாள்.

ஒருவேளை அந்த அறையில் ஒற்றைப்பெண்ணாய்த் தான்மட்டும் என இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் இயல்பாக இருப்பார்களோ, தெரியவில்லை. நான் பம்பரம் என இவர்கள் மத்தியில் சுழல்கிறேனா என்ன…

தனிப்பெண்ணாய் இங்கே வளையவருவதில் சில அசாதாரணங்கள். சாதாரணங்களே அசாதாரணங்களாய் உருப்பெருகி கவனஈர்ப்பு தருகின்றன. யார் ஒருத்தருடனும் தனியே சிரித்துப் பேசவோ, எழுந்து ஒண்ணாய்க் காபி சாப்பிடப் போகவோ முடியாதிருந்தது. நிகழ்ச்சிகளுக்கு றெக்கை முளைத்து மழையீசல் போலும் கிளம்பித் திரிகின்றன அலுவலக வளாகத்தில். யாருமே ஏற்பாடு செய்யாவிட்டாலும், சுயம்வரங்கள் அலுவலகங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன!

பெண் என்பவள் ஆணின் டார்கெட் அல்லது கவனவியூகம் என்கிற பாவனை மாறுமா என்றிருந்தது. பேசாத பெண்மை, பேசாததாலேயே யூகங்களைக் கிளர்த்தி விடுகின்றது போலும்!

பதினோறு மணி சுமாருக்கு ஆண்களாய் இருந்தால், காபி சாப்பிட என்று எழுந்து இருவராகவோ கூட்டமாகவோ வெளியே போய் வந்தார்கள். மேஜையடியில் சிறைப்பட்ட கால்களைத் தளர்த்தி சிறு விடுதலை அளித்தார்கள். காபி அல்லது டீ, அலுவலக எதிர்க்கடையில் அப்போது சிறு புகைமண்டலம் கிளம்புகிறது. ஆண்களின் உலகம். ஒரு பெண்ணால் இங்கே புகைபிடிக்க முடியுமா? அதுவும் பொது இடத்தில் இப்படி நின்று…

மேஜையருகே தொலைபேசி. அவளது அழைப்பின் பேரில் காபி வந்தது தனியாக.

எந்த ஆணையும் நேர்ப்பார்வையில் ஒரு புன்னகையோடு அவள் அணுகினாள். யாரையும் திரு சேர்த்துப் பேர்சொல்லி அழைப்பதில் ஒரு நேர்மையான வெளிப்பாடு இருக்கிறதாய் உணர்ந்தாள். சற்று ஆங்கிலக் கலப்பும் சிலாக்கியமானது. இந்த பாவனைகள் எல்லாம் வேண்டித்தானே இருக்கிறது. அல்லாமல் சாதாரண உரையாடல்களே பூதக்கண்ணாடி கொண்டு அலசப்படுகின்றன இங்கே, ஜோசியன் எதிர்காலம் தேடுவதுபோல! பஸ்சில் உட்காரச் சொன்னாலே உள்சிறகு விரிய புல்லரிப்புடன் வானில் பறக்கத் துவங்கும் மனசு. ஆண்மனசு!

ஒருவேளை ஆணையும் பெண்ணையும் தனித்தனி அலகுகளால் அணுகி, நாம் வளர்ப்பதே இதற்கு தூபம் போட்டிருக்கலாம். பெண்ணை ஆண்களில் இருந்து பிரித்து பொத்திப் பொத்தி, பாதுகாப்பு பாவனை கொண்டாடும் குடும்பத்தார்… பெண்போலிசை ஒருபாட்டி போலிஸ்ஸ்டேஷனுக்குப் போய்த் விட்டுவிட்டு திரும்ப வீட்டுக்குக் கூட்டிவந்ததாக ஒரு கதை உண்டு!

பெண்ணுக்கான தனி உலகம் இல்லவே இல்லையா? இருக்க முடியாதா? கூடாதா?

இந்த ‘வெயிட்டிங்லிஸ்ட்’ பாவனை இல்லாத ஆண் உண்டா!
அழகாக இல்லாததால்
அவள் தங்கையானாள் – கவிதை வாசித்திருக்கிறாள்.

தன்னை ஆணுக்குச் சமமாக வளர்த்த அப்பாவை நினைத்துக் கொள்கிறாள். குறிப்பாக பின்-பதின் வயதுகளில் பெற்றோர்கள் பெண்களை வெளியே அனுப்ப கவலை கொண்டாடினார்கள். "இனி நான் எதுக்கும்மா உனக்கே விவரந் தெரிஞ்சாச்சி…" என்ற அப்பா. அறிவுரை வழங்குகிற அப்பா அல்லர் அவர். எச்சரிக்கையும் பயமுறுத்தலுமான அப்பா அல்லர். அவள் பேச, புன்னகையுடன் கேட்டுக்கொள்கிற அப்பா…

என் உலகைவிட உன்னது பெரியது, பரந்தது. பெண்ணே, எனக்கு அடுத்த தலைமுறைப் பெண்ணே… நல்வாழ்த்துக்கள்!
அவளுக்கு வேலை கிடைத்தபோது எவ்வளவு சந்தோஷப்பட்டார். "டூ வீலர் எதும் வாங்கிக்கயேம்மா?"

"வேணாம்ப்பா. வீட்டு வாசல்ல பஸ் – ஷேர்ஆட்டோ… ஆபிஸ் வாசல்ல இறங்கிக்கலாம்."

என்றாலும் அப்பா வேட்டிசட்டை என்று உடைகளில் பிரியங் காட்டியதுதான் ஆச்சர்யம். ஹோண்டா ஆக்டிவா வைத்திருக்கிறார். தூயவெள்ளை பாலியெஸ்டர் வேட்டி. கண்ணில் ரிம்லெஸ், காதோர சிறுநரை நாணல்கள். கைகளிலும் நெஞ்சிலும் கேசப்புல்வெளி. எப்போதும் எதாவது புத்தகம் வாசிக்கிற அப்பா. இதுதான் என்று கிடையாது – கதை முதல் சுயவரலாறு… புக்கர் வாஷிங்டனை அறிமுகப் படுத்தி வைத்தார், எத்தனை அருமையான வரலாறு… இராத்திரி அறையில் விளக்கெரிந்து கொண்டிருக்கும். எல்லாம் தூங்கியபின் தனிமையில் அந்த அமைதிமுங்கலில் மனசில் திளைத்து நீச்சலடிக்கிறார் அப்பா. சில சமயம் விளக்கணைந்திருந்தாலும் காதில் ஒலியன்களைப் பொருத்திக்கொண்டு, நல்ல சங்கீதத்தை உள்ளே இறைத்துக் கொண்டிருப்பார். எப்போது தூங்குவார் தெரியாது. காலையில் அவள் கண்விழிக்க அவர் அவருக்கு முன்னே பரபரப்பாகியிருப்பார்!

சுத்தமும் ஒழுங்குகளும் அவர் ரத்தத்தில் இருந்தாப்போல…

அப்பா, உன்னால் எனக்குப் பிற ஆண்களைப் புரிந்தது.

என்னை விடு. அந்த மூன்று பெண்களின் அப்பா, கண்ணபிரான்… அந்தப் பெண்களை எத்தனை மரியாதையுடன் பேணுவாரோ தெரியவில்லை. இம்மாதிரி குடும்பங்களில் பிறக்கும் ஆண், சகல வழிகளிலும் கெட்டுப்போகும்படி அநியாயச் செல்லத்துடன் வளர்க்கப் படுவதைப் பார்த்திருக்கிறாள்.

இன்னிக்கென்னவோ மனசு உலகத்தைப் புரட்டிப் போடுகிற புரட்சிபிரமையுடன் இயங்குகிறதா தெரியவில்லை!

இங்கே கண்ணகியின் அறச்சீற்றம் கூட கணவனுக்காகத்தான். மாதவியுடன் மனைவியைப் பிரிந்த கணவன்!

மேனேஜரின் தனி அறை ஜன்னல் கதவு சாத்திக் கிடந்தது. அவள் புன்னகை செய்து கொண்டாள்.

எப்போதும் திரு காமேஸ்வர் தாஸ் பத்து மணிக்குத் தவறாமல் அலுவலகம் வந்து விடுகிறார். அடர்வண்ண முழுக்கைச் சட்டை, டிசைன் இல்லாத பிளெய்ன் சட்டை. கட்டாயம் டை கட்டியிருப்பார். அலட்சியமாய் வாயோரம் ஒதுங்கிப் புகையும் சிகரெட்… படகும் துடுப்பும்போல! பாந்தமாய் அது அவரது அதிகாரப் பிரகடனம் செய்தாப் போலிருந்தது. அப்படித்தான் அவர் நம்பினார். மேனேஜர் என்கிற அடையாளம் த்வனிக்கிற கைப்பெட்டி, லாப்டாப். அந்தக் காலத்தில் பெரியவர்கள் வெள்ளி வெற்றிலைச் செல்லத்துடன் அலைந்தார்கள்!

திடீரென்றுபோல காமேஸ்வர் தாசின் நடவடிக்கைகளில் சிறு சலனங்களை அவள் கண்டறிந்தாள்.

ஆண்களின் பார்வையெல்லைகளை அவள் அறிந்தவள்தான். அந்த எல்லையில் நின்று எதிர்ப்பார்வை பார்க்க முடிந்தவள்தான். நாட்டுக்கும் நாட்டுக்குமான எல்லைச் சண்டை போல! ஒரு வழிப்பாதை இது. நுழையற்க.

(தொடரும்)

About The Author