மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 250 கிராம்
மஷ்ரூம் – 200 கிராம்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
சோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
நெய், கொத்துமல்லித்தழை (நறுக்கியது) – தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்துக் குக்கரில் வையுங்கள். இரண்டு விசில் வர விட்டு இறக்குங்கள்.

மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இளம் சூடான தண்ணீரில் உப்புப் போட்டு, நறுக்கிய மஷ்ரூமை அதில் ஊற விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்துத் தண்ணீரை வடித்து மஷ்ரூமை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். கூடவே சாதத்தையும் போட்டு வதக்க வேண்டும். அத்துடன் சோயாசாஸ், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேருங்கள். பின் அடுப்பை அணைத்து விடலாம்.

அடுத்து, நெய்யில் மஷ்ரூமை வதக்கி சாதத்துடன் கலக்க வேண்டும். இப்பொழுது கொத்துமல்லியைத் தூவி இறக்க வேண்டியதுதான். சுவையான ‘மஷ்ரூம் பிரியாணி’ தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author