முல்லாவும் இளைஞனும்

முல்லா ஒரு நாள் தன் உறவினரைப் பார்ப்பதற்காக வெகுதூரம் செல்ல வேண்டி இருந்தது. வெயில் அதிகமாக இருந்ததால், முல்லா ஒரு பெரிய மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

நமது நாட்டில் ஆலமரம் இருப்பது போலத் துருக்கி நாட்டில் மல்பெரி என்கிற ஒரு மரம் உண்டு. நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும்.

அப்போது வழிப்போக்கனான ஒரு இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெயிலில் அவனும் முல்லாவைப் போல நடந்து வந்திருக்க வேண்டும். நிழலைக் கண்டதும் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். தன் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, மரத்தின் வேர் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.

அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு, அண்ணாந்து மரத்தைப் பார்த்தான். மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.

அவன் உரக்கச் சிரித்தான்.

முல்லா அவனைத் திரும்பிப் பார்த்து, "என்ன சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்துச் சிரிக்கிறேன்" என்றான் அந்த இளைஞன்.

முல்லா அவனைக் கூர்ந்து நோக்கியவாறு, "கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார்? புரியவில்லையே!" என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், "இந்த மரத்தைப் பாருங்கள்! ஒரு பெரிய கூடாரத்தைப் போல எவ்வளவு பரந்து விரிந்து இருக்கின்றது? ஆனால், இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள்! எவ்வளவு சிறியனவாக உள்ளன! இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூடத் தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது?" என்றான்.

முல்லா பதில் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

சற்று நேரம் கழித்து, காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்து, சின்னஞ்சிறு பழங்கள் பொலபொலவென அவர்கள் மேல் கொட்டின.

இப்பொழுது முல்லா சிரித்தார்.

"இப்பொழுது நீங்கள் எதற்குச் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டான் இளைஞன்.

"ஒன்றுமில்லை; கடவுள் முட்டாளாக இல்லாமல் புத்திசாலியாக இருந்து பாறாங்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் இந்நேரம் நம் தலை நசுங்கிப் போயிருக்குமல்லவா?" என்று கேட்டார் முல்லா.

இளைஞன் தூக்கிவாரிப் போட்டு எழுந்தான். "நீங்கள் கூறுவது உண்மைதான்" என்றான்.

"தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த மரத்தின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வருவார்கள் என்று கடவுளுக்குத் தெரியும். அதனால்தான் கடவுள் நிழல் தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார்" என்றார் முல்லா விளக்கமாக.

"ஐயா! தாங்கள் யார் என்று தெரியவில்லையே? பெரிய மகான் போல் பேசுகிறீர்களே" என்று பயபக்தியுடன் கேட்டான் இளைஞன்.

"கடவுள் மகான்களைப் படைப்பதில்லை. மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் படைக்கிறார். நானும் உங்களைப் போல ஒரு மனிதன்தான்" என்றார் முல்லா.

"இப்பொழுது புரிந்துகொண்டேன் ஐயா!" என்று கூறி முல்லாவிடம் விடைபெற்றுச் சென்றான் இளைஞன்.

About The Author