முல்லாவும் தளபதியும்

மன்னர் தன் அன்பின் வெளிப்பாடாக முல்லாவுக்கு ஒரு வீட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார்.அதே போல், அந்த வீட்டின் மாடிப் பகுதியிலிருந்த வீட்டை மன்னர் தன் படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடிக் கல் உரலில் மாவு இடிப்பார். அந்தச் சமயத்தில், வீடே அதிரும். இடியோசை மாதிரி சத்தமும் கேட்கும். கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்குப் பெரிய தொந்தரவாக இருக்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து, கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்குமாறு அவர் மனைவிக்குச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

ஒரு முறை அப்படிச் சொன்னபோது படைத் தளபதிக்குக் கோபம் வந்து விட்டது. "இதோ பாருங்கள் முல்லா! இது மன்னர் எனக்காக அளித்த வீடு. எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்?", என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாரையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

சத்தம் கேட்டு ஓடி வந்து, மாடியில் இருந்து கீழே எட்டிப் பார்த்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று படைத் தளபதி முல்லாவிடம் கேட்டார்.

"கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாகக் கட்டத் தீர்மானித்திருக்கிறேன்" என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி, "என்னய்யா, முட்டாளாக இருக்கிறீர்களே! கீழ் வீடு முழுவதையும் இடித்தால் மேல்  வீடு என்ன ஆகும் என்று யோசித்தீர்களா?" என்று கோபத்தோடு கேட்டார்.

"மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இது மன்னர் எனக்காக அளித்த வீடு. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை" என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப் போன படைத்தளபதி தன் தவற்றை உணர்ந்து முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

"நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே" என்றார் தளபதி.

"நான் எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்தான்" என்று கூறினார் முல்லா.

படைத்தளபதி தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அன்றிலிருந்து முல்லாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரானார்.

About The Author