முல்லாவும் விருதும்

அரசரிடம் முல்லாவுக்கு ஏற்பட்டு வரும் புகழையும் மதிப்பையும் கண்டு பொறாமை பிடித்த சிலர் அரசவையில் இருந்தார்கள்.
அவர்கள் மன்னரிடம் முல்லா பற்றி ஏதாவது கோள் சொல்லி அவர் மதிப்பைக் குறைப்பதிலேயே கண்ணாக இருந்தனர்.
ஒருநாள், மன்னர் முல்லாவைக் கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்கத் தீர்மானித்து அவையினர் கருத்தைக் கேட்டார்.

முல்லாவைப் பிடிக்காதவர்கள் எழுந்து, முல்லா எந்த வகையிலும் அறிவாளி இல்லை; சாமானிய மக்கள் செய்யக்கூடிய செயல்களைத்தான் அவரும் செய்து வருகிறார்; சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை; அதனால், அவர் சிறப்புச் செய்வதற்கு எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை என்று ஒரே குரலில் தெரிவித்தனர்.
அந்தச் சமயம் முல்லா அரசவையில் இல்லை. அவையை நோக்கி வந்து கொண்டிருந்த அவருக்கு எதிர்ப்பாளர்களின் பேச்சு காதில் விழுந்தது.

உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி, கால்களாலும் கைகளாலும், ஒரு விலங்கு போல நடந்து அவைக்குள் நுழைந்தார். அதைக் கண்டு அவையில் இருந்தவர்கள் திகைத்தனர்.’

மன்னர் வியப்புத் தோன்ற சிரித்தவாறு, "என்ன, முல்லா அவர்களே! ஏதோ விலங்கு போல நான்கு கால்களால் நடந்து வருகிறீரே! உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று வினவினார்.

முல்லா எழுந்து மன்னரை வணங்கி, "மன்னர் பெருமானே! நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரணச் செயல் எதையும் செய்யவில்லை என்று என் நண்பர்கள் சிலருக்கு வருத்தம். அதனால்தான் மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள், இல்லையா?" என்றார்.

முல்லாவின் எதிரிகளான பொறாமைக்காரர்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவாற்றலைக் கண்டு மகிழ்ந்து, பல பரிசுகளையும் அந்த விருதையும் அளித்து மகிழ்ந்தார்.

About The Author