முல்லாவும் ரகசியமும்

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.

விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது, அவரை நோக்கி, "முல்லா அவர்களே! தாங்கள் பலவிதங்களிலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர்கள். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?" என்று கேட்டார்.

"நீங்கள் சொல்வது உண்மைதான். உண்மையிலேயே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது. ஆனால், அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே" என்று முல்லா சொன்னார்.

"முல்லா அவர்களே! என்னிடம் எந்த ரகசியத்தைச் சொன்னாலும் அது என்னை விட்டுத் தாண்டி வெளியே போகாது. தயவு செய்து அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள்" என்று நண்பர் வேண்டிக் கொண்டார்.

"நான் என் வெற்றியின் ரகசியத்தை உங்களிடம் கூறினால் யாரிடமும் கூற மாட்டீர்களே?" என்று முல்லா கேட்டார்.

"என்னை நம்பலாம்! என்னிடமிருந்து ரகசியம் ஒருபோதும் வெளியே போகாது" என்று உறுதியாகக் கூறினார் நண்பர்.

"யாராவது உம்மிடம் வந்து ஏராளமான பணம் தருகிறேன் என்று ஆசை காட்டினால் என்ன செய்வீர்?" என்று கேட்டார் முல்லா.

"கோடிப் பொன் தருவதாக ஆசை காட்டினால் கூட யாரிடமும் அதைப் பற்றிக் கூற மாட்டேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார் நண்பர்.

"அப்படியானால் நம்பி உங்களிடம் ரகசியத்தைக் கூறலாம். மறந்துகூட இதைப் பற்றிப் பிறரிடம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பலாம் இல்லையா?" என்று மீண்டும் கேட்டார் முல்லா.

"என்னை முழு அளவுக்கு நீங்கள் நம்பலாம்" என்று வாக்குறுதி கொடுக்கும் விதத்தில் நண்பர் சொன்னார். அதைக் கேட்ட முல்லா, "சரிதான். உங்களை நம்புகிறேன். நீங்கள் ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான். ஆனால், நான் என் வெற்றிக்கான ரகசியத்தைக் உங்களிடம் கூறினால், நான் அதைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் என ஆகிவிடுமே! அதனால் என் அன்பு நண்பரே! நான் ரகசியத்தை உமக்குக் கூறத் தயாராக இல்லை" எனக் கூறியவாறு முல்லா அந்த இடத்தை விட்டு அகன்றார்.

About The Author