அறிவியலும் தொழில் நுட்பமும் ( 21)

அணு ஆயுதங்களின் (nuclear weapons) முதல் பயன்பாடு:

இரண்டாம் உலகப் போரின் இறுதியில், அதாவது 1945ஆம் ஆண்டில், அணு ஆயுதங்கள் முதலில் பயன்படுத்தப்பட்டன. ஜப்பான் நாட்டில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி, அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதலை முதன் முதலாக நடத்தியது. இவ்விரு நகரங்களிலும் பல நூறாயிரம் மக்கள் அணுகுண்டு வீச்சினால் உயிரிழந்ததோடு உடலூனமும் உற்றனர்; இதற்கு முன் எப்போதும் கண்டறியாத பேரழிவை இவ்வுலகம் சந்தித்தது.

போரில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாது, உலக வரலாற்றிலேயே இது முக்கிய நிகழ்வாக விளங்கி வருகிறது. எனவே, அணுகுண்டு பேரைழிவை விளைவிக்கும் மிகப் பெரிய அபாயமாக இன்று உலக மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

கரீபியன் பகுதியான கியூபா தீவில் ரஷ்யா வெடிகுண்டு ஆயுதத்தளம் உருவாக்கியதை 1962ஆம் ஆண்டு அமெரிக்கா கண்டுபிடித்ததால், ஒரு நெருக்கடி நிலை உருவானது. பின்னர் ரஷ்யா இந்த ஆயுதங்களை விலக்கிக் கொள்ள முன்வந்ததை அடுத்து இரு வல்லரசுக்களுக்கும் இடையே நிகழவிருந்த அணு ஆயுதப்போர் ஒரு முடிவுக்கு வந்தது எனலாம்.

செர்னோபைல் பேரழிவு (Chernobyl disaster) நிகழ்ச்சி
:

ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள செர்னோபைல் அணுசக்தி நிலையத்தில் (nuclear power station) 1986ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25-26 தேதிகளில் பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்தது. அங்கிருந்த அணுசக்தி நிலையத்தில் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் தவறான பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள முயன்றனர். இதற்காக அணு உலையின் பாதுகாப்பு அமைப்பு மூடப்பட்டது; ஆனால் அணு உலையோ தொடர்ந்து ஆற்றலைப் பெற்று வந்ததோடு, அபாயநிலையையும் அடைந்தது. அணு உலையில் ஏற்பட்ட தொடர் வினைகளால் (chain reactions) மிகப் பெரிய வெடிப்பும் ஏராளமான அளவில் கதிர்வீச்சும் (radiation) நிகழ்ந்தன. மாசடைந்த விண்மேகங்கள் வாயிலாகக் கதிர்வீச்சு நிகழ்வு ரஷ்யா மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டது.

1970ஆம் ஆண்டு புவியின் நண்பர்கள் (Friends of Earth) மற்றும் பசுமை அமைதி (Green peace) போன்ற நிறுவனங்கள் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான பரப்புரையை மேற்கொள்ளத் துவங்கின. இப்பிரச்சினைகளில் அணு ஆயுதங்கள், மழைக்காடுகளின் (rainforests) அழிவு, நச்சுக் கழிவுகளின் (toxic wastes) குவியல் போன்றவையும் அடங்கியுள்ளன.

About The Author