ஆற்றில் ஒரு நேர்கோடு

இருபுறமும் நீளும் ஆற்றில்
தொலைதலுக்கு அஞ்சி
குறுக்கே கடந்து
அக்கரை அடைவேன்.

கால்தடங்கள் மட்டுமே
வழிந்தோடும் ஆற்றின்
தூரவெளியில்
எனக்கிணையாய் நகரும் புள்ளிகள்.
ஆற்றின் பரப்பு மிகப்பெரியது!

இரவில்
ஆணி அறைந்ததுபோல்
தூரவெளி நிலைத்துள்ளது.
ஆற்றின் பரப்பு
வெளிச்சம் அளவே.

ஆறு என்பது
மணலூறும் இடமாகவே
என் கற்பிதம்.
ஆற்றின் பயணம்
வலமிருந்து இடமா?
இடமிருந்து வலமா?
பார்த்ததில்லை.

எல்லையற்றுத் தெரியும் ஆற்றில்
எனக்குக் கிடைத்ததென்னவோ
ஒரு நேர்கோடுதான்.
‘அக்கரைக்குச் செல்
அலுவல் புரி
திரும்பி வா’

About The Author

4 Comments

Comments are closed.