கொலை கொலையா….

பெட்ரூமில் தொங்கிக் கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப் பிடிக்கும் திருகாணிகளை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக் கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்படி சாந்தினிதான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. இந்த வீடும் அந்தச் சொத்தில் அடக்கம்.

வீட்டில் யாரும் இல்லை. யாரும் வருவதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும். இதோ, இந்த ஸ்க்ரூவைத் தளர்த்தி, ஆன் செய்த ஒரு நிமிடத்திற்குள் விழுந்து விடுமாறு செட் செய்துவிட வேண்டும். மணி இப்போது 1. மதியம் 2 மணிக்குள் ஷாப்பிங் சென்ற சாந்தினி வந்துவிடுவாள். மதியமானால் சாப்பிட்டதும் ஒரு குட்டித் தூக்கம் போடுவது அவள் வழக்கம். வந்ததும் சாப்பிட்டுவிட்டு, ஃபேன் ஆன் செய்து விட்டுப் படுத்து விடுவாள்.

ஸ்க்ரூ லூசாகிவிட்ட ஃபேன், அடுத்த ஒரு நிமிடத்தில் சாந்தினியின் மேல் விழும். அதிக பளுவான கண்ணாடி விளக்குகள் பதித்த டுயல் ஃபேன் விழுந்ததும் கூர்மையான கண்ணாடிகளால் அவள் உடல் கிழிக்கப்பட்டு இறந்து விடுவாள். போன வாரம்தான் சரி செய்யப்பட்ட ஃபேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவள் இறந்தால், சொத்து கணாவனுக்குப் போகும் என்பதால் போலீஸின் முதல் சந்தேகம் ராகவ் மீதுதான் விழும். அவன் ஜெயிலுக்குச் சென்றதும் கார்டியன் என்கிற பெயரில் சொத்தை அனுபவிக்கலாம் என்பது வைத்தியின் திட்டம்.

எல்லாம் செய்தாகிவிட்டது. இனி அவள் வர வேண்டியதுதான். ஃபேன் போட வேண்டியதுதான். சாக வேண்டியதுதான். காத்திருந்தான் வைத்தி. சாந்தினியின் கார் சத்தம் கேட்கவே, அவள் வரும் நேரம், பேச்சுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவாறு தனது அறையில் பதுங்கினான்.

அவள் உள்ளே வரும் அரவம் கேட்டது. தொடர்ந்து பாத்ரூமில் தண்ணீர் சலசலப்பும், கிச்சனில் பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டன. அவள் முகம் கை கால் கழுவிவிட்டு சாப்பிடுகிறாள்.

சிறிது நேரம் கழித்து, அவள் பெட்ரூம் கதவுகள் சாத்தப்படும் ஓசை கேட்டது. வைத்தியை இனம் புரியாத ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. என்ன நடக்குமோ என்கிற ஆர்வமா, ஒரு உயிரை சாகடிக்கப் போகிற பதட்டமா தெரியவில்லை. காத்திருந்தான். திடீரென்று டெலிபோன் மணி அடிக்கும் சத்தம் கேட்டது.

அய்யோ! இந்த நேரம் பார்த்தா டெலிபோன் அடிக்கணும். ச்சே..!

டெலிபோன் அழைப்பின் மறுமுனையில், ராகவ் இடது கையில் இருந்த மொபைல் ஃபோனால் வீட்டு லாண்ட் லைனை அழைத்தபடி, வலது கையில் இன்னொரு ஃபோனால் சந்துருவுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

சந்துரு, தன் காதுகளில் மாட்டியிருந்த வயர்லஸ் சாதனத்தில் கேட்டுக் கொண்டே குழல் துப்பாக்கியால் மறைவாக நின்றபடி சாந்தினி வீட்டு டெலிஃபோன் ஸ்டாண்டை குறி வைத்துக் காத்திருந்தான்.

"சந்த்ரு, கன்ஃபர்ம்ட். அவ சிவப்புக் கலர்ல சுடிதார் போட்ருப்பா. வீட்ல இருக்குற ஒரே பொம்பளை அவதான். கால் வந்தா அவதான் எடுப்பா. டெலிஃபோன எடுத்ததும் போட்ரு".

ரிசீவரை மறுமுனையில் அவள் எடுக்கக் காத்துக் கொண்டே சந்துருவையும் காத்திருப்பில் வைத்திருந்தான். வீட்டில் இருப்பது சாந்தினியும் அவள் மாமாவும். சாந்தினி இருக்கும்போது, அவர் ஃபோன் எடுக்க மாட்டார். சாந்தினிதான் எடுப்பாள்.

சாந்தினியின் மாமா துப்பாக்கி சுடுதலில் கைதேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கைவசம் வைத்திருந்த தோட்டாக்களைத்தான் சந்துரு துப்பாக்கியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். ஃபாரென்ஸிக்கில் தோட்டாவிற்கான துப்பாக்கி வைத்தியினுடையது என்பது கண்டுபிடிக்கப்படும். சாந்தினி கொலையானால் நிச்சயம் மாட்டப் போவது அவள் மாமாதான். அதற்குப் பிறகு சொத்து முழுவதும் தனக்குத்தான் என்றெண்ணியபடியே பதட்டமாய்க் காத்திருந்தான் ராகவ்.

எட்டு முறை அலறிவிட்டு அமைதியானது ஃபோன். "இவள் எப்போதுமே இப்படித்தான். ஃபோன் அடித்தால் உடனே எடுக்கமாட்டாள்" என்று கறுவியபடியே மீண்டும் தன் வீட்டு லாண்ட் லைனை அழைத்தான் ராகவ்.

ரிஸீவர் எடுக்கப்பட்டது. உடனே சன்னமாய் சந்துருவுக்கு சிக்னல் கொடுத்தான். ஃபேன்சிக்காய் பொருத்தப்பட்ட வண்ணக் கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியைக் கிழித்து ஸைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி அமைதியாய் தன் வேலையைச் செய்தது.

தான் அனுபவிக்கப் போகும் ராஜ வாழ்க்கைக்குக் கடைசி முதலீடாய், மனைவி சாவுக்கு புரண்டு புரண்டு அழுது நடிக்க ஆயத்தமானவாறே தன் வீடு நோக்கி நடந்தான் ராகவ். வீட்டை நெருங்க நெருங்க பதட்டம் அதிகமானது. வீட்டுப் புல்வெளியைத் தாண்டி மதில் சுவரோரம் நின்று பக்கத்து வீட்டு மாமியிடம் கதைக்கும் பெண்ணைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது ராகவிற்கு. காரணம், அந்த பெண் சாந்தினி போலவே இருந்ததுதான். கிட்டப் போகப் போக ராகவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போலிருந்தது. அந்த பெண் சாந்தினியேதான்!

‘இவள் எப்படி உயிருடன்? ஃபோனில் சுட்டுவிட்டதாகச் சொன்னானே சந்த்ரு? பொய் சொல்லி விட்டானா? அடப்பாவி! அவள் இறந்ததை உறுதிப்படுத்தாமல் அவ்வளவு பெரிய தொகை கொடுத்துவிட்டோமே! அதற்குச் சாந்தினி கணக்கு கேட்டால் என்ன சொல்வது’ என்று பலவாறு யோசித்தபடியே வீட்டினுள் நுழைந்தான். வீடே அமைதியாயிருந்தது. வெயிலில் சென்று வந்தது புழுக்கமாயிருந்தது. சந்துரு ஏமாற்றியது கோபம் அளித்தது. வெறுப்பாய் ஃபேன் ஸ்விட்ச் தட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.

‘ச்சே! ஏமாற்றிவிட்டானே. அவனை என்ன செய்யலாம்? அய்யோ, அவனை இப்போது எங்கே போய்ப் பிடிப்பது? இவனை மாதிரி நாடோடிகளை எப்படிப் பிடிப்பது!’

வியர்வை வழிவது நிற்கவில்லை. நெற்றிப் புருவம் சுருங்க அப்போதுதான் கவனித்தான். ஃபேன் ஓடவில்லை. கரண்ட் இல்லை. ஏதோ தோன்ற, எழுந்து சென்று டெலிஃபோன் ஸ்டாண்டைப் பார்த்தவன் உறைந்தான். அங்கு வைத்தி ரத்தம் படிந்த சிவப்பு ஜிப்பாவில் மல்லாந்து இறந்து கிடந்தான்.

ராகவிற்குப் புரிந்துபோனது. தான் முதல் தடவை அழைத்தபோது, கரண்ட் போயிருந்திருக்க வேண்டும். காற்றோட்டத்திற்காக சாந்தினி வெளியில் வந்திருக்க வேண்டும். சாந்தினிக்குப் பதிலாக வைத்தி டெலிஃபோனை எடுத்திருக்க வேண்டும். ஃபேன்சி வண்ணக் கண்ணாடி வழியே, ஜிப்பாவில் வைத்தியை சாந்தினி என்று நினைத்து சந்துரு சுட்டிருக்க வேண்டும். நடந்ததை அவன் மனம் ஜீரணிக்கச் சிறிது நேரம் பிடித்தது. அதிர்ச்சி அவனை ஆட்கொள்ள அவனையுமறியாமல் பின்வாங்கி பெட்ரூமுக்கு அவன் வந்த போது க்ளக் என்ற சத்தத்துடன் ஃபேன் அவன் மீது விழுந்தது. ராகவ் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரம் துடித்துப் பின் மெல்ல அடங்கிப் போனான்.

கரண்ட் வந்து ஒரு நிமிடமாகியிருந்தது.

வாசலில் இவையேதும் அறியாமல் சாந்தினி, பக்கத்து வீட்டு மாமியிடம் கதைத்துக் கொண்டிருந்தாள்.

About The Author

3 Comments

  1. I.SURESH

    கெடுவான் கேடு நினைப்பான்,
    இன்றைய உலகத்தவர்க்கு தேவையான கதை..
    வாழ்த்துக்கள் ராம் பிரசாத்…

  2. சதீஸ் கண்ணன்

    படித்தேன்…
    ரசித்தேன்…
    பாராட்டாமல் இருக்க முடியவில்லை…
    வாழ்த்துக்கள்….

Comments are closed.