வழி (2)

தயங்கியவாறே நிறுத்தி இவனைக் கூர்ந்து பார்த்தார் ராமானுஜம். நினைத்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி அவரிடம். இவரைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற ஆதங்கம் அவர் முகத்தில் வழிந்தது போலிருந்தது.

"நான் ஒண்ணும் போட மாட்டேன்னு சொல்லலியே ராமானுஜம்? செக்கிங் பார்த்துட்டுப் போடறேன்னு தானே சொன்னேன். வரி, சர்சார்ஜ், இதெல்லாம் கரெக்டா போட்டிருக்காங்களான்னு பார்க்க வேண்டாமா? பட்ஜெட்டை எகிறக் கூடாதுல்ல…? அதையாவது பார்க்க வேண்டாமா நான்? நாளைக்கு யார் பதில் சொல்றது?"

"நம்மளை ஒண்ணும் பைனட் பண்ணாது சார் எதுவும்… தைரியமா நீங்க போடலாம்… டோட்டல் எஸ்டிமேட்டே அந்தப் பிரிவுல தானே அப்ரூவ் ஆகுது. பிறகென்ன சார்? நம்ம இன்ஷியல் பண்றது அந்த வேலைகள் பதிவேட்டுல முடிஞ்சிடுச்சுங்கிறதைத் தான்… எல்லாத்தையும் எழுதித்தானே சார் நீட்டுறாங்க… பேசாமப் போட்டு விடுங்க சார்… செக்கைக் கிழிச்சு தொலையுதுன்னு அனுப்பி விடுங்க… இதிலெல்லாம் ரொம்ப உள்ளே போனிங்கன்னா பிறகு மன நிம்மதியே போயிடுமாக்கும்… அதெல்லாம் கெடக்கட்டும் சார்… நான் ஒண்ணு கேட்குறேன் அதுக்கு உண்மையா பதில் சொல்றீங்களா…?"

"என்ன ராமானுஜம், பேச்சு ஒரு மாதிரியாயிருக்கு?"

"ஐய்யய்யோ… தப்பா நினைச்சிக்கிடாதீங்க… உங்களோட சகஜமான உரிமையுள்ளவன்ங்கிற முறைலதான்…"

"என்ன சொல்லுங்க… ?"

"உண்மையிலே இதெல்லாம் சரியா ஒர்க் அவுட் பண்ணியிருக்காங்களான்னு பார்த்து உறுதி செய்யத்தான் நீங்க சரி பார்க்கிறீங்களா, இல்ல வேற எதுக்காச்சுமா?"

அதிர்ந்து தான் போனான் சத்யன். இருந்தாலும் அவர் கேட்ட தோரணையில் அவர் மூலம் நிறைய விஷயங்கள் வெளிவரும்போல் தோன்றியது இவனுக்கு.

ராமானுஜம் ரொம்பவும் சகஜமானவர். ஆபீசின் எல்லாப் பிரிவுகளுக்கும் வேண்டப்பட்டவர். அதனால் தான் அவரை கணக்குப் பிரிவிலேயே போட்டிருந்தான் இவன். அவரை வெறுக்க மாட்டார்கள், ஒதுக்கமாட்டார்கள். தன்னிடமும் மரியாதையாய்த் தான் இருக்கிறார். அதனால் பதில் மரியாதை என்றும் அவருக்கு உண்டு.

"உங்களோட இத்தனை நாள் பழகினவன்ங்கிற முறைலதான் கேட்கறேன். வேறே எதுக்காச்சும்னா வெளிப்படையா சொல்லிக் கேட்டிருங்க. தப்பில்லே. அதைத்தான் அவங்களும் விரும்புவாங்க… எங்களால இவ்வளவு தான் முடியும்னு கொடுத்திட்டுப் போயிடுவாங்க… அதில்லாம வெட்டியா இருந்தீங்கன்னா அனாவசியமா பழி உங்க மேலே தான் விழும். நாளைக்கு ஒர்க் டயத்துக்கு முடியலைன்னா இதையெல்லாம் காரணமாச் சொல்லுவாங்க… புகார் ஆயிடும்… பார்த்துக்குங்க…"

இவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். ராமானுஜம் தன்னைவிட ரொம்பவும் அனுபவப்பட்டவராய்ப் பேசுகிறார். இத்தனை நாள் பழகியும், என்னைப் பற்றித் தெரிந்து, மீண்டும் இந்தச் சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்? மனித மனம் சபலத்திற்கு ஆட்பட்டது என்று நினைக்கிறாரோ?

"உங்க மனசை நீங்களே தெளிவாக் கேட்டுக்குங்க சார்… கூச்சப்படாதீங்க… உங்களுக்கு நீங்களே பொய்யா இருக்காதீங்க… உங்களுக்கு வர்ற பங்கை வாங்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா… இல்ல வாங்கணும்னு நினைக்கிறீங்களா? இதுவா அல்லது அதுவா… ? சரியா முடிவு பண்ணிக்குங்க… ஏன்னா காலம் காலமா இந்தப் பழக்கம் உண்டு இங்கே… புதுசில்லே. நீங்க வேணாம்னா உங்க பங்கை வேறே யாராவது வாங்கிக்கப் போறாங்க. அவ்வளவு தான்… அல்லது உங்க பேரை மிஸ் யூஸ் பண்ணி வாங்கிக்கிடுவாங்க… அதை நீங்க தடுக்க முடியாது. அது பற்றி உங்களுக்குத் தெரியவும் தெரியாது…"

"நீங்க என்ன சொல்றீங்க ராமானுஜம்?" – பரிதாபமாய்க் கேட்டான். அவரது அனுபவத்தின் முன் தான் ஒன்றும் இல்லாதது போல் தோன்றியது அந்த நிமிடத்தில்.

"இல்ல சார்… நிறையப் பேருக்கு வாங்கணும்னு தோணும். ஆனா மனசுல பயம் வந்திடும். ஏதாச்சும் பிரச்சனை ஆயிடக் கூடாதேன்னு. இன்னும் சிலபேர் கிடைக்கிறதை வாங்கிக்கிடுவோம்னு நினைப்பாங்க… ஏன் விடணும்னு ஒரு நினைப்பிருக்கும். ஆனா தான் வாங்குறது மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுங்கிற எண்ணமிருக்கும். அதாவது கௌரவத்தை இழக்க விரும்பாத மனசு. அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு அர்த்தம். வாங்கறதுன்னு ஆயிட்டாலே அது எப்படியாவது தெரிஞ்சு போயிடும்னு வச்சிக்குங்க… கீதைல சொல்ற மாதிரி பாவ காரியங்கள் என்னைக்காவது ஒரு நாள் எப்படியாவது வெளில வந்து தான் தீரும்ங்கிறது தான் சத்யம். ஆனா அதையெல்லாம் பத்தி இப்ப யாரு நினைக்கிறா? இன்னும் சில பேர் இருக்காங்க… அவுங்க இந்த விஷயத்தையே ஜனநாயகப்படுத்திடுவாங்க… வர்றதை எல்லாருக்கும் சந்தோஷமாய் பிரிச்சிக் கொடுத்திடுவாங்க. தன் பங்கையும் கூட… அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்… என் கூட திருச்சில ஒருத்தர் ஒர்க் பண்ணினார். அவர் பெயர் கூட வெங்கடேசன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி ஏதேனும் எண்ணம் உண்டா சொல்லுங்க… அதுக்கு நான் கூட ஒத்தாசை பண்றேன்."

வாய்மூடி மௌனியாய்க் கேட்டுக் கொண்டிருந்தான் சத்யன். இதென்ன? ஒரு வேண்டாத விஷயத்தைப் போய் இத்தனை விலாவாரியாய் விவரித்துக் கொண்டு? சே.

"ஒண்ணும் குழம்பிக்க வேண்டாம் சார்… வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அவ்வளவு தான்… டேக் இட் ஈஸி…"

சத்யன் அமைதியாய் இருந்தான். அவரே மேற்கொண்டு பேசட்டும் என்றிருந்தது அவனுக்கு. கணக்காளர் மிகக் கணக்காகத் தான் பேசுகிறார். கணக்காகப் பேசுகிறாரா அல்லது மிகக் கணக்காய் காயை நகர்த்துகிறாரா? என்னைத் தெளிய வைக்கிறேன் என்னும் சாக்கில் நைஸாக உள்ளே இழுக்கிறாரோ? இப்போது அவர் மேலேயே சந்தேகம் வந்தது.

"எதுக்குச் சொல்றேன்னா சார்… நீங்க தப்பா நினைக்கப்படாது. இன்றைய சூழ்நிலை அப்படி. எதெல்லாம் நாம தப்புன்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நடைமுறைன்னு ஆயிடுத்து. குடிக்கிறமாதிரின்னு வச்சிக்குங்களேன். டீக்கடைக்குப் போகிற மாதிரி தினமும் அங்க போறாங்க இல்லியா? ஃபார்மாலிட்டின்னு இப்ப அதுக்குப் பேர் சொல்றாங்க… செய்ற தப்புக்கு, தப்பு பண்றவங்க கொடுத்த பேரு அது. ஆனா தப்புன்னு எங்கயும் அதைச் சொல்லவே மாட்டாங்க… அவுங்க வாயிலிருந்து அது மட்டும் வரவே வராது. அது அவச்சொல். தப்பு தப்புன்னு நாம தான் ஒத்த மரத்துக் கொரங்கு கண்ணாயிருக்கிறவன். அங்கங்கே தூவ வேண்டியதைக் கணக்கா தூவிட்டு காரிய சித்தி பண்ணிட்டு போயிட்டேயிருப்பான்… இவன் இங்கே ‘பே…’ன்னு வாயைப் பிளந்திட்டு வெறுமே நின்னிட்டிருக்க வேண்டிதான். என்னுடைய சர்வீஸ்ல எவ்ளவோ பார்த்தாச்சு. உங்களுக்கும் இந்த அனுபவம் கிட்டியிருக்கும் தான்… ஆனாலும் உங்ககிட்டே சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்…"

முடிந்தது என்பது போல் பேச்சை நிறுத்திவிட்டு, இவன் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு ரோட்டை கிராஸ் பண்ணுவதில் கவனமானார் ராமானுஜம்.

சூடான டீ மனதுக்கும், உடம்புக்கும் இதமாய் இருந்தது. தெளிந்த குளத்தில் கல்லெறிந்து குழப்பிவிட்டாரா? அல்லது கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனிக்கிறாரா? இவனுக்கே இவன் இருப்பு புரியவில்லை.

அந்த நீண்ட அமைதியை ராமானுஜமே குலைத்தார் மீண்டும்.

"என்ன சார், சங்கடப்படுத்திட்டேனா…? ரொம்ப உரிமை எடுத்திட்டு உங்களுக்கே அட்வைஸ் பண்ணிட்டேனோ? ஏதோ சொல்லிடணும்னு தோணிச்சு. நேத்திலேர்ந்து ஒரே அரிப்பு. இதுவரைக்கும் யார்கிட்டேயும் இவ்வளவு விலாவாரியா டிஸ்கஸ் பண்ணினதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஏன்னா நான் பழகினவங்களெல்லாம் ரொம்பப் ப்ராக்டிகலானவங்க… உலக நடைமுறைகளோட, அதன் போக்குல, லாவகமா, ரொம்ப இயல்பா கலந்துடறவங்க… பிராக்டிகல்னு தான் சொன்னேன். நேர்மையானவங்கன்னு சொல்லலை. அந்த வார்த்தை இப்போ ரொம்ப பழசு… அநாவசியமான, அநாகரிகமான வார்த்தைன்னு கூடச் சொல்லலாம். உங்களை நான் வித்தியாசமானவரா மனசுல வச்சிருந்தேன். அதான் சொன்னேன். இத்தனை உரிமை எடுத்துக்கிட்டது கூட அதுனால தான்… உங்களுடைய ட்ரீட்மென்ட் ரொம்பக் கடுமையாத் தெரிஞ்சது எனக்கு. அதனால சுதாரிச்சேன். வெளியூர்ல வந்து தங்கியிருக்கீங்க… தனியா வேறு இருக்கீங்க… பயமில்லாமத் தெளிவாப் பேசுறீங்க… உங்க வேலைகள்ல ஒரு தீர்மானம் இருக்கு… அது உங்களை வழி நடத்துது… ஆனா அதுவே உங்களுக்கு எதிராத் திரும்பிடுமோன்னு நான் பயப்படுறேன்… எது உங்க பலம்னு நீங்க நினைக்கிறீங்களோ அதுதான் உங்க பலவீனம்னு எனக்குத் தோணுது… சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்… இப்பத்தான் என் மனசு நிம்மதி ஆச்சு…"

நீண்ட பெருமூச்சோடு பேச்சை நிறுத்தினார் ராமானுஜம். உலகாயத அனுபவங்களையெல்லாம் கரைத்துக் குடித்தது போல் இருந்த அவரது பேச்சு, சத்யனை நிரம்ப சிந்திக்க வைத்தது.

என்ன தான் நடைமுறைகள் மாறியிருந்தாலும், அடிப்படை விழுமியங்கள் மாறி விடுமா என்ன? அவைகளுக்கு அழிவுண்டா? அவற்றை அசைத்துப் பார்க்கலாமே தவிர வேரோடு பிடுங்கி எறிய முடியுமா? எங்கெங்கோ சுற்றினாலும் கடைசியில் அங்கு வந்து தானே சங்கமமாகிட வேண்டும்? அத்தனையையும் அது உள்வாங்கிக் கொண்டு தன்னை மேலும் புனிதப் படுத்திக் கொள்ளத் தான் செய்யும். அந்த நாளும் ஒரு நாள் வரத்தான் செய்யும்… நின்று கொண்டிருக்கும் அந்த ஸ்தலத்தை விட்டு, தான் இடம் பெயர முடியுமா? மேட்டில் நிற்பவன் பள்ளத்தில் விழலாமா? எல்லாரும் பள்ளத்திலேயே கிடக்கிறார்கள் என்பதால் அந்த இடம் புனிதமாகிவிடுமா?

மீண்டும் இருக்கையில் போய் அமர்ந்த போது அந்த ஆள் இல்லை என்பது மனதுக்கு மிகவும் நிம்மதியாயிருந்தது இவனுக்கு. தன்னுடைய இயல்புக்கு ஏற்றாற் போல் தனக்கு ஒரு அலுவலகம் வாய்க்காதது எப்பொழுதும் சிக்கலாகவே இருந்திருக்கிறது என்று நினைத்தான்.

தான் இதுவரை இருந்த அலுவலகங்களிலெல்லாம் இந்தப் பிரச்சனை தன்னைத் தொடர்ந்து வந்திருப்பதையும், அதற்காகவே மாறி மாறி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதையும் எண்ணிப் பார்த்துக் கொண்டான்.

பதவி உயர்வு வேண்டாம் என்று சொல்லி உள்ளூரிலேயே பேசாமல் குப்பையைக் கொட்டிக் கொண்டிருக்கலாமோ என்று எப்போதும் போல் அப்பொழுதும் தோன்றியது.

பதவி உயர்வில் மேலே செல்லச் செல்ல பொறுப்புகள் அதிகமாவதைப் போலவே சிக்கல்களும் பெருகுகின்றனவே? இவற்றிலிருந்து தன்னளவில் ஒதுங்கியிருக்கலாம் என்றால், கடமையைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியாத சூழல் அல்லவா நிலவுகிறது?

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க நினைப்பவன் கூட அப்படியே தன்னைக் கொண்டு செலுத்த முடியவில்லையே? தன்னைப் போல் இருப்பவர்களெல்லாம் இப்படி நாள்தோறும் ஏதாவதொன்றிற்கு அவதிப்பட்டுக்கொண்டு மன உளைச்சலோடு திரிய வேண்டியதுதானா? தவறு செய்பவர்களுக்கல்லவா மன உளைச்சலும், நிம்மதியும் குலைய வேண்டும்? இங்கே மாறுபாடாய் அல்லவா திகழ்கிறது…

யோசிக்க யோசிக்க சத்யனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.

இருப்பது வெளியூர் அதில் எங்கிருந்தால் என்ன? வெறுமே நிர்வாகம், நடைமுறை என்கிற அளவில் மட்டும் பணியில் ஐக்கியமாகி விடுவது போல் தனக்குத் தோதாய் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வெளியேறி விட்டால் என்ன? தன்னைப் போன்றவர்களின் இடம் அப்படித்தானே அமையும்?

தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான் சத்யன். ராமானுஜத்தோடான உரையாடல் ஒரு சரியான வழிக்குத் தான் தன்னைத் திருப்பி விட்டிருக்கிறது என்பதாக உணர்ந்து திருப்தியடைய ஆரம்பித்தான்.

ஒரு நீண்ட விடுமுறை இடைவெளிக்குப் பின் அன்று அவன் அலுவலகம் வந்த போது, அவன் இருக்கையில், அவனின் முதல் பார்வையில், அது அவனை வரவேற்றது.

தனக்கான இடத்தைத் தானே தேர்வு செய்து அடைந்திட வேண்டிய அவசியம் கூட இல்லையென்பது போல், அது அந்த அலுவலகத் தலைமையாலேயே தன் முயற்சியில் பெற்று வைத்திருந்த சென்னைத் தலைமையகத்துக்கான மாறுதல் ஆணை.

(முடிந்தது)

About The Author