கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நல்லவருக்கு நாமமா?

ராபர்ட் டிவின்ஜென்ஜோ என்ற புகழ் வாய்ந்த கால்ஃப் விளையாட்டு வீரருக்கு ஒரு பெரிய விருதுத் தொகை கிடைத்தது. அந்தப் பரிசுத் தொகையுடன் அவர் வீட்டிற்குச் செல்ல காரில் ஏறுகையில், ஏழ்மைக் கோலத்தில் இருந்த ஓர் இளம் பெண் அவரை அணுகி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு பெரிதாக அழத் தொடங்கினாள். "என் குழந்தை மிகவும் உடல் நலமில்லாமல் வாழ்வுக்கும் மரணத்திற்கும் போராடிக் கொண்டிருக்கிறாள். மருத்துவச் செலவிற்கு என்னிடம் எதுவுமே இல்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று தீனமாகச் சொன்னாள். அதைக் கேட்டு மிகவும் மனமுருகிய டிவின், தான் பரிசு பெற்ற பணத்தின் அளவுக்கு அப்படியே ஒரு காசோலையைக் கொடுத்தார்.

அடுத்த வாரம் அவர் தன் சில நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். "நீங்கள் போன வாரம் ஒரு பெண்ணுக்கு அவள் சொன்ன சோகக் கதையைக் கேட்டு ஒரு பெரிய தொகையை கொடுத்தீர்களே! நன்றாக ஏமாந்து போனீர்கள். அவள் ஒரு பெரிய ஏமாற்றுக்காரி. அவளுக்கு எந்தக் குழந்தையுமே கிடையாது. இன்னும் அவளுக்குத் திருமணமே ஆகவில்லை" என்று சற்றுக் கேலியாகவே சொன்னார்.

ராபர்ட் அக்கறையாகக் கேட்டார். "அப்போது உணமையிலேயே ஒரு குழந்தையும் சாகும் தறுவாயில் இல்லைதானே" என்று.

நண்பர், ஆம் என்றதும் அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார். "இந்த வாரத்தில் நான் கேட்ட மிக நல்ல சேதி இதுதான். ஒரு குழந்தை இறந்துவிடப் போகிறதே என்ற கவலையிலே இருந்தேன், நல்ல வேளை!"

ராபர்ட் சரியான ஏமாளி என்பது நண்பரின் பார்வை. ஆனால் ராபர்ட்டுக்கு தான் ஏமாற்றப்பட்டோம் என்ற கெட்ட செய்தியைவிட உண்மையில் எந்தக் குழந்தையும் உயிருக்குத் துடிக்கவில்லை என்ற நல்ல செய்திதான் முக்கியமாகத் தெரிந்தது. அவர் நல்லவரா அல்லது ஏமாந்தவரா? (நாயகன் பாணியில்!)

விளையும் பயிர்

உங்கள் குழந்தை ஒரு வருங்கால விஞ்ஞானியா? கீழ்க்கண்ட அடையாளங்கள் இருக்கிறதா என்று கவனியுங்கள் (இந்தக் கேள்விகள் ஆண், பெண் குழந்தைகளுக்குப் பொதுவானதே!)

எந்தப் பொருளைக் கண்டாலும் அதை அக்கு வேறாக ஆணி வேறாக புரட்டி எடுக்கிறானா?
அவனுடைய கேள்விகள் பாதிக்கு மேல் ‘ஏன்’ என்றே துவங்குகிறதா?
சாதாரணமாக மற்ற சிறுவர் ரசிக்கும் கதைகளை வெறும் வேடிக்கையென்று ஒதுக்கி விடுகிறானா?
இயற்கைக் காட்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறானா?
அவ்வப்போது சற்று மறதியுடன் இருப்பதுபோல் தோன்றுகிறானா?
அவன் செய்கைகள் அவ்வப்போது உங்களை ஆச்சரியப்படுத்துகின்றனவா?
சில சமயம் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறீர்களா?

இந்த ஏழு கேள்விகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் நீங்கள் பெருமை அடையலாம், உங்கள் பிள்ளை ஒரு ஐன்ஸ்டீனாகவோ அல்லது மேரி க்யூரியாகவோ மலரப் போகிறது. (ஒரு விளம்பரத்தில் படித்தது)

நாலு வகைக் குதிரை

குதிரைகளில் நாலு வகை உண்டாம்.
1. சாட்டையின் நிழலைப் பார்த்தாலே ஓடத் தொடங்குவது.
2. சாட்டையின் சப்தத்தைக் கேட்டால் ஓடத் தொடங்குவது
3. தனது தோலில் சாட்டை சற்று பட்டதும் ஓடத் தொடங்குவது
4. சாட்டையால் அடிக்கப்பட்டு அதன் வலி தெரிந்ததும்தான் ஓடத் தொடங்குவது

மனிதர்கள் கூட அப்படித்தான்! செய்ய வேண்டிய கடமைகளை, பணிகளை உடனுக்குடன் அவ்வப்போது உடனே செய்து முடித்துவிடும் உணர்வு உடையவர்கள் ஒருவகை! சவுக்கடி பெற்றால்தான் ஓடும் குதிரைபோல எதையும் கடைசி நிமிஷம் வரை – இனி ஒத்திப் போட முடியாது என்ற கட்டாய நிலைமை வரும் வரை – முயற்சியிலேயே இறங்காதவர்கள் என்று ஒருவகை.
(The fine print of life- P.S.Wasu)

மதத்தில் மறைந்தது மாமத யானை

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வைணவக் கோவிலில் ஒரு யானைக்கு தென்கலை நாமம் இடுவதா அல்லது வடகலை நாமம் இடுவதா என்ற பிரச்சினை பெரிதாக, நீதிமன்றம் மூன்று மாதத்திற்கு வடகலை நாமமும் மூன்று மாதங்களுக்கு தென்கலை நாமமும் மாறி மாறி இடலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

சில மாதங்களுக்குப் பின்பு அந்த யானை எங்கோ ஓடிவிட்டது. அப்போது பலரும் அந்த யானை மதம் பிடித்ததால் ஓடி விட்டது என்றார்கள். அப்போது வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் சொன்னார், "அந்த யானை மதம் (வெறி) பிடித்ததால் ஓடவில்லை. மதம் பிடிக்காததால்தான் ஓடிவிட்டது" என்றார், சிலேடையாக!

இப்படி ஒரு திருப்பாவை!

மதம் என்றதும் இன்னொரு நல்ல விஷயம் நினைவுக்கு வருகிறது. கடந்த 24 ஆண்டுகளாக உத்திரப் பிரதேசம் அலிகஞ்ச் என்ற நகரத்தில் ரம்ஜான் மாதத்தில் நோன்பு அனுசரிக்கும் முஸ்லீம் அன்பர்களை இரவு இரண்டரை மணிக்கு தவறாமல் எழுப்பி விடுகிறார் பராத்திலால் குப்தா என்ற இந்து நண்பர்.

ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம் நோன்பு காக்கும் முஸ்லீம்கள் விடியலில் விழிக்க வேண்டும். இல்லையெனில் நோன்பின் முழுப் பலனும் கிட்டாமல் போய்விடும். அன்பர்களுக்கு நோன்பின் முழுப் பலனும் கிடைக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார் பராதிலால் குப்தா.

"நோன்பு தொடங்க வாங்க" என்ற கோஷத்துடன் முஸ்லீம் இல்லங்களுக்குச் சென்று அன்புடன் அவர்களை அழைக்கிறார் இவர். மத வேறுபாடுகள் என்ற விஷ வித்துக்கள் எதுவுமே மனதில் இல்லாமல் இந்தப் பணியை செய்து வரும் இவருக்கு செல்லப் பெயர் பராத்தி பாபா!

(நன்றி : தினப் பத்திரிகை செய்திகள்)

இது நாயமா?

அரிய வகையான ஒரு வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபாய் செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி. ‘வாங்’ என்ற கோடீஸ்வரப் பெண்மணியும் அவர் நண்பரும் ஒரிஜினல் திபெத்திய வேட்டை நாய் வேண்டுமென அலைந்து திரிந்தார்களாம். கடைசியில் ஒருவழியாக திபெத்தின் ‘குயிங்காய்’ மாவட்டத்தில் ஒரு பெண்மணியிடம் அந்த நாய் இருப்பது அவருக்குத் தெரிந்து, 18 மாத வயது ’யாங்ட்ஸ்’ என்ற அந்த நாயோடு திரும்பினார்கள்.

அந்த நாயை வரவேற்க ஏர்போர்ட்டில் 30 கருப்பு நிற மெர்சிடிஸ் – பென்ஸ் கார்கள் வந்து நிற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் வாங். விமானத்திலிருந்து கார் வரை ‘யாங்ட்ஸ்’க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு. "தங்கத்துக்குக் கூட விலை உண்டு. என் செல்லத்துக்கு விலையே கிடையாது" என்று ‘யாங்ட்சை’ கொஞ்சி மகிழ்கிறார் வாங். சீனாவில் கோடீஸ்வர கலாசாரம் இப்படிப் பெருகி வருகிறதாம். (தினமலர் செய்தி)

ஜிரிக்காத ஜோக்

கல்லூரி வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு ஜோக் சொன்னார். அப்போது சில மாணவர்கள், "இந்த ஜோக்கை ஒரு மாதம் முன்பே ஒரு தரம் சொல்லி விட்டீர்கள்" என்றார்கள் கேலியாக!

பேராசிரியர் அசரவில்லை. "அப்படியானால் போனமுறை சிரித்தவர்கள் இப்போது சிரிக்க வேண்டாம்" என்றார் சாவதானமாக.

அப்படிச் சொன்னார் அசோக மித்ரன்

"எந்தப் பெரிய பிரமுகர் காலமானாலும் என் அந்தரங்க துக்கத்துடன் ஒரு பயமும் வந்துவிடுகிறது. உடனே மிக நெருங்கிய பத்திரிகை ஆசிரியர்கள் அஞ்சலிக் கட்டுரை கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் வந்து விடுகிறது. எங்கோ யாரோ இறுதி மூச்சு விட்டால் இறுதி நாட்களில் இருக்கும் நான் சொற்களால் கண்ணீர் சிந்தி அழ வேண்டுமா? வேறு பல விஷயங்களில் சிறிதும் கவனம் செலுத்தாதபோது இந்த ஆசிரியர்கள் அஞ்சலிக் கட்டுரைகள் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த நிர்பந்தம்?" (அசோக மித்ரன் – அம்ருதா இதழில்.)

விரிவாக்கம்

COMPUTER என்பதன் விரிவாக்கத்தை இப்போதுதான் எங்கோ படித்தேன்.

Commmonly operated machine particularly used for technological and educational research என்பதுதானாம் அது.

(உங்களுக்கு முன்னாலேயே தெரிந்திருந்தால் ஆளை விடுங்கோ சாமி!)”

About The Author

4 Comments

  1. P.Balakrishnan

    நாமம் என்றால் பெயர். வைணவர்கள் திருமண் காப்பிட்டுக் கொள்வதும் நாமம்தான். பழமொழிகள் தவறான பொருளில் வழங்கப் படுவதுவது போல் பத்திரிகைகளில் நாமமும் நகைப்புக்குள்ளாக்கப் படுவதை வைணவ அமைப்புகள் கண்டித்துள்ளன.

  2. Rishi

    //அவர் நல்லவரா அல்லது ஏமாந்தவரா? //
    நல்ல(லா) ஏமாந்தவர்!!

  3. S.Gnanasambandan

    பல தரப்பட்ட செய்திகளைத் தந்துள்ளீர்கள்..தொடர்ந்து தருக.
    சொ.ஞானசம்பந்தன்

  4. S.Giridharan

    Tகெ மசினெ ந்கிச் இச் cஒம்புடெ தெ டட cஅல்லெட் cஒம்புடெர். ணொ சுச் ஒதெர் மெஅனிங்ச்

Comments are closed.