கிளியோபாட்ரா (51)

ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கி இருந்தது. வழக்கமாகக் காணப்படும் கலகலப்பு ஒட்டுமொத்தமாக காணாமல் போய் இருந்தது. பிரம்மாண்டமான அந்த கல்லறை மாடத்தின் ஓர் அறையில் முடங்கிக் கிடந்தாள். உயிரற்ற ஆண்டனியின் உடல் இன்னொரு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் ஆக்டேவியன் தூது அனுப்பிய, அவனது நண்பன் புரொக்கியூலிஸ் சில ரோமானிய வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். கொலைக்களக்கூடத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டு, மேல் மாடத்தில் தங்கியிருந்த கிளியோபாட்ராவை சந்திக்க வேண்டி குரல் கொடுத்தான்.

அவனது சப்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள் கிளியோபாட்ரா.

"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"என் பெயர் புரொக்கியூலிஸ். இளைய சீஸர் ஆக்டேவியனின் நண்பன்".

"எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?"

"இளைய சீஸர்தான் எங்களை அனுப்பி இருக்கிறார். தாங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் கேட்டறிய வந்திருக்கிறோம்".

"ஓ… அப்படியா? உங்களைப் பற்றி ஆண்டனி என்னிடம் ஏற்கனவே கூறி இருக்கிறார். ஆக்டேவியன் உள்ளிட்ட அவனது ஆதரவாளர்கள் யாரையும் நம்பாதே. ஆனால், புரோக்கியூலிஸை மட்டும் நம்பு. அவன் ரொம்ப நல்லவன் என்றும் கூறினார்".

"என்னைப் பற்றி ஆண்டனி அப்படியா கூறினார்? இதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம், அவர் உயிருடன் இல்லையே என்கிற சோகம் என்னைத் தாக்குகிறது…" என்ற புரொக்கியூலிஸின் கண்கள் லேசாகப் பனித்தன. தொடர்ந்து பேசினான். "நான் மேல் மாடத்திற்கு தங்களுடன் பேச வரலாமா?"

சிறிது யோசனைக்குப் பிறகு "சரி… வாருங்கள்" என்றாள்.
"உங்களுடனான இந்த சந்திப்பு நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். உங்கள் விருப்பத்தை ஒளிவு மறைவின்றி என்னிடம் கூறுங்கள். என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்ய காத்திருக்கிறேன்".

"உங்களது உதவும் மனப்பான்மைக்கு நன்றி. இதுவரை எல்லா ஏமாற்றங்களையும் சந்தித்தாகி விட்டது. இனிமேல் எந்த ஏமாற்றம் வந்தாலும் அது பற்றிக் கவலைப்படப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன். அதனால், உங்களது உதவி ஏதும் எனக்கு வேண்டாம்".

"இல்லை எகிப்து அரசியாரே! உங்களது பேச்சைப் பார்த்தால், இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை என்பதுபோல இருக்கிறது. தயவு செய்து அப்படி ஏதேனும் தவறான முடிவை எடுத்து விடாதீர்கள். உங்களது ஏதேனும் ஒரு ஆசையாவது கேளுங்கள். அதையாவது நான் நிறைவேற்றித் தருகிறேன்".

"சரி… நீங்கள் என் மீது அதிக அக்கறை கொண்டு சொல்வதால் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன். நான் பிச்சை எடுக்க வேண்டும் என்று உங்களது இளைய சீஸர் ஆசைப்பட்டால் இந்த எகிப்து அரசை பிச்சை கேட்பதாகப் போய்ச் சொல்லுங்கள். இப்போது அவர் வெற்றி கொண்டுள்ள இந்த எகிப்து என் மகனுக்கு வழங்கப்பட வேண்டும். இதுதான் என் ஆசை. இதைத் தவிர வேறு எதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை".

"என்னிடம் நம்பிக்கை வைத்து மனம் திறந்து பேசியதற்கு நன்றி. எங்கள் பேரரசர் சார்பில் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தருகிறேன். உங்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எதிரியாக வளர்ந்த ஆண்டனியை சிறைபிடிக்கத்தான் அவர் இங்கே படையெடுத்து வந்தார். இப்போது துரதிர்ஷ்டவசமாக ஆண்டனி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு விட்டதால் எங்களது இளைய சீஸரின் வேலை முடிந்து விட்டது. அவர் விரைவில் ரோமாபுரிக்குத் திரும்ப இருக்கிறார். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் சீஸருக்கு தகவல் அனுப்புங்கள். அவர் நிச்சயம் அதை உங்களுக்கு செய்து தருவார் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்…"

"நன்றி புரொக்கியூலிஸ்… மேலும், நான் உங்களது இளைய சீஸரையும் பார்க்க விருப்பப்படுவதாகவும் சொல்லுங்கள்" என்ற கிளியோபாட்ரா, தன் பரிதாப நிலையை எண்ணி மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியானாள்.
அவளிடம் விடைபெற்று புறப்படத் தயாரானான் புரொக்கியூலிஸ்.

அப்போது அவனுடன் வந்த ஆக்டேவியனின் இன்னொரு நண்பனான ரோமானியப் படைத்தளபதி காலசும், சில ரோமானிய வீரர்களும் சட்டென்று கிளியோபாட்ரா தங்கியிருந்த அந்த கொலைக்களக்கூடத்திற்குள் நுழைந்தனர்.
வந்தவர்கள் சூழ்ச்சி வலை பின்னி தங்களைக் கைது செய்து விட்டதாகக் கருதிய கிளியோபாட்ரா, அவர்களிடம் கைதாகி சித்ரவதைக்கு ஆளாவதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று முடிவெடுத்து, தனது வாளால் தன்னைத்தானே வெட்டித் தற்கொலை செய்ய முயன்றாள்.

இதை எதிர்பார்க்காத புரொக்கியூலிஸ் சட்டென்று பாய்ந்து அவளது கையைப் பிடித்து தற்கொலை முயற்சியைத் தடுத்தான். "என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? மாபெரும் எகிப்து தேசத்துக்கு அரசியான தாங்கள் எடுக்கும் முடிவா இது? இப்போது நாங்கள் உங்களைக் கைது செய்ய வரவில்லை. எங்களது இளைய சீஸரும் அப்படியொரு உத்தரவை எங்களுக்குப் பிறப்பிக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், உங்களது பாதுகாப்புக் கருதிதான் நானும் மற்ற ரோமானிய வீரர்களும் இங்கே வந்திருக்கிறோம்".

புரொக்கியூலிஸ் கொடுத்த விளக்கத்திற்குப் பிறகுதான் கிளியோபாட்ரா அமைதியானாள்.

தொடர்ந்து சில ரோமானிய வீரர்கள் மட்டும் கிளியோபாட்ராவின் பாதுகாப்புக்காக கொலைக்களக்கூடத்தின் முன்பு நின்று கொண்டனர். புரொக்கியூலிஸ் ஆக்டேவியனைப் பார்க்கப் புறப்பட்டான்.

ஆண்டனியின் மறைவுக்குப் பிறகு மரண பயத்தில் இருந்த கிளியோபாட்ராவுக்கு அன்றைய இரவு தூக்கம் வர மறுத்தது. நள்ளிரவு வரை வெகுநேரம் தனிமையில் விழித்து தவித்திருந்த அவள், ஒருகட்டத்தில் தன்னை அறியாமலேயே தூங்கிப் போனாள். ஆனால், அவளது கனவுலகம் மட்டும் பகலாக இருந்தது!

திடீரென்று ஏதோ பயங்கர சத்தம். கொலைக்களக்கூடத்தில் இருந்து வேகமாக ஓடி வந்து வெளியே எட்டிப் பார்த்தாள் கிளியோபாட்ரா. சற்றுத்தொலைவில் ஆக்டேவியனின் பிரம்மாண்ட ரோமானிய குதிரைப்படை ஆவேசத்தோடு வந்து கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் படை கொலைக்களக்கூடத்தை சூழ்ந்து கொண்டது.

சிறிதுநேரத்தில் கொலைக்களக் கூடத்திற்குள் நுழைந்த ரோமானியப் படை கிளியோபாட்ராவைக் கைது செய்தது. அவளது கைகளை இரும்புச் சங்கிலியைக் கொண்டு கட்டிய வீரர்கள் அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.
எகிப்து வீதிகள் வழியாக அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது அந்த துயரக் காட்சியை காண சகிக்க முடியாத பொதுமக்கள் தங்களையும் மீறி அழுதனர். சிலர் அந்த சோகக் காட்சியை காண சக்தியின்றி தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டனர்.

இதையெல்லாம் கவனித்த கிளியோபாட்ரா, கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இதே வீதிகளில் தங்கத்தேரில் தெய்வமாக பவனி வந்த அவள், இன்று கைதியாக சிறைபிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘இத்தகைய அவமானம் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் ஆண்டனி இறந்த அன்றே தற்கொலை செய்திருப்பேனே…’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

திடீரென்று அவள் கைகள் கட்டப்பட்டு இருந்த இரும்புச் சங்கிலியில் இணைக்கப்பட்டு இருந்த கயிறு அவளை வேகமாக இழுக்க ஆரம்பித்தது. ஆம்… அவளை குதிரையில் இருந்தபடி வீதிகளில் இழுத்துச் சென்ற ரோமானிய வீரர்கள் திடீரென்று குதிரையை வேகமாக விரட்டினர்.

குதிரையின் வேகத்திற்கு இணையாக ஓட முடியாத கிளியோபாட்ரா சில அடிகள் எடுத்து வைத்த நிலையிலேயே கால் இடறிக் கீழே விழுந்தாள். கூரிய கற்கள் நிறைந்த சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட கிளியோபாட்ராவின் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டன. அவளது ஆடையின் பல பகுதிகள் கிழிந்து தொங்கின.

அடுத்த சில நொடிகளிலேயே அவள் சுயநினைவை இழக்க ஆரம்பித்தாள். திடீரென்று ‘டமார்’ என்று பயங்கர சப்தம்! இழுத்துச் செல்லப்பட்ட கிளியோபாட்ரா சாலையோரம் இருந்த இரும்புத் தூணில் மோதினாள்.

‘அம்ம்…ம்மா…’ என்று கத்திக்கொண்டே கீழே விழுந்தாள்.

கண் விழித்தபோது படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்தாள்.
அதே வேகத்தில் கைகளைப் பார்த்தாள். அதில் இரும்புச் சங்கிலிகள் இல்லை. ஆடையைப் பார்த்தாள். அதில் எந்த கிழிசலும் இல்லை. உடம்பிலும் காயங்கள் இல்லை.

‘அப்படியானால்… நான் கண்டது எல்லாம் கனவா?’

கிளியோபாட்ரா தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அவளது இதயத் துடிப்பின் வேகம் மட்டும் இரு மடங்காகி இருந்தது.

(இன்னும் வருவாள்…)

About The Author